எழில்
மிகு நகரம்.

உலர் பிரதேசத்தில் அமைந்திருப்பினும் எல்லையில்லாச்
செல்வங்களும் எண்ணிறைந்த வளங்களும் ஒருங்கே அமையப்பெற்று வந்தாரையும் வாழவைக்கும் இந்
நகரிலே செயற்கை அழகும் செத்துவிடவில்லை.
புதுமையும் பழமையும்கொண்ட கட்டிடங்கள் அன்றும் இன்றும்
இந் நகர்கொண்ட செல்வச் செறிவை எடுத்தியம்புகின்றன.
இயற்கையும் செயற்கையும் பழமையும் புதுமையும் இரண்டறக்
கலந்து அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல பார்ப்போர் மனதைக் கொள்ளைகொள்ளும் எழில்மிகு
நகரம் கற்பிட்டி என்றால் அது மிகையாகாது.

கொழும்பு – புத்தளம்
பாதையில் புத்தளத்திலிருந்து 2 கி.மீ.
துரத்தில் உள்ள பாலாவி சந்தியிலிருந்து ஆரம்பமாகும் 40 கி.மீ. நீளமான கற்பிட்டி பாதை பாலாவி,
உப்பளம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்
கரம்பை மத்திய அலை ஒலிபரப்பு நிலையம், நுரைச்சோலை அனல் மின் நிலையம்,
விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை கடந்து பல கிராமங்களினுடே சென்று
கற்பிட்டி பேருந்து நிலையத்தில் முடிவடையும். கற்பிட்டிக் குடாவின்
பெரும் பகுதி கடலால் சூழப்பட்டிருப்பதால் இப்பாதை தோன்றும் முன் கற்பிட்டி ஒரு தீவாக
கருதப்பட்டு வந்துள்ளதாகவும் பழஞ்சான்றோர்களின் ஏடுகள் சான்றுபகர்கின்றன.
ஜேசுவிட் பாதிரி ஒருவர் 1613 ம் ஆண்டு கற்பிட்டியை பற்றிய தனது கட்டுரையில், ‘கற்பிட்டி
தீவின் நீளம் 24 போர்த்துக்கள் லீட்ஸ் எனவும் அகலம் ஒரு லீட்ஸ்
எனவும் இத்தீவு இலங்கைத் தீவுக்கு மேற்கே ஒரு நாக்கைப் போன்று விரிந்து கிடக்கிறது’
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1882 ல் இலங்கையை தரிசித்த ஹாப்னர் என்ற ஆங்கிலேயரும் கற்பிட்டிக்
குடாவை ஒரு தீவு என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வெழுத்தாளர்களின் கூற்றுக்கள் மேற்கூறிய கருத்தை நன்கு வலியுறுத்துகின்றன. 40 கி.மீ.
நீளம் கொண்ட கற்பிட்டிக் குடாவின் அந்தத்தில் தலை போன்று அமைந்திருக்கும்
கற்பிட்டி பட்டிணம் உண்மையில் இக்குடாவின் தலையாகவே திகழ்கின்றது.
கற்பிட்டி பட்டிணத்தின் எல்லைகளை எடுத்து நோக்குவோமேயானால் கிழக்கே நீண்டு விரிந்துள்ள
இந்து சமுத்திரமும், மேற்கே பரந்துள்ள தாத்தாளித் தரவை எனும் சதுப்பு நிலவெளியும், வடக்கே உப்பளமும், நீரோடையும், தெற்கே கற்பிட்டி குடாக் கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேலும் கற்பிட்டியின் நிலப்பரப்பை எடுத்து நோக்கும் போது பிரதேச செயலகத்தின்
பரிபாலனத்துக்குரிய நிலப்பரப்பு 154.20 சதுர கி.மீ. பரப்புடையது.
கற்பிட்டியின் நிலமும் காலநிலையும் தென்னைச் செய்கைக்கு மிகவும் ஏற்றதாகவும்
புராதன காலம் முதல் தென்னை கற்பிட்டியின் செல்வவளமாக இருந்து வருவதையும் கற்பிட்டி
பட்டிணம் தென்னந்தோப்புகளால் சூழ்ந்திருப்பதையும் காணலாம். தென்னந் தோட்ட சொந்தக்காரர்களே
இங்கு செல்வந்தர்களாக இருந்துள்ளனர். இங்கு கணிசமான அளவு பனை
மரங்களும் காணப்படுகின்றமையால் பண்டைக் காலத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கு பெரும்பாலும்
பனை, தென்னை மரங்களே
உபயோகிக்கப்பட்டன. உஷ்ண வலயத் தாவரங்கயையும் தேடுவாரற்ற கிடந்த
காடுகளையும் கொண்ட இந் நிலப்பரப்பு இப்பொழுது பெருந் தென்னந்தோட்டங்களாக காட்சியளிக்கின்றன.
கற்பிட்டியின்
பெயர் வந்த விதம்
கற்பிட்டிக்கு இப்பெயர் வந்தமைக்கு பற்பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜேசுவிட் பாதிரி தனது கட்டுரையில்
இது ஒரு தீவாக இருப்பதனால் ‘காடினா’ என்று
அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 1865 ஆண்டு வெளியிடப்பட்டுள்ள
றெபிறோ என்பவரின் இலங்கைப் படத்தில் கற்பிட்டி குடா ‘இல்ஹாடிகாடினா’
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1890 ல் வெளியிடப்பட்டுள்ள
ஆங்கிலேய நிர்வாக அறிக்கையில் கற்பிட்டி ‘அரசடி’ என்றும் டெனன்ட் றொபட் ஆகிய ஆங்கிலேய எழுத்தாளர்கள் தமது கட்டுரையில் கற்பிட்டியை
‘கல்பென்ட்டைன்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
புராதன காலத்தில் குதிரைமலை என்ற பகுதியுடன் இணைந்து ஒரே தரைப் பாகமாக கற்பிட்டி
இருந்துள்ளது என்பது தெளிவு. கடற்கோளின் பின்பு அத் தரைப்பாகத்திலிருந்து உயர்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகவே
கற்பிட்டியும் இருந்திருக்கவேண்டும். அதனாலேயே இதற்கு அப்பெயர்
வந்திருக்கலாம் எனவும் சில கருதுகோள்கள் உண்டு. அதுமட்டுமன்றி,
முருகைக் கற்கள் நிறைந்த உயரமான இடமாக இது விளங்கியமையால் ‘கற்பிட்டி’ என்று பெயர் வந்திருக்கலாம். அதற்கு சான்றுகளாக இன்றும் இங்கு ஏராளமான சுண்ணக் கற்களும் முருகைக் கற்களும்
காணப்படுவதாலும் பிரமாண்டமான ஒல்லாந்தர் கோட்டையும் பண்டைக் காலக் கட்டடங்களும் கட்டப்படுவதற்கு
முருகைக் கற்களே பெருமளவு உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் கற்பிட்டி என்று இப்பட்டணத்திற்கு பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும்
கருதப்படுகிறது.
புராதன
கற்பிட்டி நகரம்

அத்துடன் மிகப் பழைய காலத்திற்குரிய தங்க செப்பு நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டமை
கற்பிட்டியின் தொண்மையை வலியுறுத்துகின்றன. துணிகரமுள்ள அராபிய கடலோடிகளின் செல்வமிக்க வணிக நிலையமாக பண்டுதொட்டு
விளங்கிய கற்பிட்டி முன்னொருபோதும் முகங்கொடுக்காத முப்பெரும்வல்லரசுகளின் சவாளுக்குள்ளாகியது.
ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றும் முன் இந்நிலப்பரப்பு நாட்டின்
ஏனைய பாகங்களுடன் தொடர்பற்றிருந்துள்ளது. ஆரம்ப காலங்களில் இப்பிரதேசத்திலிருந்த
வளங்கள் பயன்படுத்தப்படவில்லை. இதன் நிலைய முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கவில்லை.
போக்குவரத்துக்கு உகந்த, பாதையற்ற தீவு போன்ற அமைப்பிலிருந்தமை இதற்கு
காரணமாகும். இந்நிலம் வேளாண்மை செய்வதற்கு ஏற்றதாக இல்லாதிருந்ததும்
மற்றொரு காரணமாகும். ஆதலால் இங்கு வாழ்ந்த மக்கள் சுயேட்சையாகவும்
எவ்வித முன்னேற்றமும் இன்றி கவனிப்பாரற்றும் வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் காலத்திற்கு காலம் பஞ்சத்தினாலும் பசிபட்டிணியினாலும் நோயினாலும் துன்புற்றுள்ளதாக
தெரியவருகிறது.
தொடரும்...............
samsham shafeek - Kalpitiya.
samsham shafeek - Kalpitiya.
0 Comments