கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு வேண்டுகோள்.
அன்பின் புத்தளம்வாழ் சகோதரர்களே, பேஸ்புக் நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்
மாற்றம் வேண்டும்! மாற்றம் வேண்டும்! என்று முழங்கிய இலங்கை மக்களின் முயற்சியால் அரசாங்கம் மாறிவிட்டது. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையால் அதிகூடிய வாக்குப் பலத்தினால் இந்த அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது. இன்னும் 100 நாட்களில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற, மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை தேர்தல்கள் எமது ஊரைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தல்களாகும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைதிரீபால சிரிசேனாவை புத்தளம் தேர்தல் தொகுதியில் நான்கு கட்சிகள் கூட்டு சேர்ந்து சுமார் 37,000 மேலதிக வாக்கு வித்தியாசத்தில் புத்தளம் மாவட்ட மட்டத்திலும் வெற்றிபெறச் செய்ததைப் போன்று எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஜந்து கட்சிகள் ஒற்றுமையோடு எமது தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றுத் தருமா என்பது கேள்விக்குறியே.
ஏனெனில், எமது ஊரின் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியில் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலையோ, மாகாண, உள்ளூராட்சி மன்ற தேர்தல்களையோ சந்திப்பதென்பது வரலாறாக பதிய வேண்டிய விடயமாகும். ஏனென்றால் இப்பொழுதிருந்தே எமது ஊரின் அரசியல்வாகிகளுக்கிடையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, தற்போது அதிகாரத்துடன் இருக்கும் அரசியல்வாதியை ஓரங்கட்ட வேண்டுமென்று ஒருசில அரசியல்வாதிகளும், எதிர்வரும் தேர்தல்களில் தலைமை பொறுப்பு தனக்கே கிடைக்க வேண்டுமென்று இன்னும் சில அரசியல்வாதிகளும் போட்டிபோட்டுக்கொண்டிருக்கி ன்ற இத் தருணத்தில், சகோதரர்களாகிய நாம் இத் தேர்தலை எப்படி ஒற்றுமையாக கையாள்வது என சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஆகவே, இத் தருணத்தில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ சார்பாக அல்லாமல் எனது சொந்த கருத்தை உங்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
சில நாட்களுக்கு முன் நமது நாட்டில் நமது சமூகத்துக்கு நிகழ்ந்த அட்டூழியங்களைத் தொடர்ந்து, இன்னும் 100 நாட்களுக்குள் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் கட்டாயமாக புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெறவேண்டிய பொறுப்பு எம் சமூகத்துக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவாலாகும். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது முழு சமூகமும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து, இதுதான் எமது சமூகத்தின் ஒற்றுமை என செய்தும் காட்டியதை மீண்டும் நினைவுகூறுகின்றேன்.
இதுபோன்று பாராளுமன்றத் தேர்தலில் இவ்வொற்றுமையைக் கடைபிடித்தால் இன்ஷாஅல்லாஹ் எமது தொகுதிக்கு ஒன்று அல்லது இரண்டு பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், புத்தளத்தில் இருக்கின்ற கட்சி வேறுபாடுகளுக்கு மத்தியில் இது சாத்தியப்படுமா? என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஏனெனில், மக்கள் ஒற்றுமைபட்டாலும் நம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைப்படுவார்களா? என்ற வினாவுக்கான விடை தேடுவது அவசியமானதும் அவசரமானதுமான விடயமாகும்.
ஆகவே, ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் பிரிந்துசெல்லும் பட்சத்தில் பெரும்பான்மை சமூகம் அதிகாரங்களைக் கைப்பற்றும் சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளன. முன்னைய தேர்தல் முடிவுகளை அலசிப் பார்க்கும்பொழுது கடந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் போட்டியிட்டாலும் ஒருவருக்குக் கூட மாகாண சபை பிரதிநித்துவம் கிடைக்கவில்லை. ஏதோ விகிதாசார அடிப்படையில் கொஞ்சம் வாக்குகளினால் ஸ்ரீ.ல.மு.கா.வின் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களும், போனஸ் அடிப்படையில் என்.டீ.எம். தாஹிர் (ஐ.ம.சு.கூ.) அவர்களும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நகர சபை தேர்தலில் கூட கே.ஏ. பாயிஸ் அவர்களின் காய் நகர்த்தலினால் மூன்று விருப்பு வாக்குகளையும் அவரது இலக்கத்திற்கு எமது சமூகம் புள்ளடியிட்டதன் காரணமாக அதிகபட்ச விருப்பு வாக்குகளால் தலைவரானார். இரண்டாவது இடத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் சிறு வாக்கு வித்தியாசத்தினால் பிரதி தலைவரானார்.
இக் கள நிலவரங்களை அவதானிக்கும்போது, எமது சமூகம் ஒற்றுமையாக சிந்தித்து செயல்படாவிட்டால் நமது ஊரின் ஆட்சி அதிகாரங்கள் பிற சமூகத்துக்குக் கைமாறும் ஆபத்து உள்ளது சந்தேகமின்றி தெளிவாகின்றது.
ஆகவே சகோதரர்களே ! இளைஞர்களே ! நம் எதிர்கால சந்ததியினரை கருத்திற்கொண்டு கட்சி வேறுபாடுகளை மறந்து, குரோதங்களைத் துறந்து, கட்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுக்காமல், தமது சுயநலத்துக்கும் இடங்கொடுக்காமல், அந்த கட்சியின் அமைப்பாளரை ஆதரித்தால்தான் எனது தொழில் நடக்கும், இந்த கட்சியின் அமைப்பாளரை ஆதரித்தால்தான் எனக்கு அதிகாரம் கிடைக்கும், கௌரவம் கிடைக்கும் என்று பாராமல், பெயரளவில் மட்டும் நான் அரசியல்வாதி என தன்னை இனங்காட்டிக்கொண்டிருக்கின் ற அரசியல்வாதிகளை ஆதரிக்காமல், எமது சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற, ஊரில் வரும் பிரச்சினைகளை தட்டிக்கேட்கின்ற, மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல்வாதிகளை இனங்கண்டு, அதேபோன்று அரசியலுக்கு வராமல் வெளியில் இருந்துகொண்டு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற படித்தவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் என்று இன்னும் பலரை ஒன்றுசேர்த்து சுயேட்சைக் குழுவாக போட்டிபோட்டு பாராளுமன்ற பிரநிதித்துவம், மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை பிரநிதித்துவம் என எல்லாவற்றையும் பெற்று அமையப்போகும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும்.
இம் முயற்சிக்கு எமது அரசியல்வாதிகள் ஒற்றுமைபடாத விடத்து, பின்வரும் முயற்சியை நாம் மேற்கொள்ள முடியும். தற்போதைய அரசியல் கட்சியின் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசித்து கட்சி வேறுபாடுகளை மறந்து அவர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு நமது ஊரின் ஒற்றுமைபற்றி விளக்கமளித்து அரசியல்வாதிகளின் விட்டுக்கொடுப்புடன்,
1) ஒரு கட்சிக்கு ஒன்றோ அல்லது இரண்டோ பாராளுமன்ற பிரதிநித்துவங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் குறிப்பிட்ட அக் கட்சிக்கு வாக்களித்தல்,
2) அதனைத் தொடர்ந்து ஒன்றோ அல்லது மூன்று மாகாண சபை பிரநதிநித்துவத்தைப் பெறுவதற்காக இன்னுமொரு கட்சிக்கு எல்லோரும் சேர்ந்து அக் கட்சிக்கு வாக்களித்து மாகாண சபை பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்தல்.
3) நகர சபை, பிரதேச சபை தேர்தல்களில் இன்னுமொரு கட்சிக்கு ஆதரவு வழங்கி அக் கட்சியிலிருந்து எமது உறுப்பினர்களைத் தெரிவுசெய்து இவ்வுறுப்புரிமைகளை உறுதிசெய்தல்.
இவ்வாறு, எல்லா கட்சிகளுக்கும் பகிர்ந்து வாக்களித்து அமையப்போகும் அரசாங்கங்களோடு பேச்சுவார்த்தையின் மூலம் எமது சமூகத்துக்கான ஊருக்கான சேவைகள், அபிவிருத்திகள், கல்வி நடவடிக்கைகள் என பல விடயங்களை நம் மக்களின் ஒற்றுமையோடு நடைமுறைக்குக்கொண்டு வர முடியும் என நம் சமூகத்தின் நன்மை கருதி எனது தனிப்பட்ட கருத்தாக இதனை பதிவிடுகின்றேன்.
இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவதோடு, உங்கள் அபிப்பிராயங்களையும் முகநூல் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
வஸ்ஸலாம்
உங்கள் சகோதரன்
ஏ.எப்.எம். ரசீம்
0 Comments