| பசுமையான இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன தேசம் கேரளாதான். |
| தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில், கேரளா பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் தங்குவதற்கும் குளிர்ச்சியான இடம். இங்கு சுற்றுலா செல்பவர்கள், கண்டிப்பாக சைலண்ட் வேலியை பார்க்காமல் வரமாட்டார்கள். சைலன்ட் வேலியில் குடிகொண்டிருக்கும் அழகு குறித்து சொல்வதற்கு வார்தையில்லை. கோவையில் இருந்து 113 கி.மீ. தொலைவில், கேரள எல்லையில் உள்ள சைலன்ட் வேலிக்குச் செல்ல வேண்டுமென்றால், மனதில் 'தில்’ வேண்டும். சைலன்ட் வேலியின் நுழைவு வாயிலில் காரை பார்க் செய்துவிட்டு, ஜீப்பில்தான் பயணிக்க வேண்டும். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் அனுமதி. ஒரு ஜீப் ஓட்டுநர், ஒரு கைடு பாதுகாப்புடன் நம்மை அழைத்துச் சென்றுவருவார்கள். கேரளக் காடுகளில், யானைகளின் வழித்தடத்தின் இறுதி எல்லை சைலன்ட் வேலிதான் என்பதால், செல்லும் வழியில் நிச்சயம் யானைகளைக் காணும் வாய்ப்பு உண்டு. மலபார் அணில்கள், நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், சிறுத்தைகள், புலி என்று தரிசனம் கிடைக்கலாம். ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா எல்லையின் முடிவில், 'கோர் ஃபாரஸ்ட்’ எனும் அடர்ந்த காட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. இங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மனதில் திடமும், கால்களில் வேகமும் உள்ளவர்களுக்கான ஏரியா இது. இங்கு ஆங்காங்கே கமெரா வைக்கப்பட்டிருப்பதால், காட்டு விலங்குகளுக்குள்ளே நடக்கும் டெரர் ஆன விடயங்கள், அப்படியே கமெராவில் பதிவாகிவிடுகின்றன. சைலன்ட் வேலியின் அலுவலக முகப்பில், புலி ஒன்று யானையை வேட்டையாடி ரசித்து ருசித்துச் சாப்பிடுவதை அப்படியே படம் பிடித்து வைத்திருக்கிறார்கள். இங்கு 250 வயதான அரிய மருந்துத் தன்மைகொண்ட மரங்களும் உண்டு. இங்குள்ள 125 அடி உயர டவரில் ஏறி நின்று மொத்தமாக சைலன்ட் வேலியின் அழகை ரசிக்கலாம். 3 மணி நேரம் காட்டுக்குள் ஜீப்பில் த்ரில் பயணம், சாகச விரும்பிகளுக்கானது. |





0 Comments