உலகக் கிண்ண போட்டிக்கு பாகிஸ்தான்
அணியின் தலைவராக இருக்க விரும்பவில்லை என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட
முடியாததால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது
அணியில் இருந்து மிஸ்பா விலகினார். இந்நிலையில் அப்ரிடி அணித் தலைமை
பொறுப்பை ஏற்றிருந்தார்.
உலகக் கிண்ண போட்டி வரை பாகிஸ்தான்
அணியின் தலைவராக மிஸ்பா-உல்-ஹக் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியுடனான தோல்விக்குப் பிறகு மிஸ்பா உல்கஹ் கருத்து தெரிவிக்கையில், சமீபகாலமாக என்னால் அதிக ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை விளையாட முடியவில்லை என்று எனக்கே நன்றாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நாட்டையும் மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அணியை கடினமான சூழ்நிலைக்கு தள்ள
விரும்பவில்லை. எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவெடுக்க
வேண்டும். அணியில் தலைவராக தொடர எனக்கு விருப்பமில்லை என தெரிவித்தார்.
மிஸ்பாவின் இந்த அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சஹாரியார் கான் கூறுகையில்;
உலகக் கிண்ண போட்டி வரை மிஸ்பா-உல்-ஹக்
தலைவராக இருப்பார் என கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது. இதற்குப் பிறகு
அவர் வேறு முடிவு எடுப்பது அவரது கையில் உள்ளது. அவர் சரியாக விளையாடவில்லை
என்று நாங்கள் எப்போதும் குறை கூறியது இல்லை.
மிஸ்பா அணிக்கு தலைமை வகித்தால்
அவருக்கு அனைத்து வகையிலும் உதவிக்கரமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
இருக்கும் அதே நேரத்தில். அவரை எந்த வகையிலும் நாங்கள்
கட்டாயப்படுத்தவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள்
போட்டியில் விளையாடாமல் இருந்தது மிஸ்பாவின் முடிவுதான் என்றார்.


0 Comments