Subscribe Us

மர்மமான நோயால் பிறந்தது முதல் எதையும் சாப்பிடாமலே உயிர் வாழும் விநோத சிறுவன்



நவீன உலகில் எவ்வளவோ சாதனைகளை புரிந்து வரும் நாம், பல்வேறு சிக்கலான அமைப்புகளை கொண்ட மூளையை பற்றி இன்றளவும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. 

மனித உடலின் தலைமைச் செயலகமாகக் கருதப்படும் மூளையே, இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல், உண்ணும் உணவுகளை செரிமானம் செய்தல் போன்ற உடலின் அடிப்படை நிகழ்வுகளை செய்வதற்கான கட்டளைகளை, அந்ததந்த உறுப்புகளுக்கு கொடுக்கின்றது. இப்படி தானாக மூளையிலிருந்து அனுப்பப்படும் பல்வேறு கட்டளைகளில் ஏதேனும் ஒன்று தடைபட்டாலும், அந்த உடல் மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும்.

இங்கிலாந்தில், கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் வசித்து வரும் கெய்ல் லேலென்ட் மற்றும் டேனியல் தம்பதியருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது குடும்பத்திற்கு புதிய வரவாக வந்த அந்த குழந்தைக்கு ரைஸ் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 

பிறந்து ஆறு மாதம் ஆன பின்புதான் ரைசின் உடலில் ஏதோ மாற்றம் உண்டாவதையும், உணவு உட்கொள்வதற்கே சிரமப்படுவதையும் அறிந்த அவனது பெற்றோர், பதட்டத்துடன் மருத்துவமனைக்குச் சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆறு மாதத்திற்கு பின்பு அவனது உடல் எடை கொஞ்சம் கூட அதிகரிக்கவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

எனவே, அவன் எந்தவிதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போது, ரைசின் மூளையில் தன்னிச்சையாக செல்லும் கட்டளைகளில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த பாதிப்பால் ரைசின் மூளையிலிருந்து தானாக செல்ல வேண்டிய செரிமானத்திற்கான கட்டளை அந்த குறிப்பிட்ட உறுப்புக்கு செல்லவில்லை. இந்த காரணத்தால், அவன் உண்ணும் உணவுகள் செரிமானமாகாது. எனவே, அவனுக்கு பசியைப் பற்றிய நினைவே இருக்காது.

இங்கிலாந்து நாட்டிலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரே சிறுவன் ரைஸ்தான். இதுவரை 13 அறுவை சிகிச்சைகளை சந்தித்துள்ள ரைசின் பெரும்பாலான நாட்கள் மருத்துவமனையிலேயே கழிந்தது. இதில் துயரம் என்னவென்றால் பிறந்தது முதல் அவன் ஒரு போதும் உணவு உட்கொண்டதே இல்லை. நடக்கும் சம்பவங்களையெல்லாம் மனவேதனையுடன் பார்த்து வந்த அவனது பெற்றோர், தன் மகனை எப்படியாவது சரிசெய்து விடமுடியும் என்ற ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சொல்வதையெல்லாம் புரிந்து நடந்து கொள்ளும் புத்திசாலியான ரைசிற்கு மருத்துவர்கள் செயற்கையாக இரண்டு உணவு குழாய்களை அவன் உடலில் பொருத்தினர். ஒன்று வயற்றிலும், மற்றொன்று வயிற்றின் அடிப்பகுதியிலும் பொருத்தப்பட்டது. மேலும் ஒரு கருவி ஒன்றும் அவனுக்கு கொடுக்கப்பட்டது.

அந்த கருவியில் ஒலி ஏற்பட்டால் அவன் செரிமானம் பற்றி எண்ண வேண்டும். இதனால் அந்த கருவியில் ஏற்படும் ஒலியால் அவன் உட்கொண்ட உணவின் செரிமானம் பற்றி நினைப்பான். இதன்மூலம் அவனது மூளையிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு சமிக்ஞை சென்றவுடன் உணவு செரிமானம் அடைந்து, பின்பு வயிற்றுக்கடியில் வைக்கப்பட்டுள்ள செயற்கை குழாய் வழியாக சென்று வெளியேறும்.

இந்த செயற்கைக் குழாய்களுடனே வாழ்ந்து வரும் ரைசின் பெரும்பாலான தேவைகளை அவனது அம்மா பூர்த்தி செய்து வருகிறார். மிகவும் சுட்டித்தனமான ரைஸ், சில சமயங்களில் உடலில் பொருத்தப்பட்ட குழாயிலிருந்து கழிவுகள் வெளியேறுவதால் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கே சிரமப்படுகிறான்.

இப்படி ஒரு சிக்கலான மர்மநோயால் பாதிக்கப்பட்ட ரைசை மற்றவர்கள் விநோதமாக பார்ப்பார்கள். நோய் குணமாகி நிச்சயமாக ஒருநாள், அவனும் மற்ற குழந்தைகளைப் போல் மாறி விடுவான் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகின்றனர் அவனது பெற்றோர்.


Post a Comment

0 Comments