Subscribe Us

header ads

இஸ்லாமிய நெஞ்சங்களே...! சமூகம் எக்கேடு கெட்டாலும்..!!

(Abu Shakeek)

நெஞ்சங்களே...! அல்லாஹ்வுக்கு பயந்தவனாக இந்த கட்டுரையை வாசிப்பதுடன் அமைதியாகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் மனதில் எழுகின்ற விடயங்களை உடன் வெளிப்படுத்தாது, கொஞ்சம் தாமதமாய் இருந்து முன் பின் நன்கு சிந்தித்து தனது கருத்து சுதந்திரத்தை சமூகத்தின் முன் வைப்பதுடன்,  ஒற்றுமையை மையப்படுத்தி தான் விடும் விமர்சனங்கள்,கருத்துக்கள், அறிக்கைகள் அமைந்தால் அதுதான் அல்லஹ்வுக்கு பயந்தவன் என்ற பொருள் இருக்கும் என்று நான் நினைப்பது மற்றுமன்றி யாரும் மறுக்கவும் முடியாது.

தௌஹீத் என்பது ஏகத்துவம் எனப்படும். இறைவனுக்கு மட்டும் அஞ்சி, பயந்து தமது அனைத்து விடயங்களையும் மேற்கொள்பவர்களே தௌஹீத்வாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதை நாம் அறியக்கூடியவர்களாக இருக்கின்றோம். தௌஹீத் என்பது அனைத்து முஸ்லிம் மக்களிடத்திலும் அடிப்படையாக இருக்கின்ற, இருக்கவேண்டியதுமே அன்றி ஒரு தரப்பினருக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால், தற்போது தௌஹீத் அமைப்பு ஒரு தீவிர அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை ஏற்கனவே பல இஸ்லாமிய அமைப்புக்கள் சுட்டிக்காட்டத்தவரவில்லை.ஆனால் எமது பல சகோதரர்கள் இவற்றை காழ்ப்புணர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தவறியமையினாலும், மறுத்ததனாலும், அவர்கள் எனைய அமைப்புக்களை எதிர்த்து பகிரங்கமாக மேடைகளில் முழங்க ஆரம்பித்தனர் என்பது நாடறிந்த உண்மையாகும்.

உலகில் முறையாக இஸ்லாமிய ஆட்சி இருக்குமாக இருந்தால், இன்று எமது சகோதர தௌஹீத் அமைப்பு பெரும் இஸ்லாமிய சட்டப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அவர்கள் இஸ்லாமிய நடைமுரை வரம்பை மிரிய தீவிரவாதிகளே என்று முத்திரை குத்தப்பட்டு சிறைக்கைதிகளாக இருந்திருப்பர் என்பதே பொதுவான  நிலைப்பாடாகும். ஏனெனில் எமது தாய் நாட்டில் இருக்கின்ற இந்த தௌஹீத் சகோதரர்கள் வேறு எந்த நாடுகளிலும் இல்லை என்றே கூறமுடியும். எமது நாட்டில் உணமையிலேயே ஜன நாயகம் இருக்கின்றது. இஸ்லாம் தோன்றிய Saudi Arabia (மக்கா) மற்றும் ஏனைய அரேபிய நாடுகளிலும்கூட எமது நாட்டில் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் போன்று எந்த நாடுகளிலும் சுதந்திரம் வழங்கப்பட்டதாக காணவோ அறியவோ முடியவில்லை. இன்று அறபு நாடுகளில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. அந்த நாடுகளில் இருந்து தான் இந்த இஸ்லாமிய பிரிவினைவாதம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த நாடுகளில் மன்னர் ஆட்சி முறை காணப்படுவதனாலும் கடுமையான சட்டதிட்டங்கள் காணப்படுவதனாலும், தான் நினைத்தவாறு எதனையும் தன் இஷ்டப்படி கரங்களில் தவழவிட்டு ஆடமுடியாது. அவ்வாறு ஆடினால் எவராக இருந்தாலும் அந்த நாட்டு சட்டப்படி தண்டனைக்கு உள்ளாகுவார் என்பதை யாராலும் மறுக்கவோ , தடுக்கவோ முடியாது. எமது நாட்டில் அவ்வாறான சட்டங்கள் இதன்பின் எதிர்காலத்தில் நிலைநாட்டப்படும்.

இஸ்லாம் என்பது சாந்தி மற்றும் சமாதானம் என்று அழைக்கப்படும். இறைவன் இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களை அழகிய முறையில் பெருமைப்படுத்திய சமூகமாக மாற்றியுள்ளான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கும். எந்தவொரு விடயத்தையும் தான் நினைத்தவாறு தன் இஷ்டப்படி செய்ய முடியாது. இஸ்லாம் எளிமையானதே தவிர கஷ்டமானதல்ல “ இலகுபடுத்துங்கள் சிரமப்படுத்தாதீர்கள் ; நற்செய்தி கூறுங்கள் விரன்டோடச் செய்யாதீர்கள்” என்பதாக புஹாரியில் ஹதீஸ் பதிவாகியுள்ளதை நாம் அறிவோம். இறையச்சம் கொண்டவர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது; இலகுவானது. அதனை நாம் நம்வாழ்வில் கடைபிடித்து வாழ்வோமேயானால் இரு உலகிலும் வெற்றியடையலாம்.

 அன்புக்குரிய இஸ்லாமிய தௌஹீத் சகோததரர்களே! தாங்கள் விடும் மேடை முழக்கங்கள் நமது சமூகத்துக்கு இறைவன் சொல்லுகின்ற ஒற்றுமைக்கு உகந்ததா என்பதை மட்டும் நிதானமாக எண்ணிப்பாருங்கள். இஸ்லாத்தில் கட்டுப்படுதல் என்று ஒரு பகுதி இருப்பதை நீங்களும் அறியாத தெரியாதவர்கள் அல்ல. அல்லாஹ்வுக்காக உங்கள் தௌஹீத்வாதிகளை உங்களில் ஒரு தலைமைத்துவத்துக்கு கட்டுப்படக்கூடியவர்களாகவும் சூறா அமைப்பின் மூலம் முடிவுகள் , தீர்மானம் மற்றும் அறிக்கைகள் விடுபவர்களாகவும் இருப்பார்களாக இருந்தால் அது எமது சமூகத்தின் ஒற்றுமையானதும் மற்றும் ஒருமித்த குரலாகவுமே இருக்கும்.

இன்று எமது நாட்டில் அனைத்து முஸ்லிம் சகோததரர்கள் மத்தியிலும் ஒருமித்த குரலுடன் ஒன்று பட வேண்டும் என்ற நல்உள்ளம் கொண்டவர்கள் இருக்கின்றனர். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற நிலைப்பாட்டில் எமது மக்கள் இருப்பதையும் அறிவோம். ஆகவே  நாம் ஒவ்வொரு தனி நபரும் அல்லாஹ்வுக்காக பல தியாகங்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். தியாகம் என்பது ஒன்றை இழப்பதும் விட்டுக்கொடுப்பதுமாகும். அந்த இழப்பு இல்லாமல் எதனையும் எமது சமூகம் சாதித்துவிட முடியாது என்ற அடிப்படையை அறிந்தவர்களாக நாம் செயல்பட்டால் அல்லாஹ்வின் உதவியுடன் நிச்சயம் ஒன்றுபட்டு சாதிக்கலாம்.

 நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கல்ல ‘ இம்மை, மறுமைக்கு பயிர் செய்யும் இடம்” என்பதாக எமது உயிரிலும் மேலான ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவித்திருப்பதையும்  நாம் அறிந்துதான் வைத்திருக்கின்றோம். அப்படியானால் இந்த உலகில் நாம் தக்வாவுடன் விட்டுக்கொடுப்புடன் பல தியாகங்களை செய்து காட்டினால், செய்வதற்கு முன் வந்தால் எமது சமூகம் ஒன்றுபடமாட்டார்களா??? நிச்சயம் ஒன்றுபடுவார்கள்.

பொதுமக்களாகிய நாம் ஒவ்வொரு தனி நபரும் சரியாக முறையாக சிந்தித்து விட்டுக்கொடுத்து தியாகத்துடனும் செயல்பட்டால் எமது அரசியல்வாதிகளை ஒன்றுபடுத்த முடியும்.இன்று எமது நாட்டில் அரசிய்ல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி காய் நகர்த்தும் அரசியல் வியாபாரத்தை ஒழிக்க, பொது மக்களாகிய நாம் அரசியல்வாதிகளை ஏமாற்றும் தந்திரோபாயங்களை மேற்கொண்டு இந்த அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தி, ஒன்றுபடுத்தி காலத்தின் தேவையை மனதில் கொண்டு பொதுமக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். எமது சக்தி என்ன என்பதை உணரச்செய்ய வேண்டும் இல்லையேல் எமது அரசியவாதிகள் பொதுமக்களை ஏமாற்றிகொண்டே இருப்பார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இன்று எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பயங்கரமான சூழ் நிலையில் அரசியல் கட்சிகள் உட்படஅனைத்து அமைப்புக்களும் ஒன்றுபட வேண்டும் என்பதாக குரல் கொடுக்கப்படுவதை காணமுடிகின்றது.

ஆனால் தனது சமூகத்துக்காக தக்வாவுடனும் பகிரங்கமாக விட்டுக்கொடுத்தும் தமது பதவிகளை இராஜினாமா செய்து ஒதுங்கியவர்கள் ஓரம் நின்றவர்கள் யாரும் இல்லையே...??

மாறாக சமூகம் எக்கேடு கெட்டாலும் தமது அரசியல் கௌரவத்துடன் தான் மரணிக்க வேண்டும்; அரச கௌரவத்துடன் தனது உடலை மண்ணறைவரை எடுத்து செல்ல வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுபவர்களாகவே எமது மூத்த அரசியல் தலைவர்களும் இன்னும் பலரும் செயல்பட்டுக்கொண்டு இருப்பதை காணமுடிகிறது.

எமது சமூகத்தில் இவ்வளவு பிரச்சிணைகளும் ஏற்படுவதற்கான பிரதான காரணம் இந்த comment எழுதப்படுவதை குறிப்பிடலாம், comment என்பது கருத்துச் சுதந்திரம், ஜன நாயகம் என்று பேசப்படுவதையும் நாம் அறிகின்றோம்; காண்கிறோம். உண்மையிலே comment என்பது பொதுவாக ஷைதானின் செயல் என்றும் குறிப்பிடலாம். என்பதை இஸ்லாமிய அறிவும் தெளிவும் இருக்கின்ற ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆகவே எமது சகோதரர்கள் இஸ்லாமிய அறிவும் தெளிவும் கொண்டவர்களாக வாழவேண்டுமே தவிர அனைத்து விடயங்களையும் கண்மூடித்தனமாக முன் பின் சிந்திக்காமல் comment அடிக்கும் பழக்கத்திலிருந்து தவிர்ந்துகொள்வது தக்வா உடையவர்களை சாரும்.

இன்று உலகம் சுருங்கிவிட்டது. அனைவரினாலும் தொழிநுட்பம் கையாளப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு தனி நபரையும் ஷைதான் வழிகெடுத்துக்கொண்டிருப்பதை நாம் பரவலாக காணமுடிகின்றது. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பலநேரங்களில் நான் எழுதிய இந்த கட்டுரைக்கும் comment அடிக்க வாய்ப்புக்கள் தாராளம் இருக்கின்றது. உண்மையிலே எனது தவறுகளையும் பிழைகளையும் உணர்த்துவற்கு commentஅடிப்பதில் எந்த பிரச்சிணையும் கிடையாது. அதனை வரவேற்கிறேன். மாறாக ஷைதானின் செயலானcomment வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதை உணர்ந்தவனாக கொமன்ட் கொடுப்பதில் தவறும் கிடையாது.

நாம் பட்டிமன்றங்களை பார்க்கின்றோம். அதனை இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் இல்லையேல் எமது ஈமானுக்கும் தக்வாவுக்கும் எதிரான சிந்தனைகள் தோன்றி எது சரி எது பிழையானது என்ற குழப்பம் ஏற்படும். பட்டிமன்றம் நடத்துகின்றவர்கள் அதற்கான comment விடப்பட்டிருந்தால் அதனையும் comment கொடுத்து தனது பக்கமுள்ள நீதி, அநீதி சரி, பிழை என்ற நடுவரின் நிலையில் சென்று தீர்ப்பளித்திருப்பார்கள். ஆகவே தான் பட்டிமன்றத்துக்கான comment கொடுக்கும் நிலைப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாம் என்பது பல தியாகங்களை  செயல்படுத்திக்காட்டிய ஒரு மார்க்கமாகும். எமது சமூகத்தவர்கள் கோழைகளோ அச்சம் கொண்டவர்களோ அல்ல மாறாக இஸ்லாம் எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறையிலும், உமர் ரழி அவர்களின் வரலாற்றின் நிழலிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு அதனைப் பின்பற்றும் நாம் நம்மளவில் அறிந்த விடயங்களை முறையாக கடைபிடித்து ஒழுக வண்டும் என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

சகோதரர் அசாத் சாலி அவர்கள் சொல்வதைப் போன்று எமது தௌஹீத் சகோதரர்கள் ஞான சார தேரரிடம் மன்னிப்புக்கேட்பதில் தவறும் கிடையாது.

மௌலவி முபாரக் (உலமாக்கட்சி) முழங்குவது போன்று மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் இன்று எமது நாட்டில் நிலவுகின்ற இந்த பிரச்சிணைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இரு தரப்பினரும் சுமுகமான ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு உறுதியான தீர்வினை பெறுவதற்கான வழிவகைகள் நடைபெறுமாக இருந்தால் எமது சகோதர அமைப்பு அதில் முந்திக்கொள்வதில் எந்த தலைகுனிவும் ஏற்படப்போவதில்லை. இது சமூகத்தின் ஒற்றுமைக்கும் எமது நாட்டில் நிலவியிருக்கின்ற பிரச்சிணைகளை சமாதனாமாக தீர்ப்பதற்குமான உபாயமாக இருந்தால் மன்னிப்பு கேட்பதில் அல்லாஹ் எம் அனைவருக்கும் கிருபை செய்வானாக. இந்த உலகில் தவறுகள் செய்யாத யாரும் இருக்க முடியாது. தவறு செய்தால் மட்டும் தான் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றுமில்லை. மாறாக எமது நாட்டின் இனங்களுக்கிடையிலான இன முறுகலை நிவர்த்தி செய்வதற்காக எமது சகோதர தௌஹீத் அமைப்பு முன் வருமேயானால் எமது சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதுதான் என்பதை வரலாறு சொல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் இஸ்லாம் வளர வேண்டும் எமது சிங்கள சகோதரர்களுக்கு அல்லாஹ் நல்ல ஹிதாயத்தை கொடுத்து அருள வேண்டும்.

இன்று எமது நாட்டில் நிலவுகின்ற மத ரீதியான பிரச்சிணைகளுக்கும்  நாமும் ஒரு பங்காளி எனும் கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். எமது சமூகத்திற்குள்ளே ஒருவருக்கொருவர் இஸ்லாம் சொல்லப்பட்டிருக்கின்ற பிரதான விடயமாக அனைவராலும் எந்த கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் அஸ்ஸலாமு அலைகும் வரஹமதுல்லாஹி வபரகாதுகு என்ற அழகிய முன்மாதிரியான பின்பற்றலை கூட சொல்லாது தமது கொள்கை அடிப்படையில் தாம் சார்ந்தவர்களுக்கு மட்டும் சலாம் சொல்லிக்கொள்கின்ற ஒரு கூட்டம் காணப்படுவதை நாம் அனைவரும் அறியாதவர்களாகவா இருக்கிறோம்???

இவர்கள் முஸ்லிம் ஒருவரைப்பார்த்து, காபிர், இணைவைப்பவர் என்ற மனனிலையில் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் காணாதவர்கள் அல்லவே. இப்படிபட்டவர்களை வழிநடாத்திய அமைப்புக்கள் தான், இன்று பௌத்த மத்ததையும் கண்மூடித்தனமாக விமர்சித்ததில் ஏற்பட்ட முடிவுகளையும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கன்றோம். அப்படியாக வழி நாடாத்துகின்ற அமைப்புக்களில் சிலரை சரியாக இனம் கண்ட இன்றைய ஆட்சியாளர் மற்றும் அதற்கு துணை போகின்றவர்களை திரைக்குப்பின்னால் நிறுத்தி அவர்களுக்கு தேவையான பணவசதிகள் கொடுத்து செயல்படுத்திவைத்திருப்பதையும் நிதானமாக சிந்திக்கின்ற புத்தி ஜீவிகள் அறிவாளிகளுக்கு புலணாகாத விடயமுமல்ல இந்த அரசாங்கம் பௌத்த இஸ்லாமிய இன முறுகலை ஏற்படுத்த அதன் அதிதீவிர அமைப்புக்களை கைவசம் வைத்துக்கொண்டே அனைத்து விடய்ங்களையும் மேற்கொள்வதை அவதாணிக்க முடிகின்றது. இஸ்லாம் மனித வாழ்வுக்கான பூரண வழிகாட்டலாகும். இஸ்லாத்தில் விஞ்ஞானம் அரசியல் நாகரீகம் என அடுக்கிக்கொண்டே போகலாம் இவை அனைத்தையும் முறையாக நடைமுறைபடுத்திக்காட்டிய வழிமுறையைதான் நாம் பின்பற்றியவர்களாக இருக்கின்றோம் மாறாக அரசியல் விஞ்ஞானம்  வேறு இஸ்லாம் மார்க்கம் வேறு என்ற வாதம் விவாதம் எமது மக்கள் மத்தியில் காணப்படுகின்றது இது பெறும் தவறாகும். இஸ்லாம் பூரணமான ஒரு வழிகாட்டலே அன்றி இடைநடுவில் விட்டு பூரணப்படுத்தப்படாத மார்க்கம் அல்ல. இஸ்லாத்தில் மனித குலத்திற்கு சகல விடயங்களிலும் முகம் கொடுத்து வாழ்வதற்கான வழிகாட்டல் இருப்பதனால் தான் இன்று முழு உலகிலும் அது தலை நிமிர்ந்து காணப்படுகின்றது. இஸ்லாம் நல்ல அறிவாளிகளுக்கும் சிந்தணையாளர்களுக்கும் இதனை தெளிவுபடுத்தும்.

Post a Comment

0 Comments