தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் தலை நகர் கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளதாகவும் விசேட போக்குவரத்து திட்டங்களை அமுல் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
இந் நிலையில் கொழும்பு நகர் பகுதியில் மட்டும் 500 பொலிஸார் மேலதிக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு விஷேட கடமைக்காக அழைக்கப்பட்டவர்கள் எனவும் சிவில் உடையில் மேலும் பலரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புத்தாண்டு காலப்பகுதியாக ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாம் அடையாளப்படுத்தியுள்ள நிலையில் இக்காலப் பகுதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குகளை நாம் செய்துள்ளோம்.
குறிப்பாக இக்காலப்பகுதியில் போக்கு வரத்து தொடர்பில் மேல் மாகாணம் பல சிக்கல்களை எதிர்கொள்ளத்தக்கது. எனவே மேல் மாகணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் வழிகாட்டலுக்கு அமைவாக போக்கு வரத்து ஒழுங்குபடுத்தல்கள் அம்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்தினை ஒழுங்கு படுத்துவதற்காகவும் நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் நகர்ப் பகுதியில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளை நாம் விசேடமாக கடமையில் ஈடுபடுத்துவதன் ஊடாக போக்குவரத்து சீர் திருத்ததை எதிர்ப்பார்க்கின்றோம்.
இதனை விட இக்காலப்பகுதியில் குடி போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்ய விசேட திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
குறிப்பாக நகரப் பகுதிகளில் சன நெரிசல் இந் நாட்களில் காணப்படும் நிலையில் பணப்பையை களவாடுதல், பயணப் பொதிகளைக் கொள்ளையடித்தல் போன்ற சிறு சிறு சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க ஒவ்வொரு நகரப் பகுதியிலும் சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் இவ்வாறான சன நெரிசல் மிக்க இடங்களுக்கு வரும் பொது மக்கள் தம்முடன் சிறுவர்களைக் கூட்டி வருவார்களாக இருந்தால் அது தொடர்பிலும் தமது உடைமைகள் தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாம் பொது மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இந் நிலையில் இந்த பண்டிகைக் காலத்தில் விபத்துக்களைக் குறைக்கவும் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் மிக அவதானமாக செயற்படுமாறு பொது மக்களை நாம் கோருகின்றோம் என்றார்.


0 Comments