அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.
மக்கள் மத்தியில் எனக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் அரசாங்கம் என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது.
அதி சொகுசு விமானம் ஒன்றை கொள்வனவு செய்து பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
விமான நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட விமானத்தில் சில ஆசனங்களை அகற்றி முக்கிய பிரபுக்கள் பயன்படுத்தக் கூடிய ஓர் தொகுதியை விமானத்தை விற்பனை செய்யும் நிறுவனம் இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்கத் திட்டமிட்டிருந்தது.
இந்த விசேட தொகுதிக்கான செலவு 15 மில்லியன் டொலர்கள் என்ற போதிலும் அதனை இலவசமாகவே குறித்த நிறுவனம் வழங்கவிருந்தது.
இந்த விடயத்தை அரசாங்கத் தரப்பினர் பிழையான வகையில் மக்கள் முன் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் 100,000 மில்லியன் ரூபா இந்த ஆண்டு செலவிற்காக ஒதுக்கியிருந்தது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை.
2015ம் ஆண்டுக்காக 9593 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது ஜனாதிபதியின் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமான நிதி அல்ல.
இதில் பல்வேறு கருமங்களை ஆற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 2750 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைகள் குறித்தும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சில மாளிகைகள் அந்நிய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. சில முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரினால் கட்டப்பட்டவை.
நான் இந்த ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்கவில்லை.
வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கின்றேன்.
அனைத்து வாகனங்களையும் நாம் ஒப்படைத்துவிட்டே வெளியேறினோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


0 Comments