Subscribe Us

header ads

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி கூறிய புத்திமதி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் அவரின் எளிமையை, நிதானத்தை காட்டி நிற்கின்றன. இந்த நாட்டின் ஜனாதிபதி இப்படியும் நடந்து கொள்ளமுடியும் என்ற புதுமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளார்.

அண்மையில் பாடசாலை ஒன்றின் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் எனது பாடசாலை அதிபர் என்னைப் பிரம்பால் அடித்தார். பிரம்பு முறியும் வரை அவர் என்னை அடித்தார்.

எனினும் நான் அது பற்றி எனது தந்தையிடம் கூறவில்லை. எனது தந்தையிடம் கூறியிருந்தால், அதிபர் அடித்ததை விட, ஒரு படி கூடுதலாக எனது தந்தை என்னை அடித்திருப்பார்.

ஆனால் இன்று ஆசிரியர் மாணவனுக்கு அடித்தால் உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய இந்த விடயம் சாதாரணமானதன்று. மாணவர்களை அடித்துப் படிப்பித்தல் என்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி உடன்பட்டுப் போகிறார் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.

இன்று நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவக்கூடிய மாணவர்களின் நெறிபிறழ்வுக்கு அடிப்படைக் காரணம் மாணவர்களைத் தண்டிக்க முடியாது என்பதுதான்.

ஆசிரியர் ஒருவர் மாணவனை உடல் ரீதியாகத் தண்டித்தால் பிரஸ்தாப ஆசிரியரை விளக்கமறியலில் அடைக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக மாணவர்களைக் கண்டு ஆசிரியர்கள் பயந்தோடுகின்ற சூழ்நிலையே உருவாகியுள்ளது.

ஒரு ஆசிரியர் மாணவனைத் தண்டிப்பதற்குள் கற்றல் செயற்பாடு மட்டுமன்றி, பழக்க வழக்கங்களும் ஒழுக்க விழுமியங்களும் உள்ளடங்கியுள்ளன. தமிழில் பயபக்தி என்ற ஒரு முக்கிய விடயம் உள்ளது.

இப் பயபக்தி ஐந்து இடங்களில் நிலைநாட்டப்பட வேண்டும். அரசன், உபாத்தியாயர், தாய், தந்தை, மூத்த சகோதரர். எனினும் பயபக்தி என்ற பக்குவநிலை இன்று முற்றாக அழிந்து போயிற்று.

இதன் காரணமாகவே வீட்டில் பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழல்; பாடசாலைகளில் மாணவர்களுக்குப் புத்திமதி கூறமுடியாத அவலம்; ஆலயங்களில் சண்டைகளும் சச்சரவுகளுமான துர்ப்பாக்கியங்கள் முளை எடுத்து வளர்ந்து வருகின்றன.

இத்தகைய நிலைமை நீடிக்குமாயின் நெறி பிறழ்வான சமுதாய உருவாக்கம் நம்மை அறியாமல் நடந்தேறும். எனவே மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள் தண்டிக்கக் கூடாது என்ற சட்ட வரையறைகள் இருந்தாலும் மாணவர்களின் நன்மை கருதி-பாடசாலையை வழிப்படுத்தும் பொருட்டு தேவையான சந்தர்ப்பங்களில் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டித்தல் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

இதனை மாணவர்களும் பெற்றோர்களும் ஏற்றுக் கொள்வது எழுதாயாப்பாக இருப்பதும் அவசியம்.இதைத்தான் இந்த நாட்டின் மரியாதைக்குரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

எமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரை பொலிஸில், நீதிமன்ற வாசலில் நிறுத்தி விடுவது என்பது எங்கள் பண்பாட்டு ஒழுக்கவியலுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஆசிரியர் மாணவரைத் தண்டித்துவிட்டார் என்பதை சாட்டாகக் கொண்டு ஆசிரியரை சட்டத்தின் முன் நிறுத்துகின்ற பாதகத்தை மாணவர்களும் பெற்றோர்களும் சமூகக் குழபங்காலிகளும் கைவிட வேண்டும்.

அப்போதுதான் எங்கள் மாணவர்கள் தொடர்பில் நாங்கள் நிம்மதியாக, மனநிறைவோடு இருக்க முடியும். அதே சமயம் மாணவர்களை கோபாவே­த்தோடு தாக்குகின்ற புறநடை ஆசிரியத்துவத்திற்கு இது பொருந்தாது.

Post a Comment

0 Comments