-எம். எஸ். முஸப்பிர்
வென்னப்புவ நைனாமடம் பிரதேசத்தில் வைத்து இருநபர்களால் தாக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இணைப்புச் செயலாளர், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்வத்தில், சுஜித் பிரியந்த அப்புஹாமி என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தான் வீட்டிலிருந்து நைனாமடம் நகருக்கு வந்த போது, முதலில் ஒருவர் வந்து கைத்துப்பாக்கியினால் தனது முகத்தில் தாக்கியதாகவும் அதன் பின்னர் வந்த மற்றொருவர் வாளினால் தன்னைத் தாக்கியதாகவும் தாக்குதலுக்குள்ளானவர் வென்னப்புவ பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தன்னைத் தாக்கியவர்களுள் ஒருவரைத் தான் இனங்கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அரசியல் நோக்கமுடையதேயன்றி தனிப்பட்ட விரோதம் கொண்டதல்ல எனவும் தாக்குதலுக்குள்ளானவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலினால், இணைப்புச்செயலாளருக்கு முகத்திலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


0 Comments