Subscribe Us

header ads

மத்திய கிழக்கில் சாரதி தொழிலாவது கேட்ட அதிபர்! ஆசிரியர்கள் தொழிலை விட்டுப் போகும் நிலை உருவாவது பெரும் அபாய சமிக்ஞை ஆகும்.

 


சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பாடசாலை அதிபர் எனது தொழில் வங்கி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்து தான் 5 வருட விடுப்பில் மத்திய கிழக்கிற்கு வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்..


அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் ஏன் சிறந்த ஒரு தொழிலை விட்டுவிட்டு செல்ல விரும்புகிறீர்கள் என்ற போது..

சில விபரங்களைக் கூறினார், தனது மாத சம்பளம் 58000 என்றும் மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் எடுத்த கடன் கழிந்து கையில் மிஞ்சும் தொகையால் மூவேளை உண்பதும் பிள்ளைகள் செலவுகளை பார்ப்பதும் பெரும் சவாலாக இருப்பதாக சொன்னார்..

ஸவூதியை விரும்புவதாகவும் அங்கு சென்றால் தன் வாழ்நாள் கனவு ஹஜ் உம்ராவையும் செய்யலாம் என்றும் கூறினார்..

சரி, உங்களிடம் என்ன தொழில் தகைமை இருக்கிறது, நீங்கள் ஒரு சர்வதேச பாடசாலையிலாவது கற்பிக்க அல்லது ஏதாவது நிர்வாக முகாமைத்துவ வேலைகள் தான் பார்க்க வேண்டும் எனது குழுமத்தில் தரப்படும் வெற்றிடங்களை பாருங்கள், தனிப்பட்ட முறையில் அறிய வந்தால் தகவல் தருகிறேன் என்றேன்.

அதற்கு அவர் கெளரவம் பார்க்க முடியாது என்னிடம் சாரதி அனுமதிப் பத்திரமும் இருக்கிறது என்ற போது கண்கலங்கி விட்டது, அன்றைய நிலை வேறாயினும் நானும் ஒரு அதிபர் ஆசிரியை மகனல்லவா?

அங்கு தொழில் சரிப்பட்டு வந்தால் ஓய்வூதியமுள்ள தொழிலையும் விட்டுவிடும் மனநிலையில் இருப்பதாக சொன்ன அவர் அதுவரை மனைவி மக்களுக்கு மூவேளையும் உண்பதற்கும் அடிப்படை செலவுகளுக்கும் எங்கே போவது, நான் ஊர் விட்டு ஊர் வந்து அந்தரப்பட்டுள்ளேன் என்றார்.

கொவிட் 19 இற்கு பின்னரான பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலைவாசி உயர்வு என்பன நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்டுள்ளது.

மற்றுமொரரு ஆசிரியர் இவ்வாறு ஒரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்:

"ஒரு ஆசிரியராக நானும் அதே மனநிலையிலேயே உள்ளேன். Free Visa வில் கத்தார் போய் அங்கே இங்கே அல்லாடி ஒன்றுமே இல்லாமல் திரும்பி வந்தேன். இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வீடு கட்டி வாகனம் வாங்க அல்ல.

என்னுடைய மகனுக்கும் இரண்டு set நல்ல உடுப்பு வாங்கிக் கொடுக்க வேண்டும். 100 முறைக்கு மேல் ஆசைப்பட்டு கேட்ட சைக்கிள் வாங்கிக் கொடுக்க வேண்டும். மாதம் 4 முறையாவது இறைச்சியோடு சோறு சாப்பிட வேண்டும்."

நாட்டு அரசியலில் புரட்சிகரமான பாரிய முறைமை மாற்றம் வராவிடின் அதோகதிதான்..!

நம்பிக்கை இழக்காது வீட்டு தோட்டங்கள், சுய தொழில்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் 17 இலட்சம் அரச துறை ஊழியர்களில் 7 இலட்சம் மேலதிக சுமையாக இருப்பதாகவும் தெரிவிக்கப் படுவதாலும், வேலை இல்லாப் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் பல பரிமாணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது.

இது ஆசிரியர்களோடு தொடர்புபட்ட பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டு மொத்த கல்வித் துறையிலும் உள்ள பல்பரிமாண ஆய்வுகளை வேண்டி நிற்கின்ற ஒரு தேசியப் பிரச்சினையுமாகும்!

என்றாலும் எந்தத் துறைசார்ந்தவர்களும் நாட்டை விட்டு போவது ஆரோக்கியம் இல்லைதான், ஆனால் அவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தொழிலை விட்டுப் போகும் நிலை உருவாவது பெரும் அபாய சமிக்ஞை ஆகும்.

கல்வித் துறையில் குடும்பத் தலைவர்கள் ஆண்கள் வீதம் (45%) குறைந்து செல்வதால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
20.07.2024

Post a Comment

0 Comments