தோற்றவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டால் தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் என்ன என பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தேர்தல் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலாகும் என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் துரதிஸ்டவசமாக தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தோல்வியடைந்த ஒரு வேட்பாளரையேனும் தேசியப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்தால், தேர்தலுக்கான அவசியம் என்ன என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியான தீர்மானங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதிநிதித்துவம் கிடைக்காதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும், போட்டியான அரசியலுக்கு பிரவேசிக்க விரும்பாத புத்திஜீவிகள் நிபுணர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவுமே தேசியப் பட்டியல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசியல் கட்சிகள் இந்த விடயங்களை கருத்திற் கொள்ளாது அரசியல் காரணிகளை மட்டும் கருத்திற் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் ரீதியான காரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் அதனை விடவும் தேசியப் பட்டியல் ஆசனங்கள் எதற்காக ஒதுக்கப்படுகின்றன என்பதனை கருத்திற் கொண்டு அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
0 Comments