முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்:
இசை முரசு ஈ.எம். ஹனிபா காலமான செய்தி அறிந்து மிகக் கவலையடைந்தேன். இஸ்லாமிய தமிழ் இசைத் துறைக்கு அவராற்றிய பணி அளப்பரியதாகும்.
சில்லென்று ஒலிக்கும் அன்னாரது குரல் வளம் மிக்க இஸ்லாமிய கீதங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் கண்டும் கேட்டும் மகிழும் அன்னாரது அயல் நாடான எமது இலங்கைக்கு அவர் தமது வாத்தியக் குழுவினருடன் பல தடவைகள் வருகை தந்து இசைக் கச்சேரிகளை நடாத்தி மக்கள் மத்தியில் பெயரும், புகழும் பெற்றுத் திகழ்ந்தவர்.
அவரது இசையை விரும்பி கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் குழாம் சினிமாத்துறையிலும் இருக்கின்றது. நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் இறுதியில் இவ்வுலக வாழ்வை முடித்து நிலையான மறுமை வாழ்விற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனபதியை நிரந்தரமான தங்குமிடமாக ஆக்கி அருள்வானாக!.
அன்னாரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அபிமானிகளுக்கும் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.


0 Comments