ஐக்கிய தேசியக் கட்சியினுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் தோற்கடிக்கப்பட்ட பின்பும் மீளவும் பிரதமராக முனையும் மஹிந்த ராஜபக் ஷ இந்த தருணத்திலாவது மெதமுலனவிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு நிரந்தரமான அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒப்படைக்குமாறும் அவர் கோரினார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிவித்திகல பகுதிக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் காமினி அத்துகோரளவுடன் வருகை தந்திருந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதேவேளை ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக புரட்சிக்கு நிவித்திகல மக்கள் ஆற்றிய பங்களிப்பு மிகவும் அளப்பரியது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு உயிரையும் தியாகம் செய்து ஜனநாயக புரட்சிக்கு இந்த பிரதேச மக்கள் உதவியமையை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எனவே 60 மாதங்களில் புதிய நாட்டை கட்டியெழுப்பும் எமது திட்டத்தில் இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த சுதந்திரத்தையும் நீதியான தேர்தலையும் தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும். இதன்பிரகாரம் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மேற்படி நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டை சிறந்த திசைக்குக் கொண்டு செல்லும் பயணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்குரிய நிரந்தரமான அரசாங்கமொன்றை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்று தரவேண்டும்.
இதேவேளை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சியை மாத்திரமே பிரதான குறிக்கோளாக கொண்டு செயற்பட்டார். இதன்காரணமாக ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் தோற்கடிக்கப்பட்டார். எனினும் மக்களினால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ தனக்கு பிரதமர் பதவியை தருமாறு கோரி பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
எனவே இம்முறை பாராளுமன்ற தேர்தலின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு உறுதியாகி விட்டது. எனவே இந்த தருணத்திலாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மெதமுலனவிற்கு சென்று ஓய்வு எடுக்கவேண்டும் என்றே அவருக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

0 Comments