மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்து மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் மேடையில் ஏறியிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் ஆட்சி அமைத்திருக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் தலைவரான மைத்திரிபால சிறிசேன தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைத்திருப்போம் என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கடந்த 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் தேசிய பிரச்சினை தீர்வு விவகாரத்தில் நாங்கள் பின்னடைவையே சந்தித்திருக்கிறோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை வெல்வதற்கு எம்மால் முடியவில்லை. அந்த மக்களின் மனக்குழப்பங்களுக்கு தீர்வு காண முடியாமல் போய்விட்டது. இது பின்னடைவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் தேசிய அரசாங்க செயற்பாடு என்பன தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி:- தேர்தல் முடிவுகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். தேர்தல் மிகவும் சுயாதீனமாகவும் நடைபெற்றது. அந்த வகையில் தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கின் றோம். எவ்வாறெனினும் தேர்தல் முடிவுகளில் மூலம் பிரபலமான எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சிறந்த எதிர்க்கட்சியே உருவாகியுள்ளது. வழமையாக எதிர்க்கட்சிக்கு இந்தளவு ஆசனங்கள் கிடைப்பதில்லை. ஆனால் இம்முறை அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளன.
கேள்வி:- தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ உங்கள் கட்சியில் மிகப் பிரதான கதாபாத்திரத்தை வகித்திருந்தாரே?
பதில்:- ஆம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேர்தலில் எமது கட்சியில் பிரதான பாத்திரத்தை வகித்திருந்தார். அவரால் தான் இந்தளவு ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இல்லாவிடின் குறைந்த ஆசனங்களையே பெற்றிருப்போம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்ந்து மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் மேடையில் ஏறியிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் ஆட்சி அமைத்திருக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தலைவரான மைத்திரிபால சிறிசேன தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைத்திருப்போம்.
கேள்வி:- எவ்வாறெனினும் தற்போது தேசிய அரசாங்கம் அமையப்போகிறதே?
பதில்:- ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் நேர்மையாக செயற்பட்டால் நிச்சயம் இந்த தேசிய அரசாங்க செயற்பாட்டின் ஊடாக இந்த வெற்றியைக் காண முடியும். இரண்டு பக்கங்களிலும், நேர்மை வெளிப்படுத்தப்படாவிடின் என்ன நடக்கும் என்று கூற முடியாது.
கேள்வி:- எதிர்வரும் ஐந்து வருடங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- ஐந்து வருடங்களை நான் நன்றாகவே பார்க்கின்றேன். ஆனால் நான் முதலில் கூறியது போன்று இரண்டு தரப்பிலும் நேர்மை வெளிக்காட்டப்படுமானால் வெற்றியை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வாறெனினும் தற்போது மிகவும் தெளிவான குழப்பத்தில் நாம் இருப்பதாகவே உணர்கின்றேன். நாடு அபிவிருத்தியில் பின்னடைவு கண்டுவிடுமோ என்ற பயம் எமக்கு உள்ளது.
கேள்வி:- எதிர்வரும் ஐந்து வருடங்களில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என கருதுகிறீர்களா?
பதில்:- இந்த இடத்திலும் நேர்மை என்ற விடயமே பிரதான இடத்தை வகிக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் நேர்மையாக இந்த விடயத்தில் செயற்பட்டால் நிச்சயம் தீர்வைக் காண முடியும்.
கேள்வி:- 2010 முதல் 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் உங்களுடைய முன்னைய அரசாங்கம் சரியாக செயற்பட்டதா?
பதில்:- அதிகமான விடயங்களில் எமது அரசாங்கம் இக்காலப்பகுதியில் சரியாகவே செயற்பட்டது. ஆனால் ஒரு சில விடயங்களில் நாங்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
கேள்வி:- அவ்வாறு பின்னடைவை சந்தித்த ஒரு சில விடயம் என்னவென்று கூற முடியுமா?
பதில்:- தேசிய பிரச்சினை தீர்வு விவகாரத்தில் நாங்கள் பின்னடைவையே சந்தித்திருக்கிறோம். நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் மக்களின் கல்வி சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், நாங்கள் முன்னேற்றமடைந்திருக்கிறோம். எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை வெல்லுவதற்கு எம்மால் முடியவில்லை. அந்த மக்களின் மனக்குழப்பங்களுக்கு தீர்வு காண முடியாமல் போய்விட்டது.
அந்த விடயத்தில் நாங்கள் பின்னடைவை சந்தித்தோம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமது அரசாங்க காலத்தில் எமக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வில்லை. அவர்களும் எம்முடன் ஏட்டிக்குப் போட்டியாகவே செயற்பட்டு வந்தனர். எனவே இரண்டு தரப்பினரும் இந்த பின்ன டைவுக்கு பொறுப்புக் கூறியாக வேண்டும் என்றார்.

0 Comments