Subscribe Us

header ads

சைனாக்களும் மைனாக்களும் மையம் கொண்டதால் வாழ்வதற்கு கடினமான நாடாக மாறியது இலங்கை (சிராஜ் மஷ்ஹூர்)

 


மின்சாரப் பட்டியலை செலுத்தி முடிப்பதே பெரும் பாடாக இருக்கிறது. பழைய தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட 3 மடங்காக மாறி இருக்கிறது. கண் மண் தெரியாமல் காசு பறிக்கிறார்கள்.


இதற்குக் காரணம் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்றால் பரவாயில்லை. மின்சார சபையிலுள்ள பல பெருச்சாளிகளின் ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் சேர்த்துத்தான் நாம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. நிர்வாக அதிகாரிகளின் நரித்தனமும், அரசியல்வாதிகளின் வங்குரோத்துத் தனத்தின் நிழலும் அதில் படிந்திருக்கின்றன.

செய்தித் தலைப்புகளில் அடிக்கடி விலைகுறைப்பு பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள்தான் குறைந்தபாடில்லை.

1.சாப்பாட்டுச் செலவு

2.மின், நீர், தொலைபேசி பட்டியல் கட்டணங்கள்.

3.பிள்ளைகளின் படிப்புச் செலவுகள்.

4.மருத்துவ, சுகாதார செலவுகள்

5. உள்ளூர் போக்குவரத்து செலவுகள்

6.விரிந்த குடும்ப உறவுகளைக் கவனிப்பது. (இது ஒப்பீட்டளவில் குறைவு).

இவையே முன்னுரிமையில் உள்ளன.

இதைத் தாண்டித்தான் ஏனைய செலவுகள் என்றிருக்கிறது.

செலவு 2,3 மடங்கு கூடியிருக்கிறது. வரவு அதே நிலையில்தான் உள்ளது. சிலபோது முன்னரை விடவும் வரவு சுருங்கி விட்டது.

முன்னர் 50,000 ரூபாய்க்குள் செலவுகளை சமாளித்த ஒரு சராசரி மத்திய தரக் குடும்பத்துக்கு, இப்போது 1 இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

இது அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு மட்டும்தான்.

இந்த வருமானம் பலருக்கு சாத்தியமில்லை.

பல குடும்பங்களின் நிலை இந்தளவுக்குக் கூட இல்லை. பலர் தொழிலை இழந்து கையறு நிலையில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளையும் எப்படிக் கழிப்பது என்பதுதான் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை.

'ஒரு நாள் கழிந்தது' என்ற புதுமைப் பித்தனின் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது.

கடன் கேட்டும் யாசகம் கேட்டும் கை நீட்டுவோர் அதிகரித்து விட்டார்கள்.

ஒருவரில் பலர் தங்கியிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் இலங்கை வாழ்வதற்கு கடினமான நாடாக மாறி விட்டது.

கிட்டிய எதிர்காலத்தில் எந்தப் பெரிய நம்பிக்கையும் தெரியவில்லை.

வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்தது.

சிராஜ் மஷ்ஹூர்
18.05.2023

Post a Comment

0 Comments