நீதித்துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறவும் கூடாது..!
எமது நீதித்துறை குறித்து அதன் சுயாதீனம் குறித்து நாம் பெருமிதம் அடைய வேண்டும்!
18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் 20 அரசியலமைப்பு சீர்திருத்தம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட திருத்தம், மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்தம், பயஙகரவாத தடை சட்டங்கள், அவசரகால பிரகடனங்கள் எது நீதி மன்றங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போதும் பாராளுமன்ற பெரும்பான்மையுடன் அவை சட்டமானாலும் நீதிமன்ற தீர்ப்புகள் புனிதமானவை...
அபிவிருத்தி திட்டங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றதாக, சீனி அரிசி, எரிபொருள், எரிவாயு உரம் இறக்குமதிகளில் மோசடிகள் இடம் பெற்றதாக, மத்தியவங்கி பிணைமுறிகள் விற்பனையில் மோசடிகள் இடம் பெற்றதாக ஒரு ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டவர்கள் ஆட்சி மாற்றத்தின் பின் விடுதலை செய்யப் பட்டாலும் ...
கொலைக் குற்றவாலிகள் பக்காத் திருடர்கள் விடுதலையானாலும் நீதித்துறை புனிதமானதாகையால் அதனை அவமதிக்கக் கூடாது..
பெரிய பெரிய சுரா மீன்கள் தப்பித்தாலும் நெத்திலி மீன்களை தப்பிக்க விடாது தண்டிக்கும் நீதித்துறை சுயாதீனமானது என்பதில் இரண்டு கருத்து இருக்க கூடாது.
நாளைக்கு மக்களது ஜனநாயக உரிமைகள் தொழிற்சங்க போராட்டங்கள், மக்கள் எழுச்சி, கருத்து வெளியிடும் உரிமை என பல விடயங்களை முடக்கும் சட்டமூலம் மக்கள் நலனுக்கானது என நீதிமன்றம் சொன்னாலும் நீதி மன்றத்தை அவமதிக்கக் கூடாது..
அரசியலமைப்பிற்கு முரணாக தேர்தல்களை பிற்போடுகின்றமையை நியாயப் படுத்தினால் அல்லது தேர்தல் ஆணைக்குழு நிதியமைச்சு, அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர் என பல தரப்புகளுக்கும் பந்தை கடத்தி விட்டாலும் சுயாதீனமான நீதித்துறையை அவமதிக்கக் கூடாது.
ஏன் ஆட்சி மாற்றங்களின் பின் சட்டமா அதிபர்களோ நீதிபதிகளோ அதே நீதித் துறையினால் தண்டிக்கப் பட்டாலும் நீதிமன்றங்களை அவமதிக்கக் கூடாது.. அது சுயாதீனமானது!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
30.04.2023
0 Comments