அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு நபர்கள் அவரவர்கள் வாழும் நாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பெண்கள் தொடர்பாக கேவலமான கருத்துக்களையும், வீடியோப் பேச்சுக்களையும் வெளியிட்டு வருகிறார்கள் அவற்றில் வெளிநாட்டுக்குச் சென்ற பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்றும் இங்கே தவறான பாதையில் ( பாலியல் தொழில் செய்யவே) வருகிறார்கள் அது, இது என்று வாய்க்கு வந்தபடி பரப்புரை செய்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக வருகின்ற பெண்கள் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு, கொடுமைகளுக்கு ஆளாகுகின்றார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அப்படி சம்பளம் கொடுக்காமல், சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தப்படும் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அப்படி வெளியேறும் பெண்கள் எங்கே செல்வது...???
அவர்கள் செல்ல வழிதெரியாது, வழிகாட்ட ஆள் இல்லாது என்ன செய்வதென்று தெரியாது திக்கு முக்காடி நிற்கும் நிலையில் பெண்கள் மீது கேவலமான குற்றங்களைச் சாட்டும் இவர்களைப் போன்ற ஆண்கள் பெண்களின் இந்த இக்கட்டான சூழ் நிலையை தமக்கு சாதகமாகப் பயண்படுத்தி “ உங்களை எம்பசிக்கு அனுப்புகிறோம் என்னோடு வாருங்கள்” என்று ஏமாற்றிக் அழைத்துச் சென்று அவர்கள் மீது தங்களது பாலியல் தேவையை திணிக்கின்றார்கள் இதுதான் இங்கே நடைபெறுகின்றதே தவிர பெண்கள் தவறாக நடக்கவில்லை. இவர்களைப் போன்ற ஆண்களே தவறான பாதையில் செல்கிறார்கள்.
இந்தக் கொடுமையைத்தான் நான் எழுதிய கவிதை ஒன்றில் சொல்லியிருந்தேன் அதாவது,
“ நொந்து நுாலானான எனக்கு
நம்மவன் ஒருவன் அறிமுகமானான்,
நல்லவனாக இருந்தான்,
நம்பி நானும் போனேன்,
எம்பசிக்கு அனுப்புகிறேன்
என் பசி கொஞ்சம் தீரு என்றான் அவனும்”
இப்படி இவர்களிடத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள் தாங்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகளில் பட்ட துன்பங்களை விடவும் கொடுமையான, கேவலமான கொடுமைகளை வேறு வழியில்லாமல் அனுபவிக்கின்றார்கள்.
ஆகவே...ஆண்களே...!!! உங்களுடைய சுயநலத்துக்காக, உங்களுடைய ஆசைகளுக்காக வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களைப் பயண்படுத்தாதீர்கள், உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து அவர்களது இன்னல்களைப் போக்குங்கள், அவர்களது உள்ளத்தை மட்டும் நோக்குங்கள், உடம்மை நோக்காதீர்கள்.
ஒரு தவறு நடைபெறுவதற்கு காரணகர்த்தாவாக நீங்களே இருந்து விட்டு அந்தத் தவறு நடந்த பின் அவர்களை நீங்களே தவறானவர்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்...???
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
0 Comments