-துறையூர் ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்-
1994-2005 ம் ஆண்டு வரை
இலங்கைத் திரு நாட்டை ஆண்டு பலரினது மனங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க,இம் முறை
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ அவர்களை விரைவில் நடாத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தும் கோடாரிக் காம்பாக மாறுவாரா? என்ற வினா பலரினது உள்ளங்களில் உதித்து விடைக்காய் காலம் கனியும் வரை காத்து நிற்கின்றன.
தற்போதைய அரசாங்கத்தை
வீழ்த்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலமிக்க உறுப்பினர்கள் எதிர்க்
கட்சிகளினுள் உள்வாங்கப்படுவதும் ஜனாதிபதித் தேர்தலில் மகுடம் சூட்ட சிறந்த முதன்மை அணுகுமுறைகளில் ஒன்றாக அமையும்.ஸ்ரீ
லங்கா சுதந்திரக் கட்சியை பல வருட காலம் தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்தவர்,நாட்டை இரு முறை ஆளும் அளவு செல்வாக்குடன்
இருந்தவர்,தற்போதைய
ஜனாதிபதியை மகிந்த ராஜ பக்ஸ அவர்களை ஜனாதிபதி எனும் அரியாசனத்தில் அமரச் செய்ததில்
முக்கிய பங்காற்றியவர் போன்ற விடயங்களை நன்கு ஆராயும் போது சிலரை அரசாங்கத்தை விட்டும் களைந்து தன் பக்கம்
ஈர்க்க எதிர் பார்க்கப் படும் அனைத்து பொது வேட்பாளர்களை விடவும் முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவே மிகப் பொருத்தமானவர் என்பதை
தெளிவாக எம்மால் அறிந்து கொள்ள இயலும்.
தற்போதைய
அரசாங்கத்தை வீழ்த்த பொது வேட்பாளர் ஒருவருக்கு எத் தகுதியுடையவர் வேண்டுமோ அத்தனை தகுதிகளும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவிடம் விஞ்சியே காணப்
படுகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற பலரினது கோசமும்,தற்போதைய ஜனாதிபதிக்கு 3ம் முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதில் சட்டச்
சிக்கல் உள்ளது போன்ற சர்ச்சை மிகுந்த கருத்துக்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரத்துங்கவின் பொது வேட்பாளர் தகுதியை
இழக்கச் செய்கிறது.
நிறைவேற்று
அதிகாரம் ஒழிக்கப் படும் போது 18 ம்
சீர்திருத்தத்தில் தற்போதைய ஜனாதிபதி மேற்கொண்ட திருத்தங்கள் இல்லாதொழிக்கப்
படுவதன் மூலம் ஒருவர் 3ம் முறை ஜனாதிபதி
வேட்பாளராவதற்கு தடைகள் விதிக்கப் படும்.இதனை ஏலவே,இரு முறை ஆட்சியை சுவைத்த முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்காவினால் ஜனாதிபதிப் பதவியில் இருந்து கொண்டு இதனை செய்திட இயலாது.
எதிர்பார்க்கை
பொது வேட்பாளர் பட்டியலில் உள்ள சோபித தேரர்
தற்போதைய அரசாங்கத்தை எதிர்க்க பிரதான காரணமாக மக்களிடம் முன்
வைத்திருப்பது நிறைவேற்று அதிகாரத்தை தற்போதைய அரசு ஒழிக்க தவறுகின்றது என்பதே
என்பது இங்கே கோடிடத் தக்க முக்கியதோர் விடயமாகும்.
மேலும்,நிறைவேற்று அதிகார ஒழிப்பில் ஜே.வி.பி மிகவும்
கரிசனை காட்டியே வருகிறது.தான் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தினுள் நிறைவேற்று
அதிகார முறையை ஒழிப்பதாகக் கூறிய
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினது
குறிப்பிட்ட காலம் முடிவடைந்து ஒரு வருடம் பூர்த்தி,இரண்டு வருடம் பூர்த்தி என கொழும்பு கோட்டை
புகையிரத நிலையத்துக்கு முன்பாக அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கவிற்கு எதிராக சில காலங்கள்
மக்கள் விடுதலை முன்னணி வருடாந்தம்
பிரசாரம் செய்து வந்தது.அன்றே இப்படி என்றால்.தற்போது நிறைவேற்று அதிகாரத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப் பட்டுள்ள நிலையில்
இக் கொள்கையில் எவ்வாறான உறுதியில்
ஜே.வி.பி இருக்கும் என்பது சொல்லியறிய வேண்டியதில்லை.
முன்னாள் சட்டமா
அதிபர் சரத் என்.சில்வா 3ம் முறை தற்போதைய ஜனாதிபதியினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இட முடியாது என ஆணித் தரமான வாதங்களை முன் வைத்து வருகிறார்.இவரின்,இக் கருத்தைத் தொடர்ந்து ஜே.வி.பி,ஐ.தே,க யும் இவரது கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கருத்துக்களை
பிரஸ்தாபித்து வருகின்றன.தற்போதைய ஜனாதிபதியை எச் சட்டத்தால் 3ம் முறை போட்டி இட இயலாது என கூறுகிறார்களோ
அத்தனை சட்டங்களும் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்காவிற்கும் பொருந்துவதால் மறைமுகமாக முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்காவும் பொது வேட்பாளரிற்கு தகுதியற்றவர் என்பதையே பறை சாட்டுகிறது.
மாதுலவாவே சோபித
தேரர்,சரத் என்.சில்வா போன்ற
நபர்களினதும் ஐ.தே.க,ஜே.வி.பி, போன்ற கட்சிகளினதும் ஆதரவின்றி பொது வேட்பாளராக
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா களமிறங்குவார் என்பது சாத்தியம் அற்ற ஒன்று.
எனினும்,ஜனாதிபதி இனால் வஞ்சிக்கப் பட்ட நீதியரசர் சிராணி
பண்டாரநாயக்க,முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்காவும் இணைந்து சிராணி பண்டாரநாயக்க இனது வழக்குகள்
முடிவடைந்த பின்னர் ஒரு கட்சியை ஸ்தாபிக்கப் போவதாக கதைகள் அடிபடுகிறது.எனவே,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது பொது
வேட்பாளராக இதுவரை எவரினையும் முன் மொழியாது காத்து நிற்பதன் பின் புலம் சிராணி
பண்டாரநாயக்கவை முன் மொழிவதற்காக இருக்கலாம் என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. சிராணி பண்டாரநாயக்க பொது வேட்பாளர் பட்டியலில் ஒருவராக இடம்
பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments