முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கியும் மீண்டும் அவர் வெட்கமில்லாது, பிரதமர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றார் என அவரிடம் தான் கேள்வி எழுப்ப நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதியையும் என்னையும் ஒரே மேடைக்கு கொண்டு வரும் தரகு வேலையிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மைத்திரிபால யார் என்பதை சரியாக அறியாது செயற்பட்டு வருகின்றனர்.
தோல்வியடைந்த ஜனாதிபதி ஹெலிக்கொப்டரில் மெதமுலன கிராமத்திற்கு சென்றார். அன்று நான் தோல்வியடைந்திருந்தால், கையில் விலங்கிட்டு, சிறையில் தள்ளி கொடூர சித்திரவதைகளை செய்ய தீர்மானித்திருந்தனர்.
அதற்கு தேவையான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவின் மூலம் நான் அறிந்து கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி மெதமுலன கிராமத்திற்கு சென்ற பின்னரே அவர் அங்கு ஹெலிக்கொப்டரில் சென்றதை அறிந்து கொண்டேன்.
நான் அதற்கு அனுமதியை வழங்கியதாக கூறுகின்றனர். அப்படியான அனுமதி எதனையும் நான் வழங்கவில்லை. அதனை முன்கூட்டியே அறிந்திருந்தால், ஹெலிக்கொப்டரில் செல்ல நான் அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.


0 Comments