அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்ட்டோ பகுதியில் வசிக்கும் ஆபிரகாம்- தாஜி ஆபிரகாம் தம்பதியரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவனான தனிஷ்க், இந்த இளம் வயதிலேயே கணிதம், அறிவியல், வேற்றுமொழிப் பாடம் உள்ளிட்ட மூன்று பாடங்களில் கல்லூரிப் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளான்.
அடிப்படையாக பள்ளிக் கல்வி பெறாமல் வீட்டில் இருந்தவாறு பாடம் பயின்ற தனிஷ்க், தனது ஏழாம் வயதில் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வில் ஆஜராகி வெற்றி பெற்றான். அமெரிக்காவில் இந்த தனிப்பெரும் சிறப்பிடத்தை பிடித்த இவனது சாதனைப் பற்றி அறிந்த அதிபர் பராக் ஒபாமா, தனிஷ்க்கை பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதுமட்டுமின்றி, உலகின் அறிவாற்றல் மிக்கவர்கள் (ஐ.கியூ) இடம்பெற்றுள்ள ’மென்சா’ கிளப்பில் தனது நான்காம் வயதில் இருந்து இவன் இடம்பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 11 வயது சிறுவனாக உள்ள தனிஷ்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் ரிவர் காலேஜில் சேர்ந்து அங்குள்ள சுமார் 1800 கல்லூரி மாணவர்களுடன் பயின்று, தற்போது 3 பாடங்களில் பட்டதாரியாக உயர்ந்துள்ளான்.
இந்த கல்லூரியின் வரலாற்றில் இத்தனை இளம்வயதில் ஒருவர் பட்டதாரியானது, இதுவே முதல்முறை என அமெரிக்கன் ரிவர் காலேஜ் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனது எதிர்கால திட்டம் பற்றி நிருபர்களிடம் தெரிவித்த தனிஷ்க் ஆபிரகாம், டாக்டர் ஆக வேண்டும், மருத்துவ ஆராய்ச்சியாளராக வேண்டும். அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்று தெரிவித்துள்ளான். இந்த மூன்று ஆசைகளும் நிறைவேறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் முதல் அதிபராக நாமும் வாழ்த்துவோம்!







0 Comments