Subscribe Us

header ads

சுயத்தை இழந்து வாழ்வைத் தொலைக்கும் ஒரு தலைமுறை!

 


இறைவன் மனிதர்களுக்கு பொதுவான சில அடிப்படைத் தன்மைகளை தந்திருப்பது போல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்துவமான சிறப்பம்சங்களையும் தந்திருக்கின்றான்.


மனிதனின் கண் கை ரேகைகள் போல், நிறமூர்த்தங்கள் போல், குரல் வளங்களில் போல் அறிவிலும் ஆற்றல்களிலும், திறமைகளிலும் தனித்துவங்களை சிறப்பம்சங்களை தந்திருக்கின்றான்.

பொதுவாகவே மனிதன் அடுத்தவர்களை பார்த்து கற்றுக் கொள்வதும் சூழமைவுகளால் தாக்கம் பெறுவதுமென ஒரு இயல்பான வாழ்க்கைச் சக்கரத்தில் போட்டி பொறாமைகள், பிரதி பண்ணல்கள் என வாழ்ந்து வருவதும் யாவரும் அறிந்த உண்மையாகும்.

காலவோட்டத்தில் மனிதனின் இயல்பான நிஜமான வாழ்க்கை வட்டத்திற்கு அப்பால் சினமா திரைக் கதைகள், தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் என கற்பனைக் கதாபாத்திரங்களின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு வாழ்க்கையே சினிமாத்தனமாக மாறும் அளவிற்கு நிஜ வாழ்க்கையை விட்டு தூரமாக ஆரம்பித்தான்.

தற்போது ஒருபடி மேலே சென்று சமூக ஊடகங்களின் ஆளுகைக்குள் அகப்பட்டு பொய்யான பிம்பங்களின் ஆதிக்கங்களினால் பாதிப்படைந்து எங்கோ யார் எவராலோ இயக்கப்படும் வாழ்க்கை வட்டத்திற்குள் பணயக் கைதியாக ஆகி விடுகின்றான்.

ஆக, இலத்திரணியல் ஊடகங்களும், சினமா கதாபாத்திரங்களும், சமூக ஊடகங்களும் மனித நடத்தைகளில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துவைதயும் அவனது ஆசைகள் தேவைகள் தெரிவுகள் பேராசைகள் ஏன் அழுகை சிரிப்பு எல்லாவற்றையும் தீர்மானிக்கின்ற சக்திகளாக மாறிவிட்டன.

உதாரணத்திற்காக கூறுவதாயின் இயல்பான குடும்ப வாழ்க்கையில் மாமி மருமகள் சண்டை, மச்சி மைத்துனி சண்டைகள், சூழ்ச்சிகள் சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக இருந்தாலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களின் கதாபாத்திரங்களில் ஒன்றிப் போய் அவர்களோடு ஆத்திரமடைந்து கோபமடைந்து நிம்மதி தொலைத்து சுகர் பிரஷரை ஏற்றிக் கொண்டு ஹார்ட் அட்டாக் வரை சென்று விடுபவராகளும் இருக்கிறார்கள்.

அதேபோன்று குழந்தைகள் சிறுவர்கள் கார்டூன் கதாபாத்திரங்களாக மாறுவதும் இன்டர்நெட் விளையாட்டு கதாபாத்திரங்களாக மாறுவதும் பபுஜீ போன்ற தீவிரமான உளவியல் கோளாறுகளை ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் இன்று சர்வசாதாரண வாழ்வொழங்காக ஆகிவருகிறது.

இது மிகவும் பரந்த பரப்பை உடைய ஒரு தலைப்பாகும், சுருங்கக் கூறின் மனித வர்க்கம் கார்பரேட் கம்பனிகளின் அடிமைகளாக ரிமோட்களால் கருவிகளால் ஸ்கிரீன்களால் இயக்கப்பட்டு வருவதே கசப்பான உண்மையாகும்.

மனிதன் சுயத்தை இழந்து போலி மாயைகளுக்குள் சிக்கி பணயக் கைதி போல் வாழும் செயற்கையான வாழ்க்கைச் சக்ரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.

இந்நிலையிலிருந்து விடுதலையும் விமோசனமும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தேவைப்படுகிறது, புதிய பாதை, புதிய பயணம், புதிய இலக்குகளுடன் நாம் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது, எமது ஆன்மீக பலமும் பண்பாட்டு பயிற்சிகளும் எம்மை வழிநடாத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சன்மார்க்க, சிவில் தலைமைகள், பாடசாலைகள், மத நிறுவனங்கள், அமைப்புக்கள், மஸ்ஜிதுகள், மிம்பர்கள் என சகல தரப்புக்களும் யுகத்தின் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
25.04.2023 

Post a Comment

0 Comments