மன்னார் உயிலங்குளத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் தீவுப்பகுதிக்குள் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு வந்த போது மன்னார் வங்காலை பிரதான வீதியில் நின்ற விசேட அதிரடிப்படையினர்(எஸ்.ரி.எப்) மாடுகளை மன்னாருக்குள் கொண்டு வர விடாது மாட்டை கொண்டு வந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை அச்சுறுத்தி மீண்டும் உயிலங்குளத்திற்கு திருப்பி அனுப்பிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 5.30 அளவில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
மன்னார் நகர பகுதியில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றிற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விற்பனைக்காக மன்னார் உயிலங்குளம் கிராமத்தில் இருந்து 7 மாடுகளை மன்னார் நோக்கி கொண்டு வந்துள்ளனர்.
மன்னாரில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் மன்னார் நகர சபையின் அனுமதியுடனே குறித்த மாடுகளை மன்னார் நோக்கி கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது வங்காலை பிரதான வீதியில் நின்ற விசேட அதிரடிப்படையினர் மாட்டை கொண்டு வந்தவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மன்னாரில் இனி மாடு வெட்ட அனுமதிக்க மாட்டோம் எனவும், இது பௌத்த நாடு. மாடு வெட்டுவது பௌத்த மதத்திற்கு எதிரானது என குறித்த விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடும் வாக்குவாதத்தின் பின் மீண்டும் குறித்த 7 மாடுகளையும் உயிலங்குளத்திற்கு கொண்டு செல்ல அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அச்சத்தின் காரணமாக அவர்கள் மீண்டும் மாடுகளை உயிலங்குளம் நோக்கி நடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.
சுமார் 9 விசேட அதிரடிப்படையினர்(எஸ்.ரி.எப்) அவ்விடத்தில் கடமையில் நின்று இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் குறித்த மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு இவ்விடையம் தெரிய வந்தவுடன் இப்பிரச்சினை தொடர்பாக குறித்த உரிமையாளர் மன்னார் காவற்துறை நிலையத்துடன் தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் போது குறித்த உரிமையாளர் மன்னார் நகர சபையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி பெற்று குறித்த மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்தி வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை தனது ஒப்பந்தம் உள்ளதாகவும் மன்னார் காவற்துறையினாிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மன்னார் காவற்துறையினாின் வழித்துணையுடன் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாடுகள் உயிலங்குளத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சட்டத்துக்கு அமைவாகவும், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய முறையில் செலுத்துகின்ற போதும் அவர்களுக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 Comments