ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்
தார்மீகப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு இனங்களுக்கிடையே
நல்லுறவையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர-சகோதர
இனங்களுக்குள் இனவாத சர்ச்சைகளை மூட்டி நாட்டில் மறுபடியும் அமைதியின்மையை
தோற்றுவிக்கக் கூடாது.
அண்மைக்காலமாக
’சக்தி டிவியின்’ மின்னல் நிகழ்ச்சியின் ஊடாக ஸ்ரீ ரங்கா எனும் ’ஊடக
நாரதர்’ முஸ்லிம் சமூகத்தை குறி வைத்தும், முஸ்லிம் சமூகத்தின் அரசியலை
மலினப்படுத்தியும், முஸ்லிம் தலைவர்களை கேவலப்படுத்துவதுமாக தனது இனவாத
நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதானது இலங்கையின் ஜனநாயகத்தின்
மீதும் ஊடக தர்மத்தின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஊடக
தர்மம் மற்றும் மனித தர்மம் தெரியாத ஒரு ஊடகராக மின்னல் நிகழ்ச்சியில்
ஸ்ரீ ரங்காவின் செயற்பாடுகள் அநாகரிமான முறையில் அமைந்திருப்பதானது, ஊடக
ஒழுக்கவியலையும், நடு நிலையையும் அப்பட்டமாக மீறுவதாய் காணப்படுகிறது.
கடந்த
மின்னல் நிகழ்ச்சியானது ரங்காவின் முஸ்லிம் விரோதப் போக்கையும், அவரின்
ஒழுக்கமற்ற ஊடகச் செயற்பாடுகளையும் குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்ற
மஹாராஜா ஊடக நிறுவனத்தாரின் ‘கெமராக்கள்’ மூலமே மக்களுக்கு மிகத் தெளிவாக
இன்னும் துல்லியமாக படம்பிடித்துக் காட்டியதெனலாம்.
ரங்கா
இனியாவது முஸ்லிம்கள் மீதான இப்படியான குள்ளத்தனமான சேட்டைகள்
விடுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதை விட முக்கியமானது எமது
அரசியல் சகோதரர்கள் முஸ்லிம்களுக்கு இன்னலை ஏற்படுத்த நினைக்கிற
‘மின்னலுக்கு’ செல்லாமல் அந்த ஓரவஞ்சனை நிகழ்ச்சியை அறவே புறக்கணிக்க
வேண்டும்.
முஸ்லிம்களின்
பொறுமைக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. முஸ்லிம்களை சீண்டுவதை தனது
வாடிக்கையாகக் கொண்ட ரங்காவுக்கு, அன்று அலரி மாளிகையில் கௌரவ அமைச்சர்,
நண்பர் றிஷாத் பதியூதீன் விட்ட ‘பளார்’ நியாயமானதுதான் என்பதை மின்னல்
பார்க்கின்றவர்கள் ஆழமாகப் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
’மின்னல்’
நிகழ்ச்சியை பார்க்கின்றவர்களை மடையர்களாகவும், தன்னை அதி மேதாவியாகவும்
ரங்கா நினைத்துக் கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை. ஒரு இனத்தையும்,தனி மனித
சாடல்களையும் மூலதனமாக்கி சக்தி நிறுவனத்தினர் நடாத்தும் இப்படியான
குரூரத்தனமான நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த
கோரிக்கைகளை மீறி அப்படிச் செல்பவர்கள் ஸ்ரீ ரங்காவின் கபடத்தனங்களை நன்கு
தெரிந்து கொண்டு பொதுத் தளத்தில் முஸ்லிம் சமூகத்திற்கான தார்மீகப்
பொறுப்புணர்ச்சியுடன் மழுப்பாமல் தைரியமாக தம் பக்க நியாயங்களை பேச
வேண்டும். பேசத் திராணியில்லாதவர்கள் அங்கு செல்லக் கூடாது.
இருந்த
போதிலும், நான் இந்த சதி வலைப்பின்னலுடன் கூடிய மின்னல் நிகழ்ச்சியை
பார்த்த வகையில், ரங்கா நிகழ்ச்சிக்கு வருகின்ற முஸ்லிம் அரசியல்
அதிதிகளிடம் தனி நபர் சீண்டல்களுடன் கூடிய குறுக்குக் கேள்விகளைக் கேட்டு,
குறித்த அரசியல் அதிதி ஆரோக்கியமான பதிலொன்று சொல்ல வருகையில், அவர்களைப்
பேச விடாது மீண்டும் தனது கபட நாடகத்தை மிகக் கச்சிதமாக அரங்கேற்றிக்
கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவிருக்கிறது.
ஊடக
தர்மம் மருந்துக்கும் இல்லாத, சண்டை மூட்டி விடும் இந்த மின்னல்
நிகழ்ச்சியை சம்பந்தப்பட்டவர்கள் தடை செய்வதோடு, மக்களுக்குள் மற்றுமொரு
பிரிவினைக்கு வித்திட நினைக்கும் ரங்கா போன்ற கோமாளி அரசியல் தரகர்களை இந்த
நல்லாட்சியின் மைந்தர்கள் தலையில் குட்டுப் போட்டு தட்டிப் பணிக்க
வேண்டும்.
மேலும்,
ஸ்ரீ ரங்காவின் ‘மின்னலுக்கு’ வாடிக்கையாக முழங்கப் போகும் எமது முஸ்லிம்
அரசியல் சகோதரர்கள் இனியாவது இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்து, இந்த
நிகழ்ச்சிக்கு தங்களது அதிகபட்ச எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டுமென மிகத்
தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.


0 Comments