(The Puttalam Times)
அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை 'கல்குடா நேசன் இலக்கிய நேர்காணல்' என்ற புதிய பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை, புத்தளத்தைச் சேர்ந்த பெண் கவிஞரும் 'புதிய வெளிச்சம்' பத்திரிகை ஆசிரியருமான பாத்திமா சில்மியா.
அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை 'கல்குடா நேசன் இலக்கிய நேர்காணல்' என்ற புதிய பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை, புத்தளத்தைச் சேர்ந்த பெண் கவிஞரும் 'புதிய வெளிச்சம்' பத்திரிகை ஆசிரியருமான பாத்திமா சில்மியா.
உங்களைப்பற்றிய அறிமுகம்?
உப்பளமும் கடல் வளமும் உயர்ந்து வளர்ந்த தென்னஞ்சோலைகளும் பசுமை நிறைந்த நெற்கதிர்களையும் முகவரியாய்ச் சுமந்த வந்தாரை வாழ வைக்கும் பொன் பூமியாம் புத்தளத்தில் பூத்த நான், உயர்தரம் வரை கல்வி கற்று விட்டு கவிதை, கட்டுரை, கதை போன்ற ஆக்கங்களை தேசிய இதழ்களிலும், ஊடகங்களிலும் எழுதி வந்தேன். தற்போது புதிய வெளிச்சம் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகவும், நிர்வாக அமைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றேன். சொந்த பத்திரிகை என்பதால் மன நிறைவாக இருக்கிறது.
புதிய வெளிச்சம் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது?
மிகவும் ஒரு கஷ்டமாக இருக்கின்ற போதிலும், மனதிற்கு சந்தோஷமாக இருக்கின்றது. குறைகளைக் கண்டு மனம் நொந்தாலும், நிறைகளைக் கேட்கும் போது திருப்தியாக இருக்கும். பத்திரிகைக்கு ஆக்கம் அனுப்பும் போது ஒரு எதிர்பார்ப்பிருக்கும் இல்லையா? இதில் ஏனையவர்களுக்கும் களமமைத்துக் கொடுப்பதில் ஒரு திருப்தியும், சமூகத்திற்குப் பங்களிப்பு செய்ய முடிகின்றமைகான சந்தோஷத்தையும் தருகின்றது.
புதிய வெளிச்சம் செய்திப் பத்திரிகையைத் தொடங்குவதற்கான காரணமென்ன?
நாம் இதற்கு முன்னர் 'விழி' எனும் மாத சஞ்சிகையொன்றினை வெளியிட்டோம். இதில் செய்திகளோ, அரசியல் சம்பந்தப்பட்டவைகளோ இருக்கவில்லை. இதனால் நிறைய வாசகர்களை திருப்திப்படுத்தும் எண்ணத்திலும் நமது சமூகத்தின் இருளில் கிடக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டுமென்கின்ற இலட்சியத்துடனும் தான் புதிய வெளிச்சம் செய்திப் பத்திரிகையை வெளியிட்டோம்.
தற்போது மூன்றாவது வெளியீடு வரவிருக்கும் இந்நிலையில் வாசகர்களின் வரவேற்பு எவ்வாறிருக்கிறது?
மாஷா அல்லாஹ். இறைவன் துணையுடன் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனாலும், வாசகர்களிடம் பத்திரிகையைக் கொண்டு போய்ச்சேர்ப்பது தான் சிரமமாகவுள்ளது. எனவே, நாடு பூராகவும் மட்டுமன்றி வெளி நாடுகளில் வாழும் அனைத்து தமிழ்ப்பேசும் நெஞ்சங்களில்இருந்தும் நிருபர்கள், எழுத்தாளர்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரம் சேகரிப்பாளர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தக்க சன்மானங்கள் வழங்கப்படும். இதன் மூலமாக புதிய வெளிச்சம்செய்திப்பத்திரிகையை விரிவுபடுத்துவதோடு எல்லோருக்கும் பயன் பெறவும் முடியும்.
புதிய வெளிச்சம் செய்திப்பத்திரிகை ஆசிரியராக இருக்கும் அதே வேளை, ஒரு தனியார் வங்கியொன்றிலும் பணி புரிந்து வருகின்றீர்கள். இந்நிலையில், எழுதுவதற்கு எவ்வாறு நேரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்?
இலட்சியமுள்ளவர்களுக்கு தொழில் ஒரு தடையல்ல. தொழில் வயிறிற்காக. எழுத்து சமூகத்திற்காக. தொழில் தவிர்ந்த அனைத்து நேரங்களிலும் எழுத்திற்காகவே எடுத்துக் கொள்கிறேன்.
உங்கள் எழுத்து மூலமாக நீங்கள் சமூகத்திற்குச் செய்து கொண்டிருக்கும் நன்மைகள் ?
சமூகச் சீர்கேடுகளை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதும், திறமைகளை வெளிப்படுத்தத் துடிக்கும் ஆற்றல் மிக்கவர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதும், பயனுள்ள கட்டுரைகள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இலை மறை காய்களாய்த் தேங்கிக் கிடப்பவர்களை வெளிக்கொணர்வதும், மொத்ததில் ஒரு தாயைப் போல அரவணைத்து புத்தெழுச்சி கொடுப்பதுமேயாகும்.
ஒரு கவிதை உங்களுக்கு எவ்வாறு உருவெடுக்கிறது?
கருவிலிருந்து முளைக்கிறது. கரு அனுபவத்திலிருந்து எழுகிறது. பார்க்கும், கேட்கும், மனதைப்பாதிக்கும் விடயங்கள் என் கவிதைக்கு உயிர் ஏற்றுகிறது.
கவிதை, கட்டுரை, விமர்சனம் இவற்றைத் தவிர்த்து, வேறெந்தத் துறைகளில் அதிக ஆர்வங்காணப்படுகிறது.?
சமூக சேவை, தையல், கைப்பணி அலங்காரம், புத்தகம் வாசித்தல் போன்றவை.
பொதுவாக பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் போக்கிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விமர்சனங்கள் தான் நமக்கு விமோசனங்களாகின்றன. செத்த விதையை கால் நடைகள் கூட கணக்கெடுப்பதில்லை. அது முளைத்து விட்டால் விலங்கென்றும், வெயில், புயல் என்றும் போராட வேண்டிவரும். சோர்ந்து விட்டால் தளிர் தகர்ந்து விடும். போராடினால் தான் மரமாகி கனிகளையும், நிழல்களையும் கொடுக்க முடியும். அதனால் விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்.
உங்கள் கவிதைகளைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட வேண்டுமென்ற எண்ணமிருக்கிறதா?
இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ‘காதலும் கத்தரிக்காயும்” எனும் கவிதை நூலொன்றினை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன். எனவே, அந்த எண்ணம் நிறைவேறும்.
நீங்கள் இது வரை பெற்ற பாராட்டுக்கள், விருதுகள் பற்றி சொல்லுங்களேன்?
தொகுதி, மாவட்டம், மாகாணம் மட்டங்களில் எனது கதைகள், கவிதைகள் ஆகியன முதலிடம் பெற்றுள்ளன. விழியின் ஓராண்டுக்கான ஆக்கப்படைப்பு விருதும் கிடைத்தது. இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும், விருதுகளையும் பெற்றுள்ளேன்.
மரபுக்கவிதை எழுத ஆர்வமுண்டா?
எழுத ஆர்வமுண்டு. ஆனால், நிறைய வாசகர்கள் மரபுக்கவிதையை வாசிக்க விரும்புவதில்லை. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. வாசகர் வாசிக்க முடியாத கவிதையை எழுத விரும்பவில்லை. ஆனால்,மரபுக்கவிதை பிடிக்கும்.
பிடித்தமான பெண் கவிஞர்கள்?
எனக்குப் பிடித்த கவிதை தாலாட்டு. அதைப்பாடி உறங்க வைத்த என் அம்மா என்னும் கவிஞரை நிறையப் பிடிக்கும்.
இறுதியாக ஏதும் சொல்ல விரும்பினால்?
நான் எழுதும் கவிதைகளும், ஏனைய ஆக்கங்களும், முயற்சிகளும், யாரையும் காயப்படுத்தாமல், காயங்களை ஆத்தும் மருந்தாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை.
கல்குடா நேசனுக்காக - ஓட்டமாவடி றியாஸ்


0 Comments