Subscribe Us

header ads

ஆச்சரியத்தை உண்டுபண்ணும் கைதிகளின் திறமைகள் (பகுதி 2)

போகம்பறை சிறையில் ஒருநாள் (02)
 
போகம்பறை சிறைச்சாலைக்கு தண்டனை பெற்று வரும் கைதிகள் பலர் பல்வேறு துறைகளில் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், கைப்பணி பொருட்களைப் பார்க்கையில் மனம் வியப்புகொள்கிறது.
சிறைச்சாலையின் கிழக்குப் பகுதி திறந்த வெளியில் சிறைக் கைதிகளால் அமைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
 
ஆம்! வெற்றுப் போத்தல்களை மாத்திரம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது அந்த புத்தர் சிலை. சுமார் இரு வார காலப் பகுதியில் அது செய்து முடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தண்டனை பெற்று சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் பலர் தங்களை அறியாமல், அதாவது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத சிறு பொழுதில் குற்றமிழைத்தவர்கள்.
அவ்வாறானவர்கள் தாம் செய்த குற்றத்தை எண்ணி கவலையுடன் சிறை வாழ்க்கையை கழிக்கிறார்கள். அவர்கள் தனிமையில் தியானம் செய்வதையும் மத வழிபாடுகளில் ஈடுபடுவதையும் விரும்புவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
சிறைச்சாலை வாழ்க்கையை வெறுக்கும் சிலர் மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கென தனியான அறை உண்டு. சிறைச்சாலை வைத்தியசாலையோடு இணைந்ததாக அந்த அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
 
மனநோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் சத்தமாக கூச்சலிடுவதாலும் தங்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்வதாலும் எப்போதும் அந்த அறைக்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பர்.
 
சிறைச்சாலை வைத்தியசாலை ஏனைய அரச வைத்தியசாலைகளைப் போல தனித்தனிப் பிரிவுகளாக அமைந்திருக்கிறது.
 
பல் சிகிச்சைப் பிரிவு, நீரிழிவு நோய் பரிசோதனைப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுடன் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடம் அது.
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கைதிகளுக்கு சமைப்பதற்கென தனியான சமையல் அறை உண்டு. வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
 
சிறையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு சமைப்பதற்கு பெரியதொரு சமையல் பிரிவு இருக்கிறது. அங்கு ஒவ்வொரு நாளும் ஒழுங்கு முறையின் படி கைதிகள் சமையலில் ஈடுபடுவார்கள்.
 
சமையல் வேலைகள் அதிகாலை 2 மணிக்கு ஆரம்பமாகின்றன. சுமார் 200 கைதிகள் தங்களுக்குரிய பணியில் வேகமாக இயங்குவார்கள். காலை 5 மணிக்கு காலை உணவும் தேநீரும் வழங்கப்படும். மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படுவதுடன் இரவு உணவு மாலை 4 மணிக்கு வழங்கப்படும்.
 
கைதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியான துறைசார்ந்த வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குரிய சிறைக்கூடங்கள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மூடப்படுவதால் இரவு உணவு குறித்த நேரத்துக்கு முன்பாகவே கொடுக்கப்படும்.
 
ஒவ்வொரு நாளும் ஒருவேளை உணவில் வாழைக்காய் கறி சமைத்துக் கொடுக்கப்படுவது வழமையாகும். இந்த வழமை சிறைச்சாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இருந்து வருகிறது.
அதுமாத்திரமல்லாமல் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி இறைச்சிக் கறியுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது.
 
 
சிறைச்சாலையில் ஒவ்வொரு மதங்களைப் பின்பற்றும் கைதிகள் இருக்கிறார்கள். அவரவர் மதங்களை வழிபாடு செய்யும் வகையில் தனித்தனியான வழிப்பாட்டுத் தலங்கள் உண்டு. பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகிய ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ளன. 
 
 
ஒவ்வொரு மதங்களுக்கும் உள்ள விசேட நாட்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறுவதுண்டு. 

 
கைதிகள் ஒவ்வொருவரும் தங்களின் சுயதிறனை வெளிப்படுத்தும் முகமாக கைத்தொழில்களில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. மரவேலைப்பாடுகள், இரும்பு வேலைகள், கைப்பணி பொருட்கள் தயாரித்தல், தையல், தும்புத் தொழில் ஆகியன தனித் தனி பிரிசுகளாக செயற்படுத்தப்படுகின்றன.
 
 
கைத்தொழிலில் ஈடுபடும் கைதிகளுக்கு நாளொன்றுக்கு ரூபா 1.50 முதல் ரூபா 2.50 சதம் வரை சம்பளம் வழங்கப்படும். சிறைச்சாலையில் மரவேலைப்பாடுகளுக்கென பாரிய இடவசதிகள் கூடிய கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரச அலுவலகங்களுக்கு தேவையான தளபாடங்கள் இங்கேயே செய்யப்படுகின்றன.
 
1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ருஸ்டன் என்ற இயந்திரம் ஒருநேரத்தில் பல தொழில் முறைகளை செய்யக் கூடிய வகையில் பொறுத்தப்பட்டுள்ளது. இவ்வியந்திரம் 60 குதிரை வலு கொண்டதாகும். சுமார் 15 அடி ஆழத்தில் நிலத்திற்கு கீழ் பொறுத்தப்பட்டுள்ள அந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு உகந்த வகையில் உள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 தளபாட உற்பத்தி பிரிவில் 37 வருடங்களாக மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.தி. கருணாரத்ன என்பவர் எமக்கு தகவல் தருகையில், 
'ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு வேலைகளை ஆரம்பிப்போம். சுமார் 250 பேர் தொழில் ஈடுபடுவார்கள். வேலைகளை மேற்பார்வை செய்ய நான்கு உயர் அதிகாரிகளுடன் ஐந்து இரணடாம் நிலை அதிகாரிகள் பணியாற்றுவர். புதிதாக வரும் கைதிகள் வேலையை பழகும் காலங்களில் சிரமத்தை எதிர்நோக்கினாலும் காலம் செல்ல நிபுணத்துவம் பெற்றவர்களாக மாறிவிடுகின்றனர்" என்றார்.
 
இந்த வேவைத்தளத்தில் நாம் கண்ட முக்கியமான வற்றை மரங்களை இழுக்கும் இழுவை வண்டியை குறிப்பிட்டாக வேண்டும். மாட்டு வண்டியைப் போல இரண்டு பாரிய சில்லுகளை இது கொண்டிருக்கின்றது. 
 

 
மிகப்பராமான, நீளமான மரங்களை இந்த வண்டியில் பின்புறமாக கட்டிவிடுவதுண்டு. அதனை நான்கு அல்லது ஐந்து கைதிகள் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு வருவார்கள். மிகவும் சிரமமான இத் தொழிலை பாரிய குற்றங்களை இழைத்த கைதிகளுக்கு தண்டனையாக வழங்குவதுண்டு. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் இச்சிறைச்சாலை இருந்த காலத்தில் வெகு தூரத்தில் இருந்து மரங்களை கைதிகள் இழுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
 
அதேபோன்று இரும்பு உருக்கும் தொழில் தையல் போன்ற தொழில்களிலும் கைதிகள் ஈடுபடுகின்றனர்.
சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வெளியேறும் போது எந்த துறையில் தேர்ச்சியடைந்து இருக்கிறார்களோ அது சார்ந்த இயந்திரமொன்று சிறைச்சாலை நலன் புரி சங்கத்தினால் வழங்கப்படுகின்றது. அதனைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம்.
 
கைதிகளால் செய்யப்படுகின்ற கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் நலன்புரிச் சங்கத்தினால் சேமிக்கப்படுகின்றது. கைதிகளின் நலனுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்படுகின்றது. சிறைக் கைதிகளின் பிள்ளைகள் அரச பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் போது இந்த நலன்புரிச் சங்கத்தினால் ஒரு தொகை பணம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

 
சிறைக் கைதி ஒருவரை எக்காரணம் கொண்டும் சிறைக்கு வெளியில் செல்ல நிர்வாகம் அனுமதிப்பதில்லை. கைதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் உறவினர்களால் அவர்களுக்குரிய பொலிஸ் நிலையத்தின் ஊடாக சிறைச்சாலைக்கு அறிவிக்கப்படும். உயிரிழந்த தனது உறவினரை கைதி பார்க்க விரும்பினால் எழுத்து மூலமாக சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு கிராமசேவகரின் ஒப்புதல் பெறப்படும். பின்னர் சிறைக் கைதியை குறித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுதல் பாதுகாப்பானதா என்பதை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதி செய்வர்.
 
அதற்கு பிறகு கைதி பொலிஸ் நிலையத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவார். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண பாதுகாப்புடன் குறிப்பிட்ட இடத்துக்கு கைதி அழைத்துச் செல்லப்படுவதுடன் அரை மணி நேரமே அங்கு இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதுண்டு.
 
எனினும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இந்தச் சந்தர்ப்பமும் மறுக்கப்படுகிறது.
 
சிறைச்சாலையில் குற்றச் செயல்கள்
 
தண்டனை பெற்று சிறைச்சாலைக்கு வரும் கைதிகள் பலர் தாம் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி விடுகிறார்கள். ஒரு சிலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளோடு இணைந்து அவர்களுடைய சகவாசத்துடன் மேலும் குற்றம் புரிந்து மீண்டும் சிறைக்கு வருகிறார்கள்.
 
இவ்விடயம் குறித்து இ.எம்.பி.ஏக்கநாயக்க என்ற சிறைச்சாலை அதிகாரி தகவல் கூறுகையில், "கைதிகள் பலர் முரட்டுக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை சமாளிப்பது சவாலான விடயமாகும். அவர்களை கட்டுப்படுத்த முயலும்போது சிறைச்சாலை அதிகாரிகளை தாக்க வருவதும் உண்டு.
 
சிறைக் கைதிகள் தொழில் செய்யும் போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கூட்டமாக இருப்பதை நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் அவர்கள் திட்டங்களை தீட்டுவதுண்டு.
 
அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை நான் இங்கு நினைவு படுத்துகிறேன். கைதிகள் சிலர் இணைந்து இரும்புகளைக் கொண்டு ஏணியொன்றைச் செய்து மறைவான இடத்தில் வைத்துள்ளனர். இரவு நேரத்தில் கூரையை அகற்றி சிறைக் கூடத்துக்கு வெளியில் வந்த அவர்கள் அந்த ஏணியின் ஊடாக மதிலைத் தாவ முற்படுகையில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் அகப்பட்டுவிட்டனர்.
 
உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுன் இச்சம்பவத்தால் இருவர் உயிரிழந்தனர்.
கைதிகளை பார்வையிட வருகை தரும் உறவினர்கள், நண்பர்களால் நாம் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதுண்டு.
 
போதைப்பொருளை சிறைக் கைதிகளுக்கு வழங்கும் நோக்கில் பலர் வருகை தருவார்கள். உறவினர்களால் கொண்டுவரப்படும் பாண், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்தையும் நாம் வெட்டி, பிரித்துப் பார்ப்பதுண்டு.
 
உணவுப் பொதியில் சோற்றுக்குள் மறைத்து வைத்து சிகரட் கொண்டு வந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றையெல்லாம் நாம் அவதானமாகப் பார்க்காவிட்டால் சிறைச்சாலைக்குள்ளேயே பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற வாய்ப்பாகி விடும் என்றார் அவர்.
 
உண்மையில் சிறை வாழ்க்கை அவஸ்தை நிறைந்தது. தெரிந்தோ தெரியாமலோ மனிதர்கள் செய்யும் குற்றங்களால் இந்த அவஸ்தையை அனுபவிக்க நேரிட்டாலும் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் எண்ணங்களை தூய சிந்தனைகளால் மாற்றுவதன் மூலமும் இவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும்.
 
குற்றவாளி என்ற பெயருடன் சிறைத்தண்டனையை அனுபவித்து வெளியேறினாலும் கூட சதா காலமும் அந்தப் பெயர் நிலைத்து நிற்கும் என்பது கண்கூடு. 
 

Post a Comment

0 Comments