(நேர்காணல்: வீ.பிரியதர்சன்)
2012– 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த தொழில்
முயற்சியாளருக்கான விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சு. வெங்கட
சரண்ய ஐயருக்கு அண்மையில் கிடைத்தது.
இலத்திரனியல் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு குறுகிய காலத்தில்
சிறந்த தொழில் முயற்சியாளராக முன்னேறிய அவர் வீரகேசரிக்கு
வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்.
கேள்வி:- 2012 மற்றும் 2013ஆம் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான தேசிய விருது கிடைத்தமை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இவ்வாறான பெருமதிப்புக்குரிய விருதுகளை
எனக்கு வழங்கியதையிட்டு Federation of Chamber of Commerce
Srilanka இற்கும் Asian Pacific Entrepreneur
Association அமைப்பினருக்கும் எனது நன்றிகளை
தெரிவித்துக்கொள்வதுடன் இவ் விருதினை பெற்றுக்கொள்ளும் தகுதியை
எனக்கு வழங்கிய சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் எனது
குடும்பத்தினருக்கும் இத்தருணத்தில் நன்றிகளை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் தொழில் முயற்சியாளர் தரத்திலும் Federation of
Chamber of Commerce Srilanka வினால் எனக்கு வழங்கப்பட்டது. அத்துடன்
2013 நடுப்பகுதியில் Asian Pacific Entrepreneur Association இனால்
வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர் எனும் விருது வழங்கப்பட்டது. இது
ஒரு சர்வதேச தரத்திலான விருது ஆகும். அங்கு என்னைத்தவிர வேறு ஒரு
தமிழ் வெற்றியாளர்களையும் காணமுடிவதில்லை. அத்துடன் நான்
மட்டுமே மிகவும் வயது குறைந்த ஒரு தமிழ் வெற்றியாளராகவும்
காணப்பட்டேன். இனிவரும் காலங்களில் இன்னும் பல வெற்றியாளர்களை
காணமுடியும் என நினைக்கின்றேன்.
கேள்வி:- இலத்திரனியல் வர்த்தகத்துறையில் நீங்கள் எவ்வாறு
ஆர்வம் காட்டினீர்கள் அல்லது இத்துறையில் ஈடுபட்டமைக்கான நோக்கம்
பற்றி கூறமுடியுமா?
பதில்:- 2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் Srilanka
Institute of Information Technology இல் Bsc in IT படிக்கும்போது
எனக்கு இலத்திரனியல் வர்த்தகம், இலத்திரனியல் சந்தைப்படுத்தல்
சம்பந்தமாக ஈடுபாடு தோன்றியது. ஆனால் அப்போது இருந்த பொருளாதார
நிலை காரணமாக என்னால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.
அதற்குப் பின் நான் வவுனியா வந்து எனது தமையனார் உதவியுடன் ரூ.43,200
இற்கு Pentium4 ரக மேசைக்கணினி ஒன்றை இலகு தவணை முறையில் கடனாக
வாங்கினேன்.
அதையே எனது ஆரம்ப மூலதனமாக வைத்து எனது படிப்பினை இணைய வழியில்
ஆரம்பித்தேன் கடந்த ஐந்து வருடங்களில் எனது நிறுவனத்தின்
சந்தைப்பெறுமதி 450,000 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன் 40
இற்கும் அதிகமான இலங்கையருக்கும் பல சர்வதேச இணைய
தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கும் பாக்கியம் எனக்கு
கிடைத்தது.
இலங்கையின் அந்நியச்செலாவணி வருமான ஈட்டலில் எனது நிறுவனத்தின்
சிறு பங்களிப்பும் உள்ளது என்பதில் எனக்கும் எனது சக
தொழிலாளர்களிற்கும் மகிழ்ச்சி.
நான் அவ்வளவாக படித்தவன் அல்ல நான் எல்லாவற்றையும் எனது
வாடிக்கையாளர்களிடமும் இலத்திரனியல் கற்கைமுறையின் மூலமுமே
கற்றுக்கொண்டேன். அதிகம் படிக்காத என்னால் இவ்வாறான ஒரு
நிறுவனத்தினை நடத்தி பல பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிகிறது
என்றால் நன்கு படித்த சமூகத்தினால் இன்னும் நிறைய வேலை வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொடுக்க முடியும்.
இந்த வணிகத்தினை இங்கே இருந்து கொண்டு வெளிநாட்டில் உள்ள இணைய
பணியாளர்களை வைத்து நடாத்த முடியும். ஆனால், வேலையற்ற காரணத்தினாலே
சக இளைஞர்கள் தடம்மாறிப்போகின்றார்கள், வீதிகளில்
நிற்கின்றார்கள். முடிந்தவரை எல்லோருக்கும் தகுந்த வேலை கிடைக்கும்
எனில் அதுவே ஒரு கிராமத்தின், நாட்டின் முக்கியமான
பிரச்சினைகளுக்கான தீர்வாகும்.
கேள்வி:- உங்களது நிறுவனத்தின் தன்மை, அதனது செயற்பாடு பற்றி கூறமுடியுமா?
பதில்:- தற்போது மூன்று வெவ்வேறு விதமான
இலத்திரனியல் வணிகம் சம்பந்தமான நிறுவனங்களை நடத்தி வருகின்றேன்.
Extreme Seo Internet Solution என்பது எனது பிரதான நிறுவனம்.
இவ்வணிகம் சம்பந்தமான போதிய அறிவினையும்,அதற்கான
தரப்படுத்தப்பட்டுள்ள சான்றிதழ்களையும் என்னால் பெற்றுக்கொள்ள
முடிந்தது அவற்றில் சில,
1. Certified Seo Consultant
2. Certified Google Analytics Individual
3. Google Adwords Qualified Individual
இதன் மூலம் என்னால் சகபணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும்
விடுமுறை நாட்களில் இணைய கருத்தரங்குகள், தனியார் பயிற்சிகளை
உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கவும் முடிகின்றது.
வியாபாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதியிலான உறவுமுறை. அதை எப்படி
நாம் நேசிக்கின்றோம், அணுகுகின்றோம் என்பதனைப் பொறுத்தே அதனது
வெற்றி, தோல்வி தங்கியுள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புனிதத் தன்மையை பேணுவார்கள். அதே போல்
எனது நிறுவனத்தில் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம்
அளிக்கின்றேன். எனது சகபணியாளர்களின் நலனில் கூடுதலான அக்கறை
செலுத்தி முடிந்தவரை அவர்களுக்கு தகுதியான ஒரு சக
பணியாளனாகவும்,வாடிக்கையாளர்களுக்கும், சமூகத்திற்கும் மிகவும்
பிடித்த ஒரு நிறுவனமாக இந்நிறுவனத்தினை நடத்தி வருகின்றேன்.
2008 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எனக்கு 5 அமெரிக்க டொலருக்கு வேலை தந்த
வாடிக்கையாளர் இப்போது எனது தொடர் வாடிக்கையாளராக இருக்கின்றார்.
எமது நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தேவையினை பரிசீலித்து அதன்
பின்னர் அவர்களுக்கு மிகவும் சரியான ஒரு தீர்வினை சரியான நேரத்தில்
மிகவும் நேர்த்தியான முறையில் வழங்குவதன் மூலம் எம்மால்
வாடிக்கையாளர்களது நன்மதிப்பினை இலகுவில் பெற்றுக் கொள்ள
முடிகின்றது.
கேள்வி:- நீங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை செயற்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்:- கடந்த ஐந்து வருடங்களில் எமது நிறுவனமும்
நானும் எமது வாடிக்கையாளர்களுக்கும், சகபணியாளர்களுக்கும்
பிடித்த மாதிரியாகவே செயற்பாடுகளை நடத்தி வருகின்றோம். இது ஓர்
இலத்திரனியல் வர்த்தகம். இதற்கு நாம் வங்கியிடமோ,
அரசாங்கத்திடமோ உதவியினை எதிர்பார்க்க முடியாது.
அதேபோல் நாம் செல்லும் பாதை அல்லது வீதி மிகவும் பழுது அதை அரசாங்கம்
செய்யட்டும் என்று விட்டு செல்வது எனது வழக்கம் இல்லை. வியாபாரம் என்று
மட்டும் அல்லாது எம்மால் முடிந்தவரை சமூகத்திற்கும்,
இவ்வுலகிற்கும் நல்லது பயக்குமானதான திட்டங்களை முன்னெடுத்து
வருகிறோம். அவற்றில் சிலதான Eco friendly Business and Green Environment
office premise, அத்துடன் சமூகம், கல்வி, கிராமம், நாடு சம்பந்தமான
விழிப்புணர்வு முயற்சி மற்றும் பல. யாழ்ப்பாணத்தில் கிளை
நிறுவனத்திற்கான இடம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் சில
மாதங்களில் அதை ஆரம்பிப்பதாக உள்ளோம்.
இவ்வருட முடிவிற்குள் கொழும்பிலும் மற்றொரு கிளையை
ஆரம்பிக்கவுள்ளோம். எமது நிறுவனத்தை பெரும்பாலான
வாடிக்கையாளர்கள், மீள்விற்பனையாளர்கள் (Customers and Resellers)
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் உள்ளனர். அதனால் எமது நிறுவனத்தை
சட்டபூர்வமான ஐக்கிய அமெரிக்க நிறுவனமாக தரப்படுத்தவுள்ளோம்.
அத்துடன் இவ்வருட இறுதிக்குள்ளே குறைந்தது 70
மாற்றுத்திறனாளிகளுக்கும்இ மேற்படிப்பினை தொடரமுடியாத
நிலையில் உள்ள இளைஞர்கள் இலத்திரனியல் வர்த்தகம், சந்தைப்படுத்தல்
தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றினை வடமாகாணத்தில் நிறுவி அதன் மூலம் பல
பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் முயற்சி ஒன்றை கடந்த ஆண்டு ஜுன்
மாதத்தில் இருந்து ஆரம்பித்துள்ளேன்.
கேள்வி:- நீங்கள் எதிர் கொண்ட சவால்கள் பற்றி கூறமுடியுமா?
பதில்:- மனிதன் ஒவ்வொரு நிமிடமும் சவாலை எதிர்
கொள்கின்றான். நாம் சுவாசிக்கும் மூச்சுக்கூட ஒரு சவால்தான் அதை
நிறுத்தினால் நாம் இறப்பது உறுதி. எமது சுவாசத்தில் கூட சளி அடைப்பு என
பல வருத்தங்கள் வருகின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி தாங்கி
சீர்படுத்துகிறோம் என்பது போல தான் நாம் செய்யும் முயற்சியின் பலன்
உள்ளது.
அதேபோல் என் பாதையிலும் சவாலுக்கு குறைவில்லை. அதை இறைவன் எனக்கு மிகவும் அதிகமாகவே கொடுத்துள்ளான் என்று சொல்லலாம்.
ஆரம்பத்தில் நான் பெற்ற துன்பங்கள் தான் இன்றுவரை என்னுள் இலக்கை நோக்கி செல்ல தூண்டுகிறது.
சராசரி வர்த்தகர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளான பொருளாதாரம்,
சமூகம்,சட்டம் இதுரோகம் என்று விலகிய சக பணியாளர்களும், புறம்
கூறியவர்களும் உண்டு. ஆனால் அதைவிட மேலாக என்னையும், எனது
நிறுவனத்தினையும் நேசிக்கும் சக பணியாளர்களின் உதவியால்
முன்பிருந்ததைவிட பல மடங்கு சிறப்பாக நடத்த முடிகின்றது.
கேள்வி:- உங்களைப் போன்று ஏனைய வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?
பதில்:- தயவுசெய்து வாய்ப்பிற்காக காத்திருக்க
வேண்டாம். கிடைக்கும் வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக்
கொள்ளுங்கள் அல்லது சரியான வாய்ப்பு ஒன்றினை உருவாக்கிக் கொள்ள
முற்படுங்கள். மிகவும் தெளிவான பாதையினை தெரிவு செய்து கொள்ளுங்கள்
அதுவே உங்களது தூரநோக்கு. இதனை அடைய நீண்டகாலம் தேவைப்படும்.
ஆனால் மிகச் சரியான திட்டமிடலை நிறைவேற்றுவதன் (Right planning and
perfect execution strategy) மூலம் அவ்விலக்கை சுலபமாக அடையமுடியும்.
பல வணிகங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ற முறையில் வணிகக்கொள்கைகளை
அமைக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் சகபணியாளர்களுக்கும் தேவையான
விடயங்களை கருத்திற்கொள்வதில்லை. இதுவே ஒரு வர்த்தகத்தின் பிரதான
தோல்வியாகக்கூட அமையலாம்.
சிக்கல்கள், தோல்வி என்பது நீங்கள் அவற்றை அணுகும் விதத்திலேயே உள்ளது.
ஆகவே ஒவ்வொரு முடிவுகளையும்சரியான முறையில் தெரிவு செய்து அவற்றில் வரும்
பிரச்சினைகளை ஒரு பரீட்சையாக அல்லது சவாலாக எடுப்பது நன்று.
முடிந்தவரை ஒரு சக தொழிலாளனாக உங்கள் சக பணியாளர்களுக்கும், சிறந்த ஒரு
வழங்குனராக உங்களது வாடிக்கையாளருக்கும், நல்லதொரு பிரஜையாக உங்கள்
நாட்டிற்கும் இருப்பதன் மூலம் ஒரு சிறந்த முயற்சியாளனாக வரமுடியும்.

0 Comments