Subscribe Us

'இலங்கைக்கு கைகொடுத்த அரபு நாடுகளின் ஆதரவு இழக்கப்படும்' ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

இன்று நாட்டில் சட்டமும் ஒழுங்கும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஒரு குழுவினர்
சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் நாடு பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்று அரசை எச்சரிக்க வேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் VI க்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்,

தம்புள்ளையில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒரு பௌத்த குரு முன்னின்று மேற்கொண்டு வருகின்றார். ஏனைய பகுதிகளில் பொலிஸாரின் கடமைகளை வேறோர் குழு செய்ய எத்தனிக்கிறது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் இவ்வாறான மேலாதிக்கம் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இவ்வாறான நிலைமைகள் சர்வதேச ரீதியில் எமது சட்டங்கள் தொடர்பில் பல மோசமான கருத்துகள் உருவாகி விடும் என்பதை அரசு கவனத்திற் கொள்ள வேண்டும். தம்புள்ளையில் ஹைரிய்யா பள்ளிவாசல் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கியமான அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் காணி அமைச்சரும்கூட. என்றாலும் ஒரு விகாராதிபதி பள்ளிவாசலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தம்புள்ளை நகரில் முஸ்லிம்கள் வாழக்கூடாது. தொழுகை நடத்தக் கூடாது என்பதே அவரது நோக்கமாகும். விகாராதிபதி காணி அமைச்சருடன் தனக்குள்ள தனிப்பட்ட  விரோதம் காரணமாக இந்த விடயத்தில் உறுதியாக இருக்கிறார்.

அளுத்கமயில் முஸ்லிம் வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவத்துக்கு முன்பு அங்கு பௌத்த குருமாரே ஆர்ப்பாட்டமொன்றை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இலங்கை காட்டுதர்பார் நடத்தும் மதகுருமார்கள் இருக்கும் நாடு என்பது சர்வதேச ரீதியில் உறுதி செய்யப்பட்டுவிட்டால் எமது நாட்டின் அந்நிய செலவாணி வர்த்தக தொடர்புகள், வெளிநாட்டு முதலீடுகள், உல்லாசத்துறை அனைத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.

சர்வதேச நெருக்கடிகளின்போது இலங்கைக்கு கைகொடுத்த அரபு நாடுகளின் ஆதரவுகூட இழக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, அரசுக்கு சமூகத்தின் உரிமைகளை தெளிவுபடுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன் அரசை எச்சரிக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

தான்தோன்றித்தனமாக சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் குழுக்களின் நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதற்கான அனைத்து முன்னேற் பாடுகளையும் அரசு அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments