அபு றஹ்மான்
சமீபகாலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. குறிப்பிட்ட சில செய்திகள் பல்கலைக்கழகம் நிருவாகம், அதன் உபவேந்தர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அதேவேளை வேறு சில குறிப்புக்கள் தனிப்பட்ட சில விரிவுரையாளர்களை மையப்படுத்தியது. ஆனால் இந்தச் செய்திகள் அனைத்தும் தென்கிழக்குப் பல்கலைக்கத்தின் தரத்திற்கும் கௌரவத்திற்கும் இழுக்கினை ஏற்படுத்தியுள்ளன. இச் செய்திகள் வெளிவருவதன் பின்புலத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொழிற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பல்கலைக்கழக மட்டத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்களது நலன்கருதி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அமைக்கப்படுவது வழக்கம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரையில் இவ்வாறான சங்கங்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு செயற்பாட்டில் இருந்ததுடன் ஆசிரியர்களின் ஒற்றுமையின்மையால் அதன் செயற்பாடுகள் சில காலங்களில் முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது பல்கலைக்கழக ஆசிரியர் நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சில பிரச்சினைகள் காணப்பட்டன.
இந்தப்பின்னணியில் பல்கலைக்கழக ஆசிரியர் நலன்கருதி தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமொன்று அமைக்கப்படுவதற்கான ஆலோசனைகள் தற்போதய உபவேந்தரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய அமைக்கப்பட்டதே வுயுளுநுரு என அழைக்கப்படும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகும்.
இச்சங்கம் அமைக்கப்பட்ட அதன் ஆரம்பக் கூட்டத்தொடரில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் நலன் நிமிர்த்தம் ஒரு ஐக்கியப்பாட்டுடன் செயற்படுவது என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதேவேளை ஆசிரியர் சங்கம் அமைக்கப்பட்ட போது திறந்த தன்மையுடன் ஆசிரியர்கள் இணைந்து தமக்கான நிருவாகிகளையும் தெரிந்துகொண்டனர். தெரிவு செய்யப்பட்ட நிருவாகிகளும் ஆசிரியர்களின் நலன்களுக்கான தாம் எதிர்காலத்தில் செயற்படபோவதாக உறுதிமொழி வழங்கியதும் மறுப்பதற்கில்லை.
ஆனால் ஆசிரியர் சங்கம் உருவாக்கப்பட்ட நோக்கம், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் வெகு சீக்கிரத்தில் தகர்ந்துபோயின. ஆசிரியர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் அல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசிரியர் சங்கத்தின் சில நிருவாக உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர். அதற்கமைய குறித்த ஆசிரியர் சங்கம்சாரா உறுப்பினர்களின் நலன்களோடு மட்டும் ஆசிரியர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இப்போக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சுயாதீனத் தன்மையில் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதன் விளைவுகளையே நாம் இன்று ஊடகங்களின் பார்க்கின்றோம்.
இவ்வாசிரியர் சங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து ஆசிரியர்களின் நலன்களுக்காகவன்றி தனியாள் விருப்பு வெறுப்புக்களை அடிப்படையாகக் கொண்டதாக அது மாற்றம் கண்டுள்ளது. தனிப்பட்ட நலன்களுக்காக உபவேந்தருக்கு எதிராக சோடிக்கப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்களை வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்புவதன் மூலம் ஆதரவு தேடுகின்ற முயற்சியினை இச்சங்கத்தினூடாக சிலர் முடிக்கிவிட்டுள்ளனர். இதனால் பெருந்தொகையான பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆதரவுத் தளத்தினையும் இச்சங்கம் தற்சமயம் இழந்துள்ளது.
மேலும் தம்மால் குற்றம்சாட்டப்பட்ட விடயங்களை நிரூபிக்க முடியாத நிலையில் ஆசிரியர் சங்கத்தின் நியமங்களுக்கு முரணான வகையில் பல்கலைக்கழக உபவேந்தரை பதவிவிலகுமாறு கோரி கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தவகையில் இப்பல்கலைக்கழத்தின் நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து இப்பல்கலைக்கழகத்தினைப் பாதுகாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் முன்வர வேண்டும். ஆசிரியர் சங்கம் என்ற போர்வையில் பல்கலைக்கழகத்தின் கௌரவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று. குற்றச்சாட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை விசாரணைக்குட்படுத்துவதற்கு சட்ட நடைமுறைகள் பல உள்ளன. இதனைத் தவிர்த்து சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் சிறு பிள்ளைத்தனமான செய்திகளை வெளியிடுவது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல. இத்தகையதொரு இழிவான சங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.


0 Comments