ஒக்ரோபர் மாதம் வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேடை ஏறமாட்டார் என்று அவர் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சோதிடரின் உத்தரவு என்று கூறிக் கொண்டாலும் சோதிடர் என்பதை பிரித்தால் வரக் கூடிய இடர் காரணமாக மகிந்த அப்படியொரு முடிவை எடுத்திருக்கலாம். எதுவாயினும் மகிந்த குடும்பம் ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு இரண்டு வழி உண்டு.
அதில் ஒன்று; எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராகப் போட்டியிட்டு, அதில் வெற்றிபெற்று பிரதமராகுதல்.
19வது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமரானால் அவர் நிச்சயம் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அரணை அமைத்து விடுவார். அதன் பின்னர் மகிந்த குடும்பத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படமாட்டா.
ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியம் என்பது பற்றி அதிதீவிரமாக ஆராய வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் போல பொதுத் தேர்தலும் மகிந்தவைக் காலை வாரிவிட்டால் அந்தோகதிதான் இனி மீட்சியில்லை என்றாகிவிடும். இது ஒருமுறை. இதைவிட இன்னுமொரு வழி இருக்கிறது அதாவது; எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டுமல்ல, இனி மேல் நாங்கள் அரசியலில் இறங்கமாட்டோம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றொரு இணக்கப்பாட்டுக்கு மகிந்த குடும்பமும் தற்போதைய ஆட்சியாளர்களும் வருதல்.
அதாவது, ராஜபக்ச குடும்பம் அரசியலிலிருந்து கூண்டோடு துறவு பூணுதல் என்ற அடிப்படையில் ஒரு சமரசத்திற்கு வருதல்.
இத்தகையதொரு முடிபு மகிந்த தரப்பையும் நிச்சயம் பாதுகாக்கும். இருந்தும் எதிர்காலத்தில் கிடைக்கக் கூடிய பதவிகளையும் இழக்கத் தயாராகும் போதே இந்த வழிமுறை சாத்தியமாகும்.
எதுவாயினும் சமகால சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, மகிந்த ராஜபக்ச குடும்பம் அரசியலிலிருந்து முற்றுமுழுதாக ஒதுங்குதல் என்பதாக நிலைமை இருக்கும்போல் தெரிகிறது. இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அரசியல் மேடை ஏறி பேசுவதில்லை என்பது மகிந்த ராஜபக்சவின் முடிபு. அரசியலில் ஈடுபட மாட்டேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச. மகிந்த ராஜபக்வின் மூத்த சகோதரரும் சபாநாயகருமான சமல் ராஜபக்ச அரசியலிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவருகையில் பசில் ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எது எப்படியோ காலம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்பது உறுதி.
இருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் குழப்பமான அரசியல்வாதிகள்; பேரினவாதிகள் நின்று நிலைப்பது கடினம்.
ஏனெனில் போருக்குப் பின்பான இலங்கையில் அமைதியும் சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும் என ஒட்டுமொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றனர்.
ஆயினும் பொதுமக்களின் விருப்பத்தை அறியாத அரசியல்வாதிகள் சிலர் இன்னமும் இனவாதத்தினூடாக அரசியல் ஆதாயம் தேடலாம் என நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கைகள் தவிடுபொடியாக கூடிய வாய்ப்புகளே இந்த நாட்டின் எதிர்கால அரசியலில் உண்டு என்பதை மட்டும் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.


0 Comments