இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.
கொழும்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி.வரிச் சலுகை வழங்கும். இவ்வாறு 122 நாடுகளுக்கு இச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளது. 5000 பொருட்களுக்கு (அமெரிக்காவுக்கு) ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இச்சலுகைக்கு குறிப்பிட்ட கால எல்லை வரையறுக்கப்படும். அக்கால எல்லை முடிவடைந்ததும் அமெரிக்க காங்கிரஸ் மீண்டும் அக்கால எல்லையை புதுப்பிக்கும்.
இது இவ் வரிச் சலுகை தொடர்பிலான நடைமுறையாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்தப்பட்டது.
இச் சலுகை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, தைத்த ஆடைகள், இறப்பர், பிளாஸ்டிக் உட்பட பல பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக இச் சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்கள் கழித்து அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை வழங்குவதற்கான தீர்மானத்தை -ஜூன் 27ஆம் திகதி தீர்மானித்தது.
இத் தீர்மானத்திற்கான அனுமதியளிக்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஜி.எஸ்.பி.சலுகை எமக்கு கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.


0 Comments