Subscribe Us

header ads

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி)

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முழு உலகையும் தன் விரல் நுனியால் ஆட்டிப்படைக்கிறது ஊடகம். 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதி வேக தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேறிவருகின்றன. சமூகத்திற்கு தொலை தூரத்திலிருந்த ஊடகம் இன்று எம் வீட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு அடுக்களைக்கும் குளியலறைக்கும் கூட வந்துவிட்டது.
தொடர்பறுந்து காணப்பட்ட மனித சமூகத்தை நாட்டு மக்கள் என்று மட்டுமல்லாது உலக மக்கள் என்ற உறவுமுறையில் கூட பிணைப்பை ஏற்படுத்திவிட்டது இவ்வூடகங்கள். யாரும் யாருடனும் எங்கிருந்தும் கணப்பொழுதில் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை அறியவும் கருத்துப் பரிமாறவும் என பல்வேறு வசதி வாய்ப்புக்களை ஊடகங்கள் அமைத்து தருகின்றன என்றால் அது மிகையாகாது.
ஊடகங்களின் மூலம் மனித சமூகம் அளவில்லா நன்மைகளை அனுபவிப்பது கண்கூடு. எனினும் தற்போதைய நிலையை அவதானித்தால் ஊடகங்களின் மூலம் நன்மைகளை பெறுவதை விடவும் தீமைகளை பெறுவதே அதிகம் என்பதை மறுக்க முடியாது.
முன்பு ஏகாதிபத்திய அரசுகள் இராணுவப் படை எடுப்பின் மூலம் பிற நாடுகளை காலணியாதிக்கம் செய்து தமது மதத்தையும் சிந்தனையையும் திணித்தன. வளங்களை சூரையாடின. ஆனால் இன்று ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாடுகளின் ஒத்துழைப்புடன் மதப் பிரச்சாரமும் கலாசார திணிப்பும் வளச் சுரண்டல்களும் தங்கு தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் மக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதிலும் அரசுக்கெதிராக அவர்களை ஒன்று திரட்டுவதிலும் பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்டுத்துவதிலும் பாரிய பங்கு வகிப்பவை ஊடகங்களே என்பதை நாம் மறுக்க முடியாது. மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் வெடித்த மக்கள் புரட்சிகளுக்குப் பின்னால் பாரிய அளவில் ஊடகங்களே தொழிற்பட்டன என்பதை நாம் அறிவோம்.
அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊடக ஒழுங்கானது அதனை உருவாக்கியவர்களையே உதறித் தள்ளிவிட்டு சட்டதிட்டங்கள் உச்சவரம்புகள் ஒழுக்ககோவைகள் என்பவற்றை புறந்தள்ளிவிட்டு தட்டிக்கேட்க எவருமில்லை என்ற வகையில் தறிகெட்டு அலைகிறது என்பது கண்கூடு. இதன் விளைவாக முழு உலகமும் தார்மீகத்தினதும் சத்தியத்தினதும் பலி பீடமாக மாறி வருகிறது.
அந்தவகையில் புதிய ஊடக ஒழுக்க கோவையொன்றை விரைவில் இலங்கை அரசாங்கமும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தேசக் கோவை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் ரம்புக்கல்ல தெரிவுத்துள்ளார்.
இவ்வாறு நாடுகளும் அமைப்புக்களும் எப்படி ஊடகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கின்றன. இது பற்றி தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல தரப்பட்ட வாதப்பிரதிவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் இஸ்லாம் மனித சமூகத்தின் அனைத்து துறைகளுக்குமான வழிகாட்டி என்ற வகையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த முறையில் பொருத்தமான வகையில் உரிய ஊடக செல் நெறியை முன்கூட்டியே வகுத்து தந்து விட்டது.
ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள் ஒழுக்கங்கள் குறித்து குர்ஆனும் ஹதீஸூம் மிகச் சிறப்பாகப் பிரஸ்தாபிக்கின்றன. அவற்றில் மிகப் பிரதானமான ஒரு சிலவற்றை மாத்திரம் இங்கு நோக்குவோம்.

Post a Comment

0 Comments