படல்கமயில் அமைந்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சிரியோ லிமிடெட், மாபெரும் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த 28 சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஒரே நாளில் விஜயம் செய்து அவற்றில் வதிவோருக்கு அவசியமான பொருட்கள் மற்றும் களியாட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
சிரியோ லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஃபீலிக்ஸ் பெர்னான்டோவினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த திட்டத்துக்காக கம்பனி 20 சிறுவர் இல்லங்களையும், 8 முதியோர் இல்லங்களையும் கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து கம்பனி தெரிவு செய்திருந்தது.
இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கும் முன்பாக இந்த பகுதிகளில் காணப்படும் தேவைகள் குறித்து சிரியோ நிறுவனத்தின் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து ஆய்வுகள் மூலமாக கண்டறிந்திருந்தனர்.
தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கமைய, உலர் உணவுப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், ஆடைகள், சிறுவர் ஆடைகள், கட்டில் மேலுறைகள், காகிதாதிகள், பாடசாலை புத்தகங்கள், மருந்துகள், நீர் வடிகட்டிகள், வாசிப்பு சாதனங்கள், விளையாட்டு உபகரணங்கள், போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரங்கள், இரும்பு அலுமாரிகள், குடைகள், தூய்மையாக்கல் பொருட்கள், காஸ் அடுப்புகள், பேர்ஃபியும்கள் மற்றும் பண உதவிகள் போன்றன சிரியோ லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், இரு முதியோர் இல்லங்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கமைய, நிறுவனத்தினால் தலவில புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு தல யாத்திரிகை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், சிரியோ கம்பனியினால் இந்த இல்லங்களுக்கு வர்ணம் பூசுதல், அவர்களின் தோட்டப்பகுதிகளை தூய்மையாக்கல் மற்றும் ஆடைகளை கழுவிக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கம்பனியின் ஊழியர்கள் இந்த செயற்பாடுகளில் பெருமளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியோ நிறுவனத்தில் பணியாற்றும் 1200 வரையிலான ஊழியர்கள் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்த சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போருடன் தமது பொழுதை செலவிட்டிருந்தனர்.
தமது சொந்த பணத்தில் கொள்வனவு செய்திருந்த அன்பளிப்புகளையும் இவர்களுக்கு வழங்கியிருந்தனர். அத்துடன், சகலருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் ஆகியவற்றையும் சிரியோ வழங்கியிருந்தது.
சிரியோ லிமிடெட் நிறுவனத்தின் பராமரிப்பு பொறியியலாளர் மஞ்சு அபேதீர கருத்து தெரிவிக்கையில்,
“இடங்களை தெரிவு செய்வதற்காக கம்பனியின் ஊழியர்கள் தம்மை அர்ப்பணித்திருந்ததுடன், அதன் காரணமாக இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. எமது ஊழியர்கள் வசிக்கும் பிரதேசங்களை அண்மித்து இந்த சில இல்லங்கள் அமைந்துள்ளன.
இந்த இல்லங்களுக்கு அவர்கள் விஜயம் செய்திருந்த போது கிடைத்திருந்த வரவேற்பு என்பது மிகவும் உருக்கமானதாக அமைந்திருந்தது. இந்த சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், நன்கொடைகளை வழங்குவோர் அவற்றை வழங்கிவிட்டு விரைவில் காணாமல் போய்விடுவர் என்று கூறினார்கள்” என்றார்.
“தாம் பெருமளவில் எதிர்பார்ப்பது தம்முடன் பொழுதைச் செலவிடும் நபர்களை என எமது ஊழியர்களிடம் அவர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, எமது ஏனைய சகல வேலைகளையும் ஒதுக்கிவிட்டு, முழு நாளையும் நாம் அவர்களுடன் செலவிட தீர்மானித்தோம். எமது ஊழியர்கள் அவர்களுக்கு இசை மற்றும் பாடல் ஆகியவற்றை பாடி மகிழ்ந்தனர்.
மிகவும் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமைந்திருந்தன. மாலையில் நாம் விடைபெற்ற போது, அவர்களின் கண்களில் நீர் கனத்திருந்ததை காண முடிந்தது. எனவே ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்களுடன் சிறு குழுக்களாக இணைந்து நேரத்தை செலவிட நாம் தீர்மானித்தோம்” என அபேதீர மேலும் தெரிவித்தார்.
சிரியோ கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஃபீலிக்ஸ் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில்,
“சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் மூலமாக நாம் எதிர்பார்க்கும் பிரதிபலன் இதுவாகும். குழுநிலைச் செயற்பாட்டை நாம் எமது ஊழியர்கள் மத்தியில் நாம் இதன் மூலமாக ஊக்குவித்திருந்தோம். அத்துடன், சமூகத்துக்கு உதவும் மனப்பாங்கையும் ஏற்படுத்தியிருந்தோம்” என்றார்.
படல்கம சிரியோ லிமிடெட் என்பது, இத்தாலியின் வெரோனா நகரில் காணப்படும் கல்செடோனியா குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக அமைந்துள்ளது. உள்ளாடைகள், காலுறைகள், ஸ்டொக்கிங்கள், குளியல் ஆடைகள் மற்றும் ஃபப்ரிக் வர்ணம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் கல்செடோனியா ஈடுபட்டுள்ளது.
கல்செடோனியா கம்பனியுடன் மூன்று உள்நாட்டு கம்பனிகள் இணைந்துள்ளன. அவையாவன, ஒமெகா லைன் (சந்தலங்காவ மற்றும் வவுனியா), பென்ஜி (பிங்கிரிய), அல்பா அப்பரல் (பொல்கஹாவெல) மற்றும் சிரியோ (படல்கம) ஆகும். இந்நிறுவனங்களில் மொத்தமாக 13,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments