உவகையுடன் கொண்டாடப்படும் உன்னத ஈகைத் திருநாள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரு மாத காலமாக பகற் காலங்களில் பசித்திருந்தும் இரவு வேளைகளில் விழித்திருந்தும் இறை வழிபாட்டில், இறை வணக்கத்தில் ஈடுபட்டு ரமழான் மாத முடிவில் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொன்னான வேளையிது. ‘ஈத் முபாரக்’.
ரமழானின் சிறப்பைப் பற்றி இறைவன் குறிப்பிடும் பொழுது, இம்மாதம் பூத்துக் குலுங்கும் புண்ணியங்கள் நிறைந்த வளமான மாதம், மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடிய திருமறை இறக்கப்பட்ட புனித மாதம், மற்றும் மனித உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஏழை, - பணக்காரன், உயர்வு - தாழ்வு, போன்ற வித்தியாசமற்ற பொறுமையின் மாதம் என்றெல்லாம் கூறுகின்றான்.
‘நோன்பு எனக்குரியது, நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.
புனித ரமழான் எமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆத்மாவுக்கும் சிறந்த பயிற்சிகளை வழங்கியது. அப்பாசறையிலே நாம் பெற்ற பயிற்சி எமது வாழ்நாள் முழுவதும் நீடித்து மணம் பரப்ப வேண்டும்.
ஒரு மாத கால நோன்பை நிறைவேற்றி, பண்பாட்டுப் பயிற்சி பெற்று பாவக்கறை போக்கி ஆன்மீக பரிசுத்தம் அடைந்த நெஞ்சங்கள் அனைத்தும் அந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டும் ஒரு வாய்ப்பினை இத்திருநாள் வழங்குகின்றது.
பாக்கியம் மிக்க ரமழானின் முதற் பகுதியில் அல்லாஹ் தன் அருளை தன் அடியார்கள் மீது சொரிந்து தனது அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தினான். ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பை விடவும் எழுபது மடங்கு அன்புடையவன் என்பதை எமக்கு நினைவூட்டினான். அவனது அன்பு மழையில் நனைந்து நாம் உளம் உருகினோம். உளம் பூரித்தோம்.
நாமும் எமது அன்பை வெளிப்படுத்தி பிறருக்கு உதவினோம், உபசரித்தோம். இந்த நற்குணம் காலமெல்லாம் எம்மில் நிலைத்து மணம் பரப்ப வேண்டும் என்பதே ரமழானின் எதிர்பார்ப்பாகும். ‘பூமியிலுள்ளோருக்கு அன்பு காட்டுங்கள், அல்லாஹ் உங்களுக்கு அன்பு காட்டுவான்’ என்ற எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாக்கை இங்கு நாம் நினைத்துப் பாாக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல, வாய்பேச முடியாத எண்ணற்ற ஜீவன்கள் எம்மைச் சுற்றி வாழ்கின்றன. அப்படைப்பினங்களிடத்திலும் அன்பு காட்டி நேசித்து போசிக்க வேண்டுமென்ற உயரிய நற்குணத்தை புனித ரமழான் எமக்கு வழங்கிவிட்டு செல்கிறது.
ஈதுல் பித்ர் என்றால் என்ன, அந்த நாளிலே நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பன பற்றியெல்லாம் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்குக் காட்டித் தந்திருக்கிறார்கள். அவற்றை ஹதீஸ் கிரந்தங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.
அவற்றை அறிந்து சரியான முறையிலே நாங்கள் கடைப்பிடிக்கின்றபோதுதான் அல்லாஹ்வின் அருளை சம்பாதித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பதை விடவும் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம். இலகுவாக அடைந்து கொள்ளக் கூடிய நன்மைகளையெல்லாம் கோட்டைவிட்டு விட்டு கைசேதப்பட்டவர்களாகி விடுவோம்.
நோன்புப் பெருநாளின் சிறப்பம்சங்களைப் பார்க்கின்ற போது, ஏனைய வணக்க வழிபாடுகளைப் போல இதுவும் ஒரு வணக்க வழிபாடு என்பதை மறந்து விடக் கூடாது.
புனித ஈத் பெருநாள் அன்று அதிகமாக தக்பீர் சொல்லிக் கொள்வது சிறப்பானது. ‘உங்கள் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்திக் கொள்ளுங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவரகள் நவின்றுள்ளார்கள்.
தொழுகையை நிறைவேற்ற மகிழ்ச்சியுடன் செல்லும் நாம் பணிவுடன் செல்வது மிகச் சிறந்தது. ஏனெனில் புனிதமான இத்தினத்தில் கருணைமிகு அல்லாஹ் அவனது அமரர்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து பெருநாள் தொழுகைக்கு செல்கின்ற நல்லடியார்களுக்கு வாழ்த்துக் கூறுமாறு பணிக்கின்றான்.
புனித பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிவதும் நபி வழியாகும். பெருநாள் தினத்தில் அழகிய புத்தாடை அணியும்படியும் வாசனை பூசிக் கொள்ளும்படியும் நபி (ஸல்) அவர்கள் எம்மைத் தூண்டியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘ஈதுல் பித்ர்’ பெருநாள் தொழுகைக்காக செல்வதற்குமுன் பேரீச்சம்பழம் ஒன்றைச் சாப்பிட்டு விட்டுச் செல்வதும் சுன்னத்தாகும். அது மட்டுமன்றி, தொழுகைக்கு இயலுமானவரை நடையாக செல்வதும் தொழுகை முடிவடைந்தவுடன் உறவினர்களைச் சந்தித்து ‘ஈத் முபாரக்’ வாழ்த்துக் கூறி ஸலாம் சொல்லிக் கொள்வதும் உறவினர்களின் அடக்கஸ்தலங்களுக்கு சென்று அவர்களை தரிசிப்பதும் சுன்னத்தான விடயங்களாகும்.
பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜமாஅத் தொழுகை, ஜூம்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல், தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
மேலும் தொழுகைக்காக பள்ளிக்குச் செல்கின்ற போது ஒரு வழியாலும், தொழுது விட்டு வீட்டுக்கு வருகின்ற போது வேறொரு வழியாலும் வருவது நபி(ஸல்) அவர்களது வழக்கமாகும். இதில் பல விடயங்கள் பொதிந்திருந்தாலும், இந்தச் சந்தர்ப்பத்தில், அதிகமானவர்களை சந்திக்கவும் அவர்களுக்கு ஸலாம் சொல்லவும் வாய்ப்பாக அமையும்் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஹதீஸ் அடிப்படையி்ல் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, மாற்றுவழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதன் மூலம் நபி வழியை நாமும் பின்பற்றினோம் என்ற அல்லாஹ்வின் உவகையைப் பெற்றவராவோம்.
நோன்புப் பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதல் சாப்பிடுவார்கள்.
அதாவது, நோன்பப் பெருநாள் தொழுகைக்காக செல்லுகின்ற போது, ஏதாவது சாப்பட்டுவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதுவே நபிவழியாகவும் இருந்திருக்கின்றது.
இவற்றை விடுத்து ஒரு மாதகாலம் நோன்பிருந்து இறைகட்டளைக்கு அடிபணிந்து செயற்பட்ட நாம் இஸ்லாம் கூறும் விழுமிய பண்புகளுக்கு புறம்பாக களியாட்டங்களிலும் வீண்விரயங்களிலும் ஈடுபட்டு எமது இபாதத்தில் நாம் பெற்ற பயன்களை, நற்பேறுகளைப் பாழாக்கிக் கொள்பவர்களாக ஆகிவிடக் கூடாது. பெருநாள் இன்பமாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே. எனினும் விலக்கப்பட்டவைகள் ஆகுமாக்கப்படும் நாளோ அல்லது ஹறாமாக்கப்பட்டவைகள் ஹலாலாக்கப்படும் நாளோ இதுவல்ல என்பதை ஒவ்வொரு இஸ்லாமியனும் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு சுன்னத்தான கடமை ‘ஸகாத்துல் பித்ர்’ ஆகும். பித்ரா என்பது நமது நாட்டின் பிரதான உணவுத் தானியமாக விளங்கும் அரிசியில் வழங்கப்படுவது பொருத்தம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கொத்து அல்லது இரண்டரைக் கிலோ அரிசி வீதம் வழங்கப்பட வேண்டும். குடும்பத்தலைவர் தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர்களுக்கும் இதனைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். நாம் வாழும் ஊருக்குள்ளே பித்ராவைக் கொடுப்பதே சிறப்பானது. பித்ராவைப் பெறுபவர் மிகமிக ஏழையாக இருக்க வேண்டும்.
இந்த நன்நாளில் நாம் சந்தோசமாக இருப்பது போலவே மற்றவர்களையும் மகிழ்விக்க நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும்.
புனித ரமழான் மாதம் எமக்கு பொறுமையையும் அமைதியையும் தந்தது. பசி, தாகத்தை இறைவனுக்காக பொறுத்துக் கொண்டோம். நோன்பு காலத்தில் உடல், உள, ஆசைகளையும் அடக்கி, மனோ இச்சைகளையும் அடக்கினோம். இவ்வாறான பல்வேறு நற்பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் ஒரு மாதகால நோன்பு பயிற்சிப்பாசறையில் பயின்று கொண்டோம். ஈகைத் திருநாளுடன் பயிற்சிப்பாசறையிலிருந்து வெளியே வந்துவிட்டோம். புனித நோன்பு தந்த பயிற்சி, நற்பண்புகள் காலமெல்லாம் எம்மில் மலர்ந்து பிரகாசித்தல் வேண்டும்.
எனவே ரமழான் காலத்தில் நாம் செய்த நல் அமல்களின் மூலம் பெற்ற நற்பயிற்சியைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதுதான் நாம் செய்த நல்லமல்கள் அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு அடையாளமாகும். மேலும் அல்லாஹ் எக்காலமும் நிலைத்திருப்பவன்.
குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம்தான் அல்லாஹ் இருக்கிறான், அக்காலத்தில் மாத்திரம் நாம் அமல் செய்தால் போதும் என்றெண்ணி, ரமழானோடு ஆகிரத்திற்கான நமது நல் முயற்சிகளை நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்தும் இம்முயற்சிகளில் ஈடுபட்டு நமது இறுதி மூச்சு வரை அல்லாஹ்வுக்கும் அவனது தூதராகிய எங்கள் தலைவர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும் நெருக்கமுள்ள நல்லடியார்களாக மாறுவதற்கு இந்நாளில் வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக.
ரமழானில் நோன்பு நோற்று அரிய பல நன்மைகளைப் பெற்ற நாம் நபிவழியில் ஈகைத்திருநாளைக் கொண்டாடி இறை திருப்தியையும் அருளையும் ஈருலகப்பேறுகளையும் நன்மைகளையும் பெறுவோமாக!
‘ஈத் முபாரக் !
கற்பிட்டியின் குரலின் நிர்வாகத்தினர்
0 Comments