Subscribe Us

header ads

விமர்சனம் செய்வோரின் ஐந்து குணங்கள்

 


1. முதலாவது குணம் : ஆட்டுக் குணம்

++++++++++++++++

மந்தைக் கூட்டம் ஒன்று முன்னால் குழி இருப்பது விளங்காமல் வேகமாக ஓடி சென்று குழிக்குள் விழுந்ததாம். ஆடுகளால் குழி நிரம்பியதும் கடைசியாக வந்த ஆடு, குழிக்குள் இருந்த ஆடுகளுக்கு மேலால் ஏறிச் சென்று குழியைக் கடந்துவிட்டு குழியில் இருந்த ஆடுகளைப் பார்த்துச் சொன்னதாம் பாருங்கள் நான்தான் சரியாக குழிக்குள் வீழாம வந்துள்ளேன் நான்தான் கெட்டிக் காறன் என்று.

இப்புடித்தான் சில மனிதர்களும். அவர்களுக்கு கடந்த காலம், வரலாறு பற்றிய சரியான பார்வை கிடையாது. தனக்கு முன் சென்றவர்கள், மூத்தவர்களால்தான் தனது பயணப் பாதையின் தடைகள், குழிகள் மூடப்பட்டது என்பதைக் கூட விளங்காமல் நான்தான் சரியாகச் செய்துவிட்டேன் என்ற தோறனையில் அவர்களை விமர்சித்து குறை சொல்லித் திரிவர்.

வளர்த்துவிட்ட பெற்றோரை, கல்லூரியை, அமைப்புக்களை விமர்சிப்பவர்களை இந்த வகைக்குள் அடக்கலாம்.

2. இரண்டாவது குணம் : ஸ்கூட்டிக் குணம்
++++++++++++++++++

பயனிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் வீதியில் சென்றுகொண்டிருந்ததாம். பின்னால் ஸ்கூட்டி இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு பஸ்ஸை முந்திச் சென்று விட்டுச் சொன்னதாம்... என்ன பெரிய பஸ்ஸாக இருந்தாலும் எங்களை விட மோசம்தான், எங்களை விட வேகம் குறைவுதான் என்று.

பஸ்ஸின் இயல்பு, பயணிகளின் எண்ணிக்கை, விபத்து ஏற்பட்டால் அதன் இரு பக்கப் பாதிப்பு என்று எதையும் யோசிக்காது தன்னோடு ஒப்பிட்டு விமர்சிக்கும் ஸ்கூட்டியைப் போன்றுதான் சில மனிதர்களது விமர்சனங்களும். அவர்கள் தனிமனிதனாக அல்லது ஓரிருவராக சேர்ந்து சில பணிகளைச் செய்து விட்டு பழமையான, பெரிய அமைப்புக்களை, நிறுவனங்களை, சங்கங்களை விமர்சிப்பார்கள்.

எவ்வளவு காலம் இருக்கின்றார்கள் இதைச் செய்யவில்லை... எவ்வளவு பெரிய அமைப்பு அவர்களால் நாங்கள் செய்கின்ற இந்த வேலையைக் கூட செய்ய முடியவில்லையே என்றெல்லாம் தங்களோடு ஒப்பிட்டு விமர்சிப்பர். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் என்ன நடந்தாலும் பரவாயில்லை அவர்களைப் போல அடுத்தவர்களும் வேகமாக வர வேண்டும் என்பதுதான். வராத போது விமர்சனத்திற்கு பஞ்சம் இருக்காது.

3. மூன்றாவது குணம் : நாய்க் குணம்
++++++++++++++++

நாய் நன்றியுள்ள மிருகம். யாருக்குத் தெரியுமா அதற்கு சாப்பாடு போட்டு வளர்த்தவர்களுக்கு மட்டும். அவர்கள் எது சொன்னாலும் செய்யும். அது நல்ல மனிதர்கள், மலக்குகள் என்று யாரையும் அறியாது. யாரைக் கண்டாலும் குரைக்கும் கடிக்கப் போகும். தனது எதிர்ப்பை காட்டும்.

இது போன்றுதான் சிலரது விமர்சனங்களும். அவர்கள் எப்போதும் தங்களை ஊட்டி வளர்த்த எஜமான்களுக்கும் அமைப்புகளுக்கும் விசுவாசமாகவே இருப்பார்களே அல்லாமல் உண்மையின் பக்கம் இருக்கமாட்டார்கள். தனது எஜமானர்கள் எது சொன்னாலும் அது சரியென ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாது அதற்கெதிராக சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் பிழை என்றே கூறுவர்.

அவர்கள் கொண்டுள்ள குறுட்டு விசுவாசம் அவர்களை சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக் கூட விடாது. ஆடு நனைவதைக் கண்டு அழும் ஓநாயைப் போல்தான் அடுத்தவன் எது செய்தாலும் விமர்சிப்பதே வேலையாக இருக்கும்.

4. நான்காவது குணம் :         பன்றிக் குணம்
+++++++++++++++++

பன்றி எப்போது ஊத்தையை விரும்பும் மிருகம். அதனை டைல்ஸ் பதித்த வீட்டில் வைத்தாலும் சரி அழகிய தோட்டத்தில் வைத்தாலும் சரி அது ஊத்தையைத் தேடித்தான் செல்லும். ஒன்று அது ஊத்தையைத் தேடிச் செல்லும் அல்லது அது இருக்கும் இடத்தை ஊத்தையாக மாற்றி விடும்.

இது போன்றுதான் சிலர். அவர்களது கண்களுக்கு நல்லதே தெரியாது... எதைச் சொன்னாலும் அதில் எங்கு ஒரு தவறு வருகின்றது என்று காத்திருந்து விமர்சிப்பதே இவர்களது வேலை. அமைப்புக்களிலும், தனிமனிதர்களிடத்திலும் இருக்கின்ற குறைகளையும் தவறுகளையும் கிண்டி நாற வைப்பதையே தனது முதன்மைப் பணியாகச் செய்வர்.

வேண்டாப் பொண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்று சொல்லும் பழமொழியைப் போல் தான் விரும்பாத நபர் எதைச் செய்தாலும் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள்.

5. ஐந்தாவது குணம் : மனிதக் குணம்
+++++++++++++++++++

உண்மையான மனிதக் குணம் என்னவென்றால்... விமர்சனங்களின் போது உண்மை வெல்ல வேண்டும் குறித்த தவறுகள் திருத்தப் பட வேண்டும் என்ற தூய எண்ணம் இருக்கும். அப்புடி ஒரு தூய எண்ணம் இருந்தால் உரிய நபர்களோடு அழகிய முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். பக்கச் சார்பில்லாமல் நடுநிலையாக கருத்துக்களை முன்வைப்பார்.

நல்ல வார்த்தைப் பிரயோகம் அடுத்தவர்களின் இயல்பு மானம் மரியாதை பேணல் என்று அழகிய குணங்கள் அங்கு பிரதிபலிக்கும். எவ்வளவு ஆக்ரோசமாகப் பேசினாலும் கருத்துப் பரிமாறினாலும் விமர்சித்தாலும் இறுதியில் கட்டியணைத்து கைலாகு செய்து விடைபெறுவர். விமர்சனங்கள், கலந்துரையாடல்கள் அவர்களது தனிப்பட்ட உறவைப் பாதிக்காது.

இப்படி நல்ல குணங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் விமர்சனங்கள்தான் உண்மையான மனிதக் குணங்கள். அடுத்தவை அனைத்தும் ஐந்தறிவு ஜீவன்களினதும் ஜடங்களினதும் குணங்கள்.

இதை எல்லாத்தை வாசித்து விட்டு இது தன்னிடம் இருக்கின்றதா என்று பார்க்காமல் அவன் அப்புடி இருக்கின்றான், அவனிடம் இந்த குணம் இருக்கின்றது. அவன்தான் இப்புடிச் செய்பவன் என்று அடுத்தவனுக்கு விரல் நீட்டுவது ஆறாவது குணம் அதைப் பற்றி தனியாகப் பேசுவோம்.

Sajeer Muhaideen
11/05/2023

Post a Comment

0 Comments