Subscribe Us

header ads

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

சொந்த செலவில் சூனியம் வைக்கும் முயற்சியை கடைசித் தறுவாயில் கைவிட்டிருக்கின்றார் கல்முனை மேயராக பதவிவகித்த சிராஸ் மீராசாகிப். 
மேயர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறுபிள்ளைபோல  ஏழெட்டு நாட்களாக அடம்பிடித்துக் கொண்டிருந்த சிராஸ், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளித்திருக்கின்றார்.

“சிராஸிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தே தீருவேன்” என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்த கட்சித் தலைவரும் கைகுலுக்கு, கட்டியணைத்து அனுப்பி வைத்திருக்கின்றார். போதாக்குறைக்கு கூட்டு பத்திரிகையாளர் மாநாடொன்றும்; இனிதே நடைபெற்றிருக்கின்றது.
 
“பதவி விலக முடியாது” என்று அடித்துக் கூறிய சிராஸ், எப்படி தனது கருத்து நிலையிலிருந்து இரவோடிரவாக ‘பெல்டி’ அடித்து இராஜினாமாச் செய்தார் என்ற ஆச்சரியம்தான் நம்முன்னே எழுந்து நிற்கின்றது. அதைவிடவும் கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக வாய்மொழிமூலம் அறிவித்த ஒருவரின் ராஜினாமா கடிதத்தை எப்படி தலைவர் ஹக்கீம் ஏற்றுக் கொண்டார் என்பது காமெடி நிறைந்த கேள்வியாக விரிந்து கிடக்கின்றது.
 
ஆக மொத்தத்தில், இந்த வெட்கம்கெட்ட அரசியல் நகர்வின் முன்னால்… கருத்து முரண்பட்டு, பனிப்போர் நடாத்தி கடைசியில் - ஒட்டுமொத்தமாக மடையர்கள் ஆகிப்போனது சாய்ந்தமருது, கல்முனை மக்களும் அதனையண்டிய பிரதேசங்களில் வாழும் சாதி சனங்களும்தான்.
 
அரசியல்வாதிகள் ஆளுக்காள் அறிக்கை விட்டுக் கொள்வார்கள், தாம்தூம் என குதிப்பார்கள் பின்னர் ஒரு தேனீர்வேளை சந்திப்பில் எல்லாவற்றையும் மறந்து ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவார்கள். இன்னுமொரு படி மேலே சென்று, கூட்டாக வந்து பத்திரிகையாளர்கள் முன் வியாக்கியானமும் கூறுவார்கள். ‘அரசியலில் இதுவெல்லாம் சகஜம் ’; என்ற அடிப்படையில் எல்லா சுத்துமாத்து வேலைகளையும் பித்தலாட்டங்களையும் மக்கள் பொறுத்தருள வேண்டியிருக்கின்றது.
 
வாக்கு மாறுதல்
 
2011இல் நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலின் பிறகு, இரண்டு-இரண்டு வருடங்களுக்கு சுழற்சிமுறையில் மேயர் பதவியை பகிர்வது என்ற இணக்கப்பாடுடனேயே கலாநிதி சிராஸ் மேயரானார். அதே பதவி தனக்கு வேண்டுமென கனவு கண்டு கொண்டிருந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்னும் இரு வருடங்களுக்கு பொறுத்திருக்குமாறு அப்போது கேட்டுக் கொள்ளப்பட்டார். 2013 ஒக்டோபர் மாதம் இறுதி வரைக்கும் அதாவது சிராஸின் பதவிக்காலம் முடிவுறும் வரைக்கும் எல்லாம் சுபமாகவே இருந்தது.
 
உடன்பட்டின் பிரகாரம் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வரும் விதத்தில் பதவி விலக வேண்டுமென சிராஸ் மீராசாகிபிடம் தலைவர் ஹக்கீம் சொன்னார். இச் சந்திப்பில் சில நிமிட இடைவெளியில் செயலாளர் எம்.ரி. ஹசனலியும் இணைந்து கொண்டார். அப்போது மேயர் அளித்த பதில் தொடர்பில் இருவேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும் “மேயர் பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது” என்ற அர்த்தத்தில் அவர் எக் கருத்தையும் கூறவில்லை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
 
ஊருக்கு வந்த பின்னர் ஒருவகையான அரசியல் கிளுகிளுப்பு சிராஸை தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஊர் மக்களை ஒன்றுகூட்டி கருத்தறிந்து கொண்டார். இங்கு கருத்துச் சுதந்திரம் சிலருக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், கடைசியில் ஊரின் ஏகமனதான(?) முடிவு ‘சிராஸே தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருந்தது. இதன் அடிப்படையில் மக்களின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு  “பதவி விலக முடியாது” என மேயர் சிராஸ் அட்டகாசமாக அங்கிருந்து அறிவித்தார்.
 
தான் அப்படிக் கூறவில்லை என்றும் 6 மாத அவகாசமே கேட்டதாகவும் சில தினங்களுக்கு பின்னர் அவர் மறுத்துரைத்திருந்தாலும், பதவி விலகுமாறு ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை என்பது உண்மைதானே. அதுமட்டுமன்றி, எல்லா ஊடகங்களிலும் அவரது கருத்து திருபுபடுத்தப்பட்டிருக்கும் என்பதையும் ஏற்கவியலாது.
 
வெளித்தெரியா காரணிகள்
 
மேயர் பதவியின் சுழற்சி முறை ஆளுகை தொடர்பில் ஏற்பட்ட இந்த இழுபறியானது வெறுமனே வெளித் தெரியும் காரணங்களால் மட்டும் உருவானதல்ல என்பதை இங்கு ஆள ஊடுருவி கவனிக்க வேண்டியுள்ளது.
 
ஒப்பீட்டளவில் குறைந்த மோசடிகளைக் கொண்டதும், சேவையை முன்னிலைப்படுத்தியதுமான ஒரு ஆட்சியை கல்முனை மாநகர சபையில் சிராஸ் மீராசாகிப் நடாத்திக் காட்டினார். மக்களால் இலகுவாக அணுகப்படக் கூடிய ஒருவராகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்லநாள் வரம்வரை காத்துக் கொண்டிராதவராகவும் இருந்தார். ஆதலால் அப்பதவியில் அவர் ஜொலித்தார் என்று கூட சொல்லலாம்.
 
அதுமட்டுமன்றி, ஜனாதிபதியையும் சில அமைச்சர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து நிறைய உதவிகளை கல்முனைக்கு கொண்டுவந்திருக்கின்றார். இதனால் இவரது செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்ததில் தவறுகாண எதுவுமில்லை.
இவ்வாறு ஒரு அரசியல்வாதியாக சிராஸ் முன்னேறுவதை பார்த்த கட்சியின் உறுப்பினர்கள் தமது எதிர்காலம் குறித்து வெகுவாக அஞ்சினர். அவர்களுக்கு வயிற்றைக் கலக்கியது. அதனால் அவரை கட்சியில் செல்வாக்கற்றவராக ஆக்கிவிட அல்லது வெளியில் தள்ளிவிட மனக் கணக்குப் போட்டதாக சாய்ந்தமருது மக்களிடையே ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது.
 
இது ஒருபுறமிருக்க, முஸ்லிம் காங்கிரஸின் தாய்வீடான அம்பாறை மாவட்டத்திலேயே அதன் வாக்காளர்கள் மனவெறுப்பு அடைந்திருக்கின்ற ஒரு சூழலில் பொதுத் தேர்தல் ஒன்று வந்தால் ஓரிரு ஆசனத்தைப் பெறுவதென்றால் கூட தோப்புக்கரணம் அடிக்க வேண்டியிருக்கின்ற இன்றைய நிலையில், குருவை மிஞ்சிய சிஷ்யனாக சிராஸ் வளர்ந்து ஏனையோருக்கு ஆப்பு வைத்து விடுவாரோ என்ற பீதி தலைவருக்கு ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒரு உறையில் இரு வாள்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் ஹக்கீம் கவனமாக இருந்திருப்பார் என்றே சொல்ல முடிகின்றது.
 
குறிப்பாக அமைச்சர் அதாவுல்லாவையும், றிசாட் பதியுதீனையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவையும் அண்மைக்காலங்களில் கல்முனை மேயர் சந்தித்தார். மு.கா. கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக உள்ளுராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது கட்சித் தலைவரை மட்டுமே சந்திக்க வேண்டுமென கோடுகிழிக்க முடியாது. என்றபோதிலும் இவ்வாறான போக்குகள் ஹக்கீமுக்கு மகிழ்ச்சி தருவதனவாக நிச்சயமாக இருந்திருக்காது என்பதுடன் நிறைய சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கும். தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து ஹக்கீம் சாடை மாடையாக சொல்லியுள்ளதிலிருந்து இது புலனாகின்றது.
 
இந்தப் பின்னணியில், அதாவது சிராஸை அதிகாரமற்ற ஒருவராக ஆக்கிவிடும் உள்நோக்குடனேயே அவரை ராஜினாமா செய்ய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் சிராஸ் தரப்பில் நியாயம் கற்பிக்கப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதுதான் நல்ல மக்கள் பிரதிநிதிக்கு அழகு. அந்த அழகை உரிய நேரத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டார் சிராஸ்.
 
சில்லறை அரசியல் மாதிரி
 
மக்களின் அபிமானம் பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சில்லறை அரசியல்வாதிகளைப் போல் சிராஸ் மீரசாகிப் நடந்து கொண்டமையும் அதற்கு சிலர் பின்னிருந்து உசுப்பேற்றிக் கொண்டிருந்ததும் எந்தக் காரணங்களின் அடிப்படையில் நோக்கினாலும் புத்திசாலித்தனமானதல்ல என்பது புத்தியுள்ளோருக்குப் புரியும்.
 
கல்முனை தொகுதியைப் பொறுத்தமட்டில் வேறெந்த கட்சியில் களமிறங்கியிருந்தாலும் அவ்வளவு கெதியில் சிராஸ் மேயராகி இருக்க முடியாது. அதற்கான அரசியல் அனுபவமும் அவரிடம் இருக்கவில்லை. ஆதலால் இந்த தேர்தலில் சிராஸிற்கு விழுந்த வாக்குகள் தனித்து அவருக்கானதுமல்ல, தனியே கட்சிக்குரியதுமல்ல. தனித்து யாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது.
 
கட்சியை வெற்றிபெறச் செய்ய முன்னின்று உழைத்த இருவருக்கு மேயர் பதவியை சுழற்சி அடிப்படையில் வழங்க தலைமை முடிவு செய்த போது அதற்கு இணங்கித்தான் அப் பதவியை சிராஸ் ஏற்றுக் கொண்டார். தான் யார் என்பதை வெளியுலகுக்கு காட்டுவதற்கான வாய்ப்பையும் பெற்றார். இப்படியிருக்கையில், வேறு புறக்காரணங்களின் தூண்டுதல் எதுவுமின்றி கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றியிருக்க வேண்டும்.

அதன்மூலம் அவர், தான் ஏனைய அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுகின்ற ஒரு ஜென்டில்மேன் என்பதை சரியான நேரத்தில் நிரூபித்திருக்க வேண்டும்.
 
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் வரைக்கும் ஒட்டுமொத்த கரையோர மக்கள் மத்தியிலும் சிராஸ் பற்றிய நல்லபிமானம் இருந்தது மாத்திரமன்றி, சிராஸைப் போன்று நிசாம் காரியப்பர் சேவையாற்ற மாட்டார் என்றும் பலர் பேசிக் கொண்டனர்.

எனவே மேயர் பதவியை லாவகமாக ராஜினாமாச் செய்துவிட்டு அடுத்த மாகாண சபை தேர்தலில் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் சிறிய பிரயத்தனங்களுடன் தெரிவாகியிருக்கலாம். ஆனால் அதனை சிராஸ் கணிசமாக கெடுத்துக் கொண்டார். கல்முனை மக்களுக்கு எதிரானவராக சிராஸ் சித்திரிக்கப்பட்டதால் அவ்வூரில் அவருக்கான செல்வாக்கு நிச்சயம் குறைந்திருக்கலாம். அதேபோல் முன்னுக்குப் பின் முரணான நகர்வுகளில் சாய்ந்தமருது மக்களும் சற்றே அதிருப்தி அடைந்திருக்கலாம்.
 
பக்குவமற்ற நகர்வு
 
கொடுத்த வாக்கிற்கு அமைய இராஜினாமா செய்திருந்தால் இந்த தேவையற்ற தாக்கங்கள் ஏற்பட்டிருக்காது. மக்கள் மனதில் சிராஸ் - சிராஸாகவே இருந்திருப்பார். ஆனால் கேட்பார் பேச்சைக்கோட்டோ என்னவோ தான் மேற்கொண்ட பக்குவமற்ற போக்குகளால்; - தனது அரசியல் பயணத்தில் ஓரடி பின்னெடுத்து வைத்து விட்டார் போலவே தெரிகின்றது. இப்படியான ஒரு நிலைமை ஏற்படாது தடுக்க வேண்டுமென விரும்பியிருந்தால் குறைந்தபட்சம் அவர் ஒன்றை செய்திருக்கலாம்.
 
அதாவது – சிராஸின் வெற்றிக்கு சாய்ந்தமருது மக்கள் மாத்திரம் வாக்களிக்கவில்லை. மாறாக கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற அயற்பிரதேச மக்களும் வாக்களித்தனர். எனவே சாய்ந்தமருதில் நடாத்திய கூட்டத்திற்கு எல்லா ஊர் மக்களையும் அழைத்திருக்கலாம்.

அங்கு சிராஸ் மேயராக நீடிக்க வேண்டுமா? ஆன்றேல் நிசாம் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டுமா? என்பதை மக்களிடமே கேட்டறியும் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தியிருக்கலாம். கல்முனை மாநரகத்திற்கு உட்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் சிராஸிற்கு ஆதரவு தெரிவித்திருந்தால்… அது குறித்து தலைமைக்கு அறிவித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். 

அதைவிட்டு விட்டு சொந்த ஊர்க்காரர்களை மட்டும் துணைக்கழைத்துக் கொண்டு,  காட்டமான கருத்துக்களை சிராஸ் தெரிவித்தமைதான் தலைவரை கடுப்பேற்றியிருக்கின்றது.

சாய்ந்தமருது கூட்டத்தில் சிராஸ் என்ன பேசுகின்றார் என்பதை முழுமையாக அறிய தலைவர் பிரயாசைப்பட்டுள்ளார். அவரது பேச்சு முழுமையாக தலைவருக்கு கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள்… “கட்சியின் மேயராக சிராஸ் நீடிக்க முடியாது. ராஜினாமா செய்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஒழுக்காற்று விசாரணைக்குட்படுவதுடன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்” என்ற அறிவிப்பை தலைவர் ஹக்கீம் விடுத்தார். அவ்வாறே, பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் கோரிக்கையையும் நிராகரித்தார். இவ்வாறு நிலைமை மோசமடைந்ததால் தலைவரும் மேயரும் தங்கள் தன்மானத்தை காத்துக் கொள்ளும் தாழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
 
எதிர்பாரா விளைவுகள்
 
எப்படியோ, ஏதோ ஒரு புள்ளியில் தலைவருடன் முரண்பட்டாயிற்று. இனி சிராஸிற்கு முக்கிய பொறுப்புக்கள் எதனையும் மு.கா. தலைமை வழங்குவது கடினம். எனவே முடியுமானவரைக்கும் பதவியை சுகிப்பது என்ற முனைப்பிலேயே கல்முனை மேயர் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் கசிந்துள்ளது. மு.கா.வில் இடமில்லாமல் போனால் அரசாங்கத்துடன் அன்றேல் அரசில் இரண்டறக் கலந்திருக்கின்ற ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சியில் இணைந்து ஆட்சி அதிகாரத்தை பிடிக்கலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம்.
 
ஆனால், தனது முடிவு இதுவரையும் சிந்தித்திராத சில சிக்கல்களை பக்கவிளைவாக ஏற்படுத்தப்போகின்றது என்பதை சிராஸ் பின்னர் உணர்ந்தது போல் தோன்றுகின்றது. அவற்றில் மிக முக்கியமானது, பதவியில் நீடிப்பது பற்றியதாகும்.

அதாவது – அண்மையில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மேயர் ஒருவரால் சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களால் தொடர்ந்து இரு தடவை தோற்கடிக்கப்பட்டால், மேயர் பதவி விலகியவாராக கருதப்படுவார் என்பதே அந்தச் உறுப்புரையின் உள்ளர்த்தம்.
 
இதனை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நீதியமைச்சரான தலைவர் ஹக்கீம், உறுப்பினர்கள் சிராஸ் மீராசாகிபுடன் இணைந்து செயற்பட முடியாது என அறிவித்ததுடன், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து பதவியிழப்பு செய்யுமாறு ரகசிய மந்திராலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகின்றது. எனவே ஆளும் தரப்பு மு.கா. உறுப்பினர்களை நம்ப முடியாது என்ற முடிவுக்கு சிராஸ் வந்தார். சரி, எதைக் கொடுத்தாவது எதிர்த்தரப்பில் இருக்கின்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவை பெறுவோம் என்ற எண்ணத்தில்; முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அறிய முடிகின்றது.
 
ஆனால், அரசியல் என்பது தங்க முட்டையிடும் வாத்து போன்றது. அதில் தனது மந்திர தந்திரங்கள் பலிக்காது போனால் மூக்குடைபட்டு போய்விடுவதுடன் அரசியல் எதிர்காலமும் சூனியமாகிப் போய்விடும் என்ற யதார்த்தத்தை ஏழெட்டு நாட்கள் கழித்து கலாநிதி விளங்கிக் கொண்டிருக்கின்றார்.
 
இரண்டாவது – கல்முனைத் தொகுதியைப் பொறுத்தமட்டில் மு.கா.வை தவிர வெறெந்த கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவதென்பது லேசுபட்ட பாரியமாக இருக்காது என்ற யதார்த்தம் சிராஸிற்கு புரியவைக்கப்பட்டிருக்கும். அதேபோல், இவருக்கு பின்னிருந்து ஆதரவு நல்கிய மு.கா. எம்.பி. தனது ஆதரவை மெல்ல மெல்ல தளர்த்த ஆரம்பித்ததும் மனநிலை மாற்றத்திற்கு துணைக் காரணமாக இருந்திருக்கும்.
 
எனவே கூட்டிக் கழித்துப் பார்க்கின்ற போது, கல்லில் நார் உரிக்கின்ற இம்முயற்சியை விட பதவியை ராஜினாமா செய்வதே பரவாயில்லை என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வரவேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் “இராஜினாமா செய்ய முடியாது” என அறிவித்த மேயர் சிராஸ், பின்னர் “அப்படிச் சொல்லவில்லை பணிகளை நிறைவுசெய்ய 6 மாத கால அவகாசமே கோரினேன், தலைவருக்கு சவால் விடுக்கும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை” என்று ஒவ்வொருநாளும் காட்டம் குறைந்து செல்லும் கருத்துக்களை முன்னுக்குப் பின் முரணாக கூறத் தொடங்கியபோதே விளங்கி விட்டது – அவர் தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வருகின்றார் என்பதும் கடைசியில் எங்கு வந்து நிற்பார் என்பதும்.
 
கடைசி அடைவிடம்
 
கடைசியில் அவர் போய் நின்ற இடம் கொள்ளுப்பிட்டியிலுள்ள றவூப் ஹக்கீமின் வீடு. கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.35 மணியளவில் தலைவரை சந்தித்த சிராஸ் மீராசாகிப், ஒக்டோபர் 31ஆம் திகதியிடப்பட்ட ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதன்பின்னர் எல்லோரும் இணைந்து கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை கொழும்பில் நடாத்தியுள்ளனர்.
 
இப் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய தலைவர் ஹக்கீம், சுயவிருப்பின் பேரில் சிராஸ் மீரசாகிப் கடந்த 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மேயர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறினார். ஒற்றுமை கருதி எடுக்கப்பட்ட இம் முடிவுக்கு நன்றி தெரிவித்தார். கசப்பான சம்பவங்கள் மறக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
 
அதேபோன்று, பதவி வெற்றிடம் ஏற்பட்டு 21 நாட்களுக்குள் தெரிவத்தாட்சி அதிகாரியூடாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டு புதிய மேயரை நியமிக்கும் செயன்முறைகள் மேற்கொள்ளப்படும் அதுவரைக்கும் பதில் மேயராக நிசாம் காரியப்பர் பதவிவகிப்பார் என்று அறிவித்தார். “பிரதி மேயர் சிரஸிற்கு கிடைக்குமா?” என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு தலைவர் அளித்த பதில் “கட்சி அது குறித்து தீர்மானிக்கும்” என்பதாகும்.
 
பாரிய கையிறிழுப்புக்குப் பின்னர் சிராஸ் மீராசாகிபிடம் இருந்த மேயர் பதவி நிசாம் காரியப்பரின் கைக்கு மாறியிருக்கின்றது. இது பொறுப்புள்ள பதவி. மக்களுடன் சகஜமாக பழகுவதில் குறைபாடுள்ளவரும், மக்கள் மயப்படுத்தப்படாத அரசியல் இயங்குதளத்திற்கு சொந்தக்காரர் என மக்களே குறைப்பட்டுக் கொள்கின்ற நிசாம் காரியப்பருக்கு மு.கா. இந்த மேயர் பதவியை வழங்குகின்றது.
 
நிசாம் முன்னுள்ள சவால்
 
சட்டத்தரணி என்பதற்கு அப்பால், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். பதவி விலக மாட்டேன் என சிராஸ் சொல்லிக் கொண்டிருந்த அந்த 8 நாட்களிலும் ஒன்றும்பேசாது இருந்ததன் மூலம் தன்னை பதவி ஆசையற்ற ஒரு நல்லபிள்ளை போல காட்டிக் கொண்டார். ஆனால், மேயரின் கதிரை என்பது அவர் நினைத்திருப்பது போல குளிர்மையானதாக இருக்கப் போவதில்லை.
 
அரசியலுக்கு வந்து 60 நாட்களுக்குள் மேயராக தெரிவு செய்யப்பட்ட சிராஸ் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. அப்படியிருக்கையில், நெடுங்காலமாக பொறுப்புவாய்ந்த பதவிக்காக தலைமையை நச்சரித்துக் கொண்டிருப்பவரும்  25 வருடங்களுக்கும் மேலாக அரசியலோடு ஒட்டி உறவாடி  வருபவருமான நிசாம் எவ்வளவு பணிகளை செய்ய வேண்டும்? அதனை எல்லாம் செய்தாக வேண்டும். மக்களுக்கு நெருக்கமாக  சென்று அவர்களின் பிரச்சினையை கண்டறிந்து உடனடியாக தீர்வுகாண்பது உள்ளிட்ட பல பண்புகளை சிராஸிடம் இருந்து நிசாம் கண்விழித்திருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் பிறகொருக்கால் ஒருபோதும் மக்கள் அவரை தெரிவு செய்யவே  மாட்டார்கள்.
 
மறுபுறத்தில், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர் பதவியிழப்புச் செய்யப்பட்டதால் இன்னும் சில அழுத்தங்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம். அதாகப்பட்டது – சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபை தேவை என்ற கோரிக்கை நெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. சிராஸ் மேயராக பதவி வகித்ததால் அது தொடர்பான அழுத்தங்கள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இப்போது கல்முனைக்கு அப்பதவி கைமாறிவிட்டதால் தமது ஊரை தனியொரு பிரதேச சபையாக பிரித்தெடுத்து சொந்தமாக பிரதேச சபை தவிசாளரை தெரிவு செய்ய சாய்ந்தமருது மக்கள் முனையலாம். இன்னும் சொல்லப்போனால், அதற்கான களநிலை உருவாக்கப்பட்டு விட்டதாகவே கருதுகின்றேன்.
 
அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், இது இரு ஊர்களுக்கு இடையிலான முறுகலை தோற்றுவித்து விடக் கூடாது. கல்முனையின் புதிய மேயர் சாய்ந்தமருதையும் ஏனைய தமிழ், முஸ்லிம் அயற்பிரதேசங்களையும் சரிக்கு சமமாக கவனிக்க வேண்டும். மிக முக்கியமாக, கட்சித் தலைமை சிராஸ் மீராசாகிபை கட்சியில் ஓரங்கட்டுவது கூடவே கூடாது. சற்று காலம் கடந்தாவது சிராஸ் தாமாக பதவியை துறக்க முன்வந்ததை மறந்துவிடக் கூடாது.
 
வேறு எதையாவது மனதில் வைத்துக் கொண்டு, எடக்கு முடக்காக எதையாவது செய்ய மு.கா. தலைமை முயலுமென்றால், தனது கோட்டையில் மு.கா. வீழ்வதே விதியென்றாகும்.

Post a Comment

0 Comments