"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்"
"வெளிநாடு வந்துப்பார்"......
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனாலும், குடும்பத்துல் யாராவது ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....
"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".


0 Comments