வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது, வாழ்க்கை பற்றி எத்தனை எத்தனை கோட்பாடுகள், சிந்தனைகள், சாஸ்திரங்கள், சித்தாந்தங்கள்.
அல்ஹம்துலில்லாஹ், எத்தகையதொரு கோட்பாட்டு சித்தாந்த தத்துவ வித்துவ சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கித் தவித்து வழிகெட்டுப் போகாது மண்ணையும் விண்ணையும் படைத்து பரிபாலிக்கும் ஏக வல்லோன் எதற்காக வாழ்வையும் மரணத்தையும் படைத்தான் என்ற அறிவும் தெளிவும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒருமுறையே கிடைக்கப்பெறும் வாழ்வு இம்மை மறுமை என்று நீண்டு செல்கிறது, மிகக் குறுகிய இவ்வுலக வாழ்வை நிலையான மறுமை வாழ்விற்கான விளைநிலமாக சோதனைக்களமாகவே நாம் விசுவாசிக்கிறோம்.
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (ஸுரத்துல் முல்க் 67:2)
ஒவ்வொரு ஆன்மாவும் தனித்துவமானது, வெவ்வேறு புறக் கோலங்களில் தராதரங்களில், சந்தர்ப்ப சூழ்நிலைகளில், காரணிகளினால் தனித்தனியாகவே அவை சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே மீளுவோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (ஸுரத்துல் முல்க் 67:2)
“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு,ஸுரத் ஆல இம்ரான் 3:14)
அமானிதமாக தரப்பட்ட இந்த குறுகிய கால வாழ்வை இச்சைகளுடன் போராடி இறைவன் வகுத்த வழிகளில் வாழ் முயற்சிப்பதிலேயே இந்த வாழ்வின் வெற்றி இருக்கிறது.
இச்சைகளையோ நாம் நேசிக்கின்ற உறவுகளையோ, அழிந்துவிடுமோ என்ற அச்சத்துடன் சேகரிக்கின்ற சொத்து சுகங்களையோ எங்கள் உள்ளங்களை ஆளும் “இலாஹ்” ஆக எடுத்துக்கொள்ளாது அத்தனையையும் நிராகரித்த பின்னரே அல்லாஹ்வை நாம் வணக்கத்திற்கும், துதிப்பதற்கும், புகழ்வதற்கும் பிரார்தனை செய்வதற்குமான “இலாஹ்” ஆக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
“அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.” (ஸுரத்துல் ஹதீத் 57:20)
இவ்வுலக வாழ்வில் எம்மோடு எமது பிடரி நாளங்களையும் விடவும் நெருக்கமாக இருக்கின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வே நாளை எமது உடலில் இருந்து ஆன்மா எடுக்கப்பட்ட பின்னரும் எம்முடன் இருக்கப் போகின்றான்.
எமது இச்சைகளும் ஆசாபாசங்களும் எமது பந்த பாசங்களும் நாம் சேகரித்த சொத்து சுகங்களும் பதவி பட்டங்களும் நாம் எடுத்து நடித்த வேடங்களும் என எல்லாமே களையப்பட்டு நாம் அந்த “இலாஹ்” விடம் மீளப்போகின்றோம்.
யா அல்லாஹ் எங்களுக்கு (துன்யா) இவ்வுலக வாழ்விலும் (ஆகிரா) மறு உலக வாழ்விலும் சிறந்ததையே தருவாயாக, நரகத்தின் (அதாஃபு) வேதனைகளில் இருந்து எங்களுக்கு அபயமளிப்பாயாக!
உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் காஸா பலஸ்தீன

மக்களையும், எம்மை எமது பெற்றார் உடன்பிறப்புகள் மனைவிமக்கள் உற்றார் உறவினர் ஆசான்கள், அன்பிற்குரியோர், அறப்பனிகள் புரிவோரையும் மறவாதீர்கள்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments