ஆளும்கட்சி அமைச்சர்களிடம் இரகசியக்
காப்பு உறுதிமொழியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
உத்தேசித்துள்ளார்.மீளவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு நிகராக இந்த
உறுதிமொழி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்படும்
தீர்மானங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் கூட்டுப்பொறுப்பு வகிக்க வேண்டுமென
வலியுறுத்தி இரகசியக் காப்பு உறுதிமொழி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
அண்மையில் இந்தியாவில் புதிதாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி,
தனது அமைச்சர்களிடம் இவ்வாறான ஓர் உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவிதமான உறுதிமொழியொன்றை எழுத்து மூலம் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி
தீர்மானித்துள்ளார். எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உறுதிமொழி
குறித்த ஆவணம் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டு, கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட
உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டு வரும் சில
தீர்மானங்களின் இரகசிய தன்மையை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென
வலியுறுத்தப்பட உள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அவ்வாறு
பங்கேற்கத்தவறும் பட்சத்தில் அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு
இணங்க வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பிலான கூட்டுப்
பொறுப்பிலிருந்து எவரும் விடுபட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அளும் கட்சி அமைச்சர்கள் அரசிலிருந்து விலகி ஐதேகவில் இணைந்து
கொள்ளப் போவதாக அண்மையில் ஐதேக பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்திருந்தார். அதனையடுத்து அமைச்சர்கள் யாரேனும் தமது அரசிலிருந்து
விலகிவிடுவார்களோ என்ற அச்சநிலை காரணமாகவே ஜனாதிபதி இந்த முடிவுக்கு
வந்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments