சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த புதிய சட்டமூலத்தினால் கிரிக்கெட்
விளையாட்டிற்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
சர்வதேச கிரிக்கெட்
பேரவையின் நிறைவேற்று குழுவில் நிரந்தர உறுப்புரிகளை கொண்ட 10 நாடுகள்
இருக்கின்றன. அதாவது டெஸ்ட் அந்தஸ்தை கொண்ட அணிகள் அனைத்தும் இந்த
நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றன. எனினும், புதிய யோசனையின்
பிரகாரம், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கே
இதற்கு பின்னர் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கவுள்ளன.
அதேபோன்று
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமைத்துவ பொறுப்பும் இந்த மூன்று
நாடுகளுக்கு மாத்திரமே உரித்துடையதாகின்றது. இதனை மிகவும் இலகுவாக கூற
வேண்டுமாயின், உலகில், இனிவரும் காலங்களில் கிரிக்கெட்டு விளையாட்டுக்கான
அதிக அதிகாரங்கள் அனைத்தும் இந்த மூன்று நாடுகளுக்கு மாத்திரமே
உரித்தாகவுள்ளன.
இந்த நிலைமையின் கீழ், புதிய யோசனையின் பிரகாரம்,
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று குழுவில் நிரந்தர உறுப்புரிமை
இல்லாது போகின்ற இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் எதிர்காலம் எவ்வாறு
இருக்கும்?
உத்தேச புதிய சட்டமூலத்தின் பிரகாரம், இந்தியா,
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு
எவ்வித நன்மைகளும் கிடைக்காது என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள்
தலைவர் இஷான் மானி தெரிவிக்கின்றார்.
இந்தியா, இங்கிலாந்து மற்றும்
அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முக்கிய இடத்தை
வகிப்பது மாத்திரமின்றி பேரவையின் நம்பகத்தன்மையை குறைத்து
மதிப்பிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள 13 பக்கங்களை கொண்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
”தாம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும், அதன்
உறுப்பு நாடுகளுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதாக இந்தியா,
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தெரிவிக்கின்றன. அதனால்,
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிக அதிகாரங்களை தமக்கு பெற்றுத் தருமாறு
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அந்த அதிகாரங்களை,
அர்த்தமுள்ளதாய், எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என அவர்கள் தெரிவிக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரங்களை, தம்வசப்படுத்திக் கொள்வதற்காக
மாத்திரமே அவர்கள் திட்டமிடுகின்றனர்.”
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள
யோசனைக்கு இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய
நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள்,
தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் உத்தியோகப்பூர்வமாக
எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சிம்பாப்வே இதுவரை உத்தியோகப்பூர்வமாக எந்தவித
அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த புதிய உத்தேச சட்டமூலத்திற்கு,
பங்களதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, பெரும்பான்மையான இணக்கப்பாட்டை
தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களதேஷ்
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற
வாக்கெடுப்பின் போது 17 மேலதிக வாக்குகளினால் இந்த உத்தேச சட்டமூலம்
அங்கிகரிக்கப்பட்டதாக அந்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்
பேராசையே இந்த தீர்மானத்தை எடுப்பதற்கான காரணம் என, இந்த வாக்கெடுப்பில்
உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்த அந்த சபையின் பணிப்பாளர் அஹமட்
சஜாதுன் அலாம் தெரிவித்துள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.எனினும், அந்த ஊடக தகவல்களை, பங்களதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனைய
கட்டுப்பாட்டு சபைகள் எடுக்கின்ற தீர்மானம் தொடர்பில் தான் கவனம்
செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர்
நஸ்முல் ஹசாத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட்
கட்டுப்பாட்டு சபை மாத்திரமன்றி, இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இதுவரை இந்த
உத்தேச சட்டமூலம் குறித்து எதிர்ப்பையோ அல்லது இணக்கத்தையோ
தெரிவிக்கவில்லை.
எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் விதத்தில், இந்த
சட்டமூலத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு சர்வதேச கிரிக்கெட்
பேரவைக்கு அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன்,
நிதி நடவடிக்கைகள் தொடர்பில் புதிய உத்தேச சட்டமூலத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் சிறந்ததாக ஏற்றுக் கொள்ள முடியும் என இலங்கை
கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments