Subscribe Us

header ads

போட்டியும் பொறாமையும்

 (By: RR)
 
அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

**********************************************************
பொழிப்புரை : பொறாமையுற்று வளர்ந்தாரும் இல்லை; அஃது இல்லாதவர் ஆக்க மிகுதியில் குறைந்தாரும் இல்லை.


விரிவுரை :
பொறாமையுற்று வளர்ச்சி அடைபவரும் இல்லை. அஃது இல்லாதவர் தமது வளர்ச்சியில் குன்றியதும் இல்லை.

பொறாமை இன்மை வளர்ச்சியைப் பெருக்கும். பொறாமை வளர்ச்சியைக் கெடுக்கும் என்பது உட்பொருள்.

மனிதர்கள் தமது வாழ்வில், தொழிலில், கல்வியில், உடைமையில் என்று அனைத்திலும் பிறரை ஒப்பீடு செய்தே தமது வளர்ச்சியை அளக்கிறார்கள், அடையவும் செய்கிறார்கள். இத்தகைய ஒப்பீடு என்பது போட்டியாக இருக்கும் வரையில் அது வளர்ச்சிக்கு உதவும்; ஆனால் அதே ஒப்பீடு பொறாமை என்று ஆகும் போது வளர்ச்சியைக் கெடுக்கும் என்பதே இங்குள்ள மறை பொருள்.

எனவே முன்னேற விளைபவர்கள் போட்டி மனப்பான்மைக்குப் பதிலாக பொறாமை அடைவதால் கேடே விளையும். எனவே அவர்கள் வளர்ச்சி அடைவதும் இல்லை. போட்டியை மட்டும் சிந்தித்து பொறாமை இன்மையைக் கொண்டவர்கள் முன்னேற்றங்களில் குறைப்படுவதும் இல்லை. அவரது முன்னேற்றங்கள் நேர்மறை எண்ணத்தால் வளர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர குறையாது.

போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுவே. போட்டி மனப்பான்மை என்பது போட்டியாளருக்குக் கெடுதல் எண்ணாமல், செய்யாமல் தன் உழைப்பால் தான் முன்வருதல் என்பதே. மாறாக பொறாமை என்பது போட்டியாளருக்குக் கெடுதல் எண்ணுவதும்; செய்வதும் அதன் மூலம் தான் உயர நினைப்பதும் ஆகும்.

ஓட்டப் பந்தயத்தில் மனத்தைச் செலுத்தி அருகில் ஓடுபவரைக் காட்டிலும் வேகமாக முன்னேற நினைப்பது போட்டி. அவர் வென்றாலும் அதைப் பாடமாய்க் கொள்ளுதல், அவரை வாழ்த்துதல் என்பவை அனைத்தும் நன்னெறிகள். அவர் அடுத்த நிலையில் வென்றினும் கூடப் பாராட்டுதல் என்பது நேர்மறையான நல் ஒழுக்கம்.

மாறாக அவருக்குத் தொந்தரவு கொடுத்தல், காலை இடறுதல், வாரி விடுதல், அன்றில் தடம் மாற்றி இடர் கொடுத்தல், வயதையோ அன்றில் வேறு காரணங்களைக் காட்டிக் குறை சொல்லுதல், அவரைத் தகுதி இழக்க முயற்சித்தல் எனும் செய்கைகளால் அன்றில் எண்ணத்தால் தான் முதன்மை வர நினைத்தல் பொறாமை. அவர் எந்த நிலையில் வென்றினும் அவரது வெற்றியைப் பாராட்டது பகை கொள்ளுதல் என்பது பொறாமையினால் விளையும் தீ நெறியே.

போட்டியாளன் நம்பிக்கையாளன். பிறரின் முன்னேற்றத்தால் இயற்கையாகவே தனக்கும் முன்னேற்றம் வரும் என நம்புபவன். பிறரின் வெற்றியை ஆராய்ந்து பயின்று நல்லவற்றைத் தனது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளுவான். பிறர் வளருவதால் தானும் வளர்கிறோம் என்று நம்புவான். நல் இணக்கத்தோடு முன்னேற்றத்தை மட்டுமே சிந்திப்பான்.

பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். நம்பிக்கை இழப்பான். எனவே பிறரின் நலனில் மனம் புழுங்குவான். தீய வழிகளையும், தீதையுமே எண்ணுவான். எனவே இயற்கையான வளர்ச்சியையும் விடுத்துப் பின் தங்குவான். ஆகையினால் அவனுக்கு முன்னேற்றம் என்பதே இருக்காது.

போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு முன்னேற்றத்தில் குறைவே இருக்காது.

எனவே மனிதர்கள் வாழ்வில் முன்னேற போட்டிகளே வேண்டும். பொறாமைகள் அல்ல.
குறிப்புரை :
பொறாமையால் வளர்ச்சியும் இல்லை; பொறாமை இன்மையால் வளர்ச்சியில் குறைவும் இல்லை.
 

Post a Comment

0 Comments