விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும், அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும் அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும்.
எனினும் இந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல் போன்றன கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது கேபி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார். கேபி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சி தனது சொத்து அல்ல எனவும், தனக்கு பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார் என்பதை கட்சியினாலேயே தீர்மானிக்கப்படும்.
இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து வினவியபோது, நீக்கப்பட்டது சம்பூர் முகாம் மட்டுமே எனவும் அவற்றையும் நீக்க வேண்டி ஏற்பட்டது மஹிந்த தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியினாலேயே எனவும் குறிப்பிட்டார். மேலும் சம்பூரின் வேறு பகுதிகளில் இவற்றை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Comments