சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் நாட்டின் முக்கிய பதவிகளில் ஒன்றான மக்கா ஆளுநர் பதவிக்கு தனது மகன் இளவரசர் மிஷாலை நியமித்துள்ளார். நாட்டின் அதிகாரத்தை அடுத்த தலை முறைக்கு கைமாற்றும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக இது பார்க்கப்படுகிறது.
இதுவரையும் மக்கா ஆளுனராக இருந்த காலித் அல் பைஸல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவூதியின் அரச ஊடகம் நேற்று முன்தினம் பதவி மாற்றம் குறித்த மன்னர் ஆணையை வெளியிட்டது.
தனது 90 களில் இருக்கும் மன்னர் அப்துல்லாஹ் நாட்டின் முக்கிய பதவிகளை தனது புதல்வர்களுக்கு மாற்றிவருவது தெளிவாவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக மன்னரின் மகன் மிதப் செயற்படுவதோடு, மற்றொரு மகனான அப்துல் அkஸ் துணை வெளியுறவு அமைச்சராகவும், அடுத்த மகன் துர்கி ரியாத் துணை ஆளுனராகவும் உள்ளனர்.
மக்கா ஆளுநராக நியமிக்கப்பட்ட மிஷால் முன்னர் யெமன் எல்லை மாகாணமான நஜ்ரானின் ஆளுநராக இருந்தார்.
சவூதியின் அதிக சனத்தொகை கொண்ட மக்கா மாகாண நிர்வாகம் இஸ்லாமிய புனிதத் தலத்தின் பாதுகாவலராகவும் ஹஜ் மற்றும் உம்ரா செயற்பாடுகளை முன்னெடுத்தும் வருகிறது.

0 Comments