Subscribe Us

header ads

அனல் பறக்கும் இனவாதம்

(ரொபட் அன்டனி)

எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்துக்கு இன்னும் 9 தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் தேர்தல் பிரசார செயற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
எவ்வாறாவது மேடைகளில் கவர்ச்சிகரமாக பேசி மக்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெற்றுவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளன. ஆனால் இவ்வாறு போட்டிமிக்க தேர்தல் முறைமையின் பிரசார மேடைகளில் இனவாத பேச்சுக்கள் அனல் கட்டிப் பறந்துகொண்டிருப்பதை பார்க்கக்கூடியதாகவும் உள்ளது.
குறிப்பாக தற்போது தேர்தல் பிரசார மேடைகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் முன்வைக்கும் சில கருத்துக்கள் பாரிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக இனவாதத்தை கையில் எடுத்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பலர் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இனவாத சாயம் கலந்த அரசியல் பேச்சுக்கள் அடிக்கடி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இடம்பெறுவதை காண முடிகின்றது.
இனவாதத்தினால் இந்த நாடு கடந்த 30 வருடகாலமாக பாரிய தீய விளைவுகளை சந்தித்திருந்த நிலையில் இதற்கு பின்னர் இனவாதத்துக்கு இடமளிக்கக்கூடாது என்ற செய்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மக்களினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறான தெளிவான செய்தி மக்களினால் விடுக்கப்பட்டும் அரசியல்வாதிகள் இனவாதத்தை கைவிடுவதாக தெரியவில்லை.
குறிப்பாக இனவாதம் மற்றும் மதவாதம் என்பன நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அரசியல் தலைவர்கள் இனவாதம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியம் என்று தெரிவித்ததையடுத்தே தென்னிலங்கையில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் தீவிரமடைய ஆரம்பித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பின் ஊடாக அதி உச்சமட்ட அதிகாரப்பகிர்வே தீர்வாக அமையுமென வலியுறுத்தியிருந்தது. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளான வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் இந்தத் தீர்வு அமையவேண்டுமென்றும், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்றும் இதில் கூறப்பட்டிருந்தது. இதுவே தற்போது அனல் பறந்துகொண்டிருக்கும் இனவாத பேச்சுக்களுக்கும் அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்நிலையில் ஐக்கிய மற்றும் ஒற்றையாட்சி போன்ற விடயங்கள் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியிருந்தார்.
"ஐக்கிய இலங்கை மற்றும் ஒற்றையாட்சி இலங்கை என்ற வசனங்களில் பாரிய மாற்றங்கள் இல்லை. ஆங்கிலத்தில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் சிங்கள மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இல்லை. எமது நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் ஒருபோதும் விலகியிருக்கவில்லை. ஐக்கியம் என்பது சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்களை இணைப்பதாகும். இது அரசியல் மற்றும் கலாசார செயற்பாடாகும். ஒற்றையாட்சி என்பது இவற்றை உருவாக்கும் செயற்பாடாகும். பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கை ஒரு தடையல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறான கருத்து ஒன்றை இவ்வாரம் கொழும்பில் வெளியிட்டிருந்தார்.
அதாவது " இலங்கையின் வரைபடத்தில் வடக்கு, கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணிலின் புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையாகும். இதற்கான உறுதி மொழியையே ரணில் விக்கிரமசிங்க புதிய நாடு கட்டியெழுப்பப்படும் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு சமஷ்டி முறைக்கு அப்பால் சென்று தனிநாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்கின்றனர். இதற்காக எந்தவிதமான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டதோ தெரியாது. அத்தோடு இத் திட்டத்திற்கு ரணில் எவ்வாறு இணங்கினார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. நாடு பிரிந்தால் அதனை மீண்டும் இணைப்பது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும். எனவே எமது கொள்கையானது தெளிவாகவுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் இவ்வாறு மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பார்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி முறைமையில் அதிகாரத்தை பகிர்வதற்கான கோரிக்கை இனவாத ரீதியில் நோக்கப்படுகின்றமை நன்றாகவே தெளிவாகின்றது. அது மட்டுமன்றி இதனை வைத்து இனவாத ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் தலைவர்கள் அடிக்கடி சமஷ்டி முறைமை யோசனையை மிகவும் கடுமையாக விமர்சித்த வண்ணமே கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு அதிகாரப் பகிர்வை கோரியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷ மட்டும் நாடு பிரியும் ஆபத்து உள்ளதாகவும் பிரிவினை அச்சுறுத்தல் காணப்படுகின்றதாகவும் இனவாதத்தை பரப்பிவருகின்றார் என்று கூறியிருந்தார்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பதே எமது நிலைப்பாடாகும். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் மாறமாட்டோம். தற்போது ஒற்றையாட்சி என்பது ஒரு பிரச்சினையல்ல. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பகிர முடியும் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நாட்டின் சுதந்திரத்தின் பின்னரான அரசியல் பயணத்தில் தேர்தல் களின் பொது இன வாத ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள மொழி சட்ட மூல யோசனை முன்வைக்கப்பட்டதிலிருந்து இந்த இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.
அதாவது நாட்டை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை கோரும் செயற்பாடுகளை மையமாக வைத்து இந்த இனவாத கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. அதவாது தமிழர்தரப்பு தமது அரசியல் அதிகாரங்களை கோருவதற்கான விடயங்களை முன்வைத்தவுடன் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பாரிய இனவாத ரீதியில் பார்க்கும் வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கின்றோம்.
குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகள் தரப்புக்குமிடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் போது சமஷ்டி முறைமையில் இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் சமஸ்டி யோசனையை பாரிய இனவாத ரீதியில் நோக்கிய தென்இலங்கை அரசியல் கட்சிகள் இனவாத ரீதியில் கடும் விமர்சனங்களையும், கருத்துக்களையும் முன்வைத் திருந்தன.
குறிப்பாக அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு வீடு செல்வதற்கும் இந்த சமஷ்டி யோசனை ஒரு மிகப்பெரிய வகிபாகத்தை வகித்தது என்று கூறலாம். எவ்வாறெனினும் இனவாத ரீதியில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் விரைவில் மக்களை சென்றடைவதும் அவற்றிற்கு பிரதி விளைவுகள் ஏற்படுவதும் வழமையான விடயமாகும். அந்த வகையில் இன வாத கருத்துக்களை அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்தும் முன்னெடுப்பது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையையும் சீர்குலைத்துவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தற்போது நாட்டில் தேசிய ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் கூடிய புதிய சூழல் உருவாகியுள்ள நிலையில் இச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நியாயமான அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தென் இலங்கை அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் தென் இலங்கை அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தென் இலங்கை அரசியல் கட்சிகள் அந்த பங்களிப்பை உரிய முறையில் வழங்காமல் அவற்றை இனவாத பக்கத்திற்கு திருப்பி அதனூடாக அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பதை காண முடிகிறது. அதனை விடுத்து ஆக்கபூர்வமான ரீதியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அவர்களின் அரசியல் தேவைப்பாடுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
இனவாத கருத்துக்களை முன்வைத்து மக்களின் வாக்குகளை பெற்று அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்க முடியுமா என்பது குறித்து அரசியல் கட்சிகள் சிந்தித்து பார்க்கவேண்டியது அவசியமாகும். இவ்வாறு தொடர்ந்து இனவாத எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் தொடர்ச்சியாக நாட்டில் தேசிய ஒற்றுமையற்ற நல்லிணக்கமற்ற சமூகமே உருவாகும் அபாயம் உள்ளது. கடந்த கால கொடிய யுத்தத்தினால் முழு நாடும் கசப்பான அனுபவங்களை பெற்றது.
அவ்வாறான கசப்பான யுத்தத்துக்கு இனங்களுக்கு இடையில் காணப்பட்ட நம்பிக்கையின்மையும் புரிந்துணர்வுமின்மையுமே பிரதான காரணங்களாகும். இந்நிலையில் தொடர்ந்து தற்போது இனவாத பேச்சுக்களும் வெறுக்கத்தக்க கூற்றுக்களும் வெளியிடப்படுகின்றமையானது தொடர்ந்தும் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மையையும் புரிந்துணர்விமின்மையையும் ஏற்படுத்துவதாகவே அமையும். எனவே, மிகவும் முக்கிய காலகட்டமான இந்தத் தேர்தல் காலத்தில் அனல் பறக்கும் இனவாத கருத்துக்களையும் கூற்றுக்களையும் தவிர்த்துக்கொள்வது நன்றாக இருக்கும்.

Post a Comment

0 Comments