மியான்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்தும் வங்களாதேசத்தில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் இடம் பெயர்ந்துவரும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா இனத்தவர்களுக்கு அடைக்கலம் தர எந்த நாடும் முன்வரவில்லை. இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
உண்ண உணவும், குடிக்க நீரும் இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டு எல்லையருகே நடுக்கடலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ள நிலையில், வந்தேறிகளாக படகுகளில் தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்தன. இதை தொடர்ந்து கடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா மக்களை கண்டுபிடித்து மீட்குமாறு மலேசிய கடற்படைக்கு அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் உயிரிழப்பை தடுக்கவேண்டியது நமது கடமை என்று கூறியுள்ள ரசாக், நிலம் மற்றும் கடல் வழியாக மனிதாபிமான உதவிகளை செய்யவேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


0 Comments