Subscribe Us

இசைப்பிரியா விவகாரம் உண்மையானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ்

இசைப்பிரியா தொடர்பாக வெளி வந்துள்ள காணொளி விவகாரம் உண்மைத்தன்மை கொண்டதாக இருக்குமானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இசைப்பிரியா விவகாரம் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில் இதுபற்றி அமைச்சரிடம் அபிப்பிராயம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இசைப் பிரியாவின் காணொளி காட்சி சம்பந்தமாக இரு வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அக்காட்சி உண்மைக்குப் புறம்பானதென அரசாங்கமும், அது உண்மையான விவரணமென இன்னுமொரு சாராரும் கூறி வருகின்ற நிலையில் இசைப்பிரியாவின் காணொளிக்காட்சி சம்பந்தமாக ஆய்வு நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். ஆனால், தமிழ் ஊடகங்களில் வெளி வருகின்ற செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு கொண்டதாக காணப்படுகின்றன. தற்போது உரிய விசாரணை கோரப்பட்டிருக்கின்றது. விசாரணையின் பின்பே உண்மை, பொய் தெரியவரும்.

நாங்கள் இதற்கு முன் ஜனாதிபதியுடனும் படைத் தரப்பினருடன் பேசி பல்வேறு விடயங்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டுமென்பதற்காக விசாரணைகளைக் கோரியுள்ளோம்.
காணொளி விடயம் என்பது ஒரு மனித உயிரோடு சம்பந்தப்பட்ட விடயமாகும். யுத்தக்குற்றவாளியாக இருந்தாலும் கைது செய்யப்பட்ட ஒருவர் கொல்லப்படக்கூடாது என்பது மனித நேயத்துக்கு உட்பட்ட விவகாரமாகும்.

இது மனிதாபிமான சட்டம். மனிதாபிமான நடவடிக்கையாகும். அது யாராக இருந்தாலும் ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், சிங்களவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் மனிதநேயமுள்ள மனிதர்களை இந்த விவகாரம் பாதிக்குமென்று நினைக்கின்றேன்.


யுத்தமொன்று வருகின்ற போது புலிகளும் இதைச் செய்திருக்கிறார்கள். கோரமாகவும் கேவலமாகவும் நடத்தியுள்ளனர். அதுவல்ல பிரச்சினை. மனித உயிர் ஒன்று இவ்வாறு நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி இரண்டு கருத்துகள் வெளியிடப்படுகின்றன. ஆகவே அதுபற்றி பூரணமாக விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம். விசாரணையின் போது யார் குற்றவாளியாக காணப்படுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments