எதிர்வரும் மார்ச் மாதம் முதல்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காக தரவுகள் திரட்டும்
பணிகள் இலங்கைத் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 331 நிலையங்களினூடாக
ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார
தெரிவித்தார்.
இதேவேளை மார்ச் மாதத்திலிருந்து
கையினால் எழுதப்பட்ட அடையாள அட்டைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட அடையாள
அட்டைகளே விநியோகிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர் வரலாற்றில் முதற்
தடவையாக கடந்த வருடத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் அடையாள அட்டை
விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆட்பதிவு ஆணையாளர் நாயகம்,
இலத்திரனியல் அடையாள அட்டை
வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டு வருட
இறுதியில் பூர்த்தி செய்யப்படும். இதற்காக 331 இணைப்பு அலுவலகங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இரு முகாமைத்துவ உதவியாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர சர்வதேச தரத்திலான
புகைப்படம் பிடிப்பதற்காக புகைப்படப் பிடிப்பாளர்கள் பதிவு
செய்யப்படவுள்ளனர். பிரதேச செயலாளர்களின் கண்காணிப்புடன் இணைப்பு அலுவலக
பணிகள் முன்னெடுக்கப்படும்.
ஒருவரது தரவு பெறும் போது
முழுக்குடும்பத்தினதும் தரவுகள் திரட்டப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட
சகலரதும் தரவுகள் இதன் போது திரட்ட உள்ளோம். விரல் அடையாளங்களும்
திரட்டப்படும்.
16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர்
அடையாள அட்டை பெறும் போது அதற்காக விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது. வேறு
தரவுகள் வழங்க வேண்டி ஏற்படாது.
மும்மொழிகளிலும் இலத்திரனியல்
அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது. இதனால் திருட்டுத்தனமாக அடையாள அட்டை
பெறுவது தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


0 Comments