சீனாவில் காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்ற மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் காதலனை
சந்திக்க மாணவி ஜியோசின் மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்றுள்ளார். அப்போது
மதில்சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
மாணவி ஜியோசின் உடல் மின்சார வேலியில் இறந்தநிலையில் சக மாணவர்களால்
காலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு
பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக விடுதியில் மற்றவர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக மின்சார வேலி
அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவி ஜியோசின் யாரோ ஒருவரை சந்திக்க சென்றபோது
உயிரிழந்துள்ளார் என்று அவருடன் படிக்கும் சக மாணவி ஒருவர்
தெரிவித்துள்ளார். ஜியோசினின் தோழி குயிங் வான் பேசுகையில், ஜியோசின் எங்கே
சென்றார் என்று எனக்கு தெரியாது, அவர் என்னிடம் எதையும் கூறவில்லை.
ஒருவேளை அவருடைய காதலன் அல்லது வேறு யாரேனும் ஒருவரை சந்திக்க வெளியே செல்ல
முயற்சி செய்து இருக்கலாம். என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், வெளியாட்கள்
சிலர் பல்கலைக்கழகத்திற்குள் வந்த சம்பவத்தை அடுத்து நாங்கள் மின்சார
வேலியை அமைத்தோம். நாங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்காகவே அதனை செய்தோம்.
ஆனால் மாணவி ஒருவர் வெளியே செல்ல இந்த முயற்சியை செய்வார் என்று நாங்கள்
கற்பனை செய்துக் கூடபார்க்கவில்லை. வேலியில் மின்சாரம் இருப்பது
அனைவருக்கும் தெரியும். என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று இணையதள செய்திகள் வெளியாகியுள்ளது.


0 Comments