Subscribe Us

header ads

‘யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல’; யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி தமிழில் உரை

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானது எனவும், அது சகோதர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மாத்தறை கடற்கரையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முப்பது வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மனவேதனை மற்றும் கஷ்டத்தையே கொடுத்ததாகவும் ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் வாழும், தீவிரவாத போக்குடைய சிலர் நாட்டில் மீண்டும் யுத்த சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும், அதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவன் மற்றும் பாதுகாலவன் என்ற வகையில் அனைத்து மக்களையும் பாதுகாப்பது தமது கடமை எனவும், தவறான பிரசாரம் மூலம் நாட்டை அவமதிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் அனைத்து இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகள் நாசப்படுத்திய பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என மூவினங்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தேசிய கொடியை ஜனாதிபதி ஏற்றி வைத்து யுத்த வெற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இதனையடுத்து 21 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன்  நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 7,000 வீரர்கள் அடங்கி முப்படையினரின் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினர் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments