Subscribe Us

ஊடக சுதந்திரமும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் பாதுகாக்கப்படுவது அவசியம் - ஐ.நா. யுனெஸ்கோ அறிக்கை

பத்திரிகை சுதந்திர தினமானது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் சுதந்திரமான சுயேட்சையான பன்முகப்படுத்தப்பட்ட ஊடகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையாலும் ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பால் (யுனெஸ்கோ) உலக பத்திரிகை தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஊடகவியல் என்பது சுற்றுச் சூழல் சவால்கள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களிலிருந்து  பாலியல் சமத்துவம், இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பல் வரையான பரந்தளவான அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கான களமொன்றை வழங்குகின்றது என மேற்படி இரு அமைப்புக்களாலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 ஊடகவியலாளர்கள் கண்காணிக்கவும் புலனாய்வை மேற்கொள்ளவும் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை கண்டிக்கவும் சுதந்திரத்தை பெற்றிருக்கும்போதே சிறந்த ஆளுகையின் இருப்புநிலை சாத்தியமாகும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஜரினா பொகோவா ஆகியோரால் கூட்டாக கைச்சாத்திடப்பட்டு சானாவின் அக்ரா நகரிலுள்ள ஜி.என்.ஏ. செய்தி முகவர் நிலையத்திடம் புதன்கிழமை கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பல நாடுகளிலுள்ள ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியல் பணிப்பாளர்களும் உண்மையை அறிக்கையிடுவதில் தணிக்கை கைது செய்யப்படுதல்,  தடுத்து வைக்கப்படல் என்பவற்றிலிருந்து அச்சுறுத்தப்படல், தாக்கப்படல் மற்றும் படுகொலை செய்யப்படல் வரையான திட்டவட்டமான தடைகளை எதிர்கொண்டுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments